Tuesday, May 9, 2023

Monday, September 5, 2022

நேஹா பாடல்கள் (சூப்பர் சிங்கர் ஜூனியர் 8)

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 சீசன் டிசம்பர் 18, 2021 ல் ஆரம்பித்து ஜூன் 26, 2022 ல் முடிவடைந்தது. இதுவரை நடந்த 8 சீசனில் இந்த சீசன் போட்டியாளர்கள் மிகவும் திறமைசாலிகள். முக்கியமாக நேஹா, கிரிசாங், ட்ரினிட்டா மற்றும் ரிஹானா ஆகிய நான்கு பெரும் தொழில்முறை பாடகர்கள் போல் பாடினார்கள். இதனால் இந்த 8 வது சீசனின் தரம் மிக உயர்வாக இருந்தது.  நடுவர்களின் கருத்துகள் ஒவ்வொரு முறையும் பாடும் இந்த 4 குழந்தைகளை பார்த்து நீங்கள் இப்போதே ஸ்டுடியோவில் போய் பாடல் பதிவு பண்ணலாம் என்றும் மேலும் உலகநாடுகளில் இசை கச்சேரி பண்ணலாம் என்றும் புகழ்ந்தார்கள். இந்த நான்கு பேர் தான் அதிகமுறை பொன்னான குரலுக்கு சொந்தக்காரர் மற்றும் சிறந்த பாடகர் போன்ற பட்டத்தை ஒவ்வொரு வாரமும் பெற்றார்கள்.

இவர்களில் நேஹா பாடிய பாடல்கள் அவ்வளவு இனிமையாக இருந்தது. இவர் வருங்காலத்தில் ஷ்ரேயா கோஷல் மாதிரி மிக புகழ்பெறுவார் என்று நடுவர்களே பலமுறை சொல்லியிருக்கிறார்கள். நேஹா நல்ல ஆரோக்கியத்தையும், ஆயுளையும் பெற்று மிகப்பெரிய புகழ் பெற வேண்டும். 

நேஹா இந்த போட்டியில் பாடிய பாடல்கள் தொகுக்கப்பட்டு அட்டவணையாக கொடுக்கப்பட்டுள்ளது.


பொன்னான குரல் - Golden Voice of the week 
சிறந்த பாடகர் - Best Performer 
சிறப்பு மகிழ்விப்பாளர் - Best Entertainer 


நன்றி: விஜய் டிவி; HULU 

Friday, July 29, 2022

சூப்பர் சிங்கர் ஜூனியர் 8

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். 2021-22 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 போட்டிக்கு தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக நாடுகளில் வசிக்கும் 8 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் போட்டியில் கலந்து கொண்டார்கள். அவர்களில் இருந்து 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 போட்டியில் பங்கு பெற்றார்கள். இந்த நிகழ்ச்சிக்கு திரு சங்கர் மஹாதேவன், திருமதி கல்பனா ஒரு அணிக்கு தலைவர்களாகவும் (டான் தாதா அணி), மற்றொரு அணிக்கு திருமதி சித்ரா, திரு சரண் தலைவர்களாகவும் (ரௌடி பேபி அணி) இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை திரு மா கா பா ஆனந்த், திருமதி பிரியங்கா தொகுத்து வழங்கினார்கள் (திருமதி மைனா முதல் 8 வாரங்களுக்கு மா கா பா ஆனந்துடன் தொகுத்து வழங்கினார்).

இந்த இரண்டு அணிகளும் குழந்தைகளை தங்கள் அணிக்கு தேர்ந்தெடுத்த நிகழ்வு மிகவும் சுவாசியமாக இருந்தது. சிறந்த முறையில் பாடும் குழந்தைகளை தங்கள் அணிக்கு  கொண்டு வருவதற்கு பள்ளியில் மணி அடிப்பது போல் முதலில் சென்று யார் மணியை அடிக்கிறார்களோ அந்த அணிக்கு தேர்வானார்கள். இந்த முறையில் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு அணிக்கும் நான்கு சந்தர்ப்பங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. மீதமிருக்கும் போட்டியாளர்கள் அவரவர் விருப்படி எதாவது ஒரு அணியில் சேர்ந்து கொண்டார்கள். இவ்வாறாக அணிக்கு 10 போட்டியாளர்கள் வீதம் பிரிந்து, அணிக்கு ஒருத்தொருத்தர் நேருக்கு நேராக பாடல் பாடி மோதிக் கொண்டார்கள். போட்டியாளர்களில் தீபன் நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே பாடினார். இவர் சினிமா பாடலை பாடாதவர். மோசஸ் மிகச்சிறந்த புல்லாங்குழல் வித்துவான். சினிமா பாடல்களையும் சிறப்பாக பாடுவார். போட்டியாளர்களிலே ஆத்யா தான் வயதில் மிகக்குறைந்தவர். 6 வயதுதான் ஆகிறது, ஆனால் அனைவருக்கும் கடினமான போட்டியை கொடுத்தார்.

இந்த போட்டியில் சுவாரஸ்யமாக பல விதமான சுற்றுகளை போட்டியாளர்கள் எதிர்கொண்டார்கள். நாட்டுப்புறப்பாடல்கள், தெய்வீகப்பாடல்கள், நடன சுற்று பாடல்கள், நடிகர்கள் விஜய், அஜீத், ரஜினி, கமல் படப்பாடல்கள், பிடித்தமானவர்களுக்கு சமர்ப்பிக்கும் பாடல்கள், A R ரகுமான் பாடல்கள், இளையராஜா பாடல்கள் என்று வித விதமான சுற்றுகள். மேலும் பண்டிகை காலங்களில் மிகவும் சிறப்பான பாடல் நிகழ்ச்சிகள் கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அனைத்திற்கும் மேலாக கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்தின் விளம்பர நிகழ்ச்சியும், A R ரகுமான் அவர்களின் மூப்பில்லா மொழி தமிழ் பாடல் அறிமுக நிகழ்ச்சியும் மறக்க முடியாதது. 

போட்டியாளர்கள் 20 பேரிலிருந்து ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களில் குறைந்த மதிப்பெண் பெறுபவர்கள் ஒவ்வொரு அணியிலிருந்தும் நியமனம் செய்யப்பட்டு மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள். அந்த இரண்டு பேருக்கும் மக்களிடம் உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்கப்படும். அதில் யார் அதிக ஓட்டுகள் வாங்குகிறார்களோ அவர்கள் அடுத்த சுற்றுக்கு போவார்கள். மற்றவர் போட்டியில் இருந்து வெளியேறிவிடுவார். இவ்வாறாக 20 பேரிலிருந்து முதல் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த சுற்று மாபெரும் நிகழ்வாக நடத்தப்பட்டது. 

இந்த 10 பேரிலிருந்து 7 பேர் அடுத்த கட்டத்திற்கு தேர்வானார்கள். இந்த தடவை  புதிதாக ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மிகவும் நன்றாக பாடக்கூடியவர்கள் ஏதோ ஒரு பிழையினால் வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் அழைத்து (8 பேர்) பாடுவதற்கு வாய்ப்பு தரப்பட்டது (Wild Card Contestants). அதிலிருந்து ஒரே ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு போனார். அவ்வாறு தேர்தெடுக்கப்பட்டவர் அபுதாபியில் இருந்து கலந்து கொண்ட அபினா ஆவார். 

ஏற்கனவே தேர்வாகியிருந்த 7 பேர் மற்றும் சிறப்பு வாய்ப்பில் தேர்வான ஒருவர் என மொத்தம் 8 பேர் அடுத்த சுற்றுக்கு தயாரானார்கள். இவர்களில் இருந்து ஒருவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு தேர்வானார். அந்த வெற்றி பெற்ற நபர் ட்ரினிடா, பெங்களூரில் இருந்து வந்தவர். மீதமுள்ள 7 பேரில் 5 பேர் அரையிறுதி சுற்றுக்கு தேர்வானார்கள். 5 பேரில் இருந்து 4 பேர் இறுதிசுற்றுக்கு தேர்வாகி, ஆக மொத்தம் 5 பேர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாபெரும் இறுதி சுற்றுக்கு தேர்வானார்கள். 


ஜூன் 26 ஆம் தேதி மக்கள் முன்னிலையில் (உள்ளரங்கில்) மாபெரும் இறுதி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் நடுவர்களின் மதிப்பெண் மற்றும் மக்களின் ஓட்டுகள் எண்ணிக்கை அடிப்படையில் பட்டத்தை வெல்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டியில் கிரிஷாங் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 பட்டத்தை வென்று 60 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் பெற்றார். இரண்டாவதாக ரிஹானாவும், மூன்றாவதாக நேஹாவும் வெற்றிபெற்றார்கள். ட்ரினிடா மற்றும் அபினா முறையே 4 மற்றும் 5 வது இடத்தை பிடித்தார்கள். 


இறுதிச்சுற்றில் கிரிஷாங் மற்றும் நேஹா இருவருக்கும் தான் கடினமான போட்டி இருந்தது. நடுவர்கள் மட்டும் தேர்ந்தெடுத்து இருந்தால் நேஹா இரண்டாவது இடத்தை பிடித்திருப்பார். இவர்தான் இந்த வருடம் நடந்த  போட்டிகளில் அதிகமுறை சிறந்த குரலுக்கான பரிசை வென்றவர். மக்கள் ஓட்டு எண்ணிக்கையில் ரிஹானா இரண்டாவது இடத்தை பிடித்து விட்டார். இவர் பார்வையாளர்களை தன் பாடலில், நடன அசைவில், கவர்ச்சி குரலில் அனைவரையும் மெய்மறக்க செய்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துபவர், மிகச்சிறந்த  திறமைசாலி.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

நன்றி: விஜய் டிவி 

Wednesday, May 26, 2021

ரெம்டெசிவிர் (Remdesivir)


இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தற்சமயம் ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்துக்காக மக்கள் அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள், காரணம் கொரோனா இரண்டாம் அலை, இந்தியா முழுவதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இரண்டாம் அலையில் உருமாற்றம் அடைந்த கோவிட்-19 (COVID-19) வைரஸ் மிக வேகமாக பரவி நிறைய மக்களுக்கு தொற்றை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதன்மூலம் மக்களின் இறப்பு விகிதமும் அதிகமாக தென்படுகிறது. 

சில நபர்களுக்கு இந்நோய் தீவிரமாக தாக்கி அவர்களின் உடல்நிலையை அதிகம் பாதிப்புக்குள்ளாக்கி மருத்துவமனையில் சேர்க்கும் நிலையை உண்டுபண்ணுகிறது. அந்த சமயத்தில் அந்நோயாளிகளை காப்பாற்ற பிராணவாயு செலுத்தி, ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்தையும் கொடுத்து சிலரை காப்பாற்றுகிறார்கள். இதனால் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவோரிடம் அங்கிருக்கும் மருத்துவர்கள் இந்த மருந்தை வாங்கி வரச்சொல்கிறார்கள். அதுபோல் அரசு மருத்துவமனையிலும் இந்த மருந்து தட்டுப்பாடு இருப்பதால் வெளியில் உள்ள மருந்துக்கடையில் தான் வாங்க சொல்கிறார்கள். ஆகையால் ஒரே நேரத்தில் நிறைய மக்கள் இந்த மருந்தை வாங்குவதனால் இப்பொழுது மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

உண்மையில் இந்த மருந்து கோவிட்-19 (COVID-19) வைரஸ் நோயுக்குத்தான் கண்டுப்பிடிக்கப்பட்டதா? இல்லை வேற நோயை குணப்படுத்த தயாரிக்கப்பட்டதா என்பதை இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சி வரலாற்றை பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கோவிட்-19 (COVID-19) தாக்கம் உலகம் முழுவதும் இருப்பதால் மருத்துவ உலகம் இந்த நோயை உண்டுபண்ணும் வைரஸின் மூலக்கூறுகளை ஆராய்ந்து அதனை எப்படி கட்டுப்படுத்தலாம் என்று ஆராய்ச்சி செய்தது. அந்த ஆராய்ச்சியில் இதன் மரபணு கூறுகள் 79.5 சதவீதம் சார்ஸ்-கோவி-1 (SARS-COV-1; Severe Acute Respiratory Syndrome-Corona Virus-1) என்ற வைரஸின் மூலக்கூறுகளை ஒத்து இருந்தது மேலும் இதன் புரதக்கூறுகள் (Amino Acids Sequence) 94.6 சதவீதம் ஒத்துப்போயிருந்தது. சார்ஸ்-கோவி-1 வைரஸ் 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது, அது தீவிர நோய் பரவலை (Outbreak) ஏற்படுத்தி ஆசியக்கண்டத்தை ஆட்டிப்படைத்தது. அதுவும் கோவிட்-19 மாதிரி நுரையீரலை தாக்கி பெரிய சுவாசக்கோளாறு பிரச்னையை ஏற்படுத்தி உயிரை கொன்றது.

அப்போது அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் (Center for Disease Control and Prevention, CDC), கனடாவில் உள்ள தேசிய நுண்ணுரியல் ஆய்வகமும் (National Microbiology Laboratory, NML) சேர்ந்து ஆராய்ச்சி செய்து சார்ஸ்-கோவி-1 வைரஸின் மரபணு கூறுகளை (Genome) ஏப்ரல் 2003 ல் கண்டுப்பிடித்து இவ்வுலகிற்கு அறிவித்தது. 

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இதே மாதிரி சவூதி அரேபியாவில் பெரும் தொற்று ஏற்பட்டு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா என்று 27 நாடுகளுக்கு பரவியது. அதுவும் இதே மாதிரி நோய் அறிகுறிகளை தான் கொண்டிருந்தது. அதற்கு மெர்ஸ்-கோவி (MERS-COV; Middle East Respiratory Syndrome-Corona Virus) வைரஸ் என்றழைக்கப்பட்டது.

2013 ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய ஆப்பிரிக்காவில் புதுவித வைரஸ் நோய் பரவியது. அது மனிதர்களுக்கு கடுமையான உயிரை கொல்லும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தியது. இந்த வைரஸின் பெயர் எபோலா (Ebola) வைரஸ் (Zaire Ebolavirus). இதுவும் தீவிரமாக பல நாடுகளுக்கு பரவியது.

2019 ல் ஏற்பட்ட வைரஸின் தாக்கம் சார்ஸ்-கோவி-1 நோயை ஒத்து இருந்ததாலும் அதன் புரதக்கூறுகள் 94.6 சதவீதம் ஒத்துப்போனதாலும் இந்த வைரஸூக்கு சார்ஸ்-கோவி-2 (SARS-COV-2; Severe Acute Respiratory Syndrome-Corona Virus-2) என்று பெயரிடப்பட்டது. COVID-19 என்பது கொரோனா வைரஸ் நோய் (Corona Virus Disease)-2019 என்பதின் சுருக்கமாகும்.

அடுத்தடுத்து உலக நாடுகள் இந்த கொரோனா வைரஸ் நோய்களுக்கு உள்ளாவதால் இதை கட்டுப்படுத்த மருத்துவ உலகம் தீவிர ஆராய்ச்சியில் இறங்கியது. அதன் பயனாக மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. சில மருந்துகள் இன்னும் ஆராய்ச்சி (Phase-2 or Phase-3) நிலையில் தான் இருக்கின்றன. அந்த மாதிரி ஆராய்ச்சி நிலையில் இருக்கும் ஒரு மருந்து தான் ரெம்டெசிவிர் (Remdesivir) ஆகும்.

பொதுவாக ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் ஒரு மருந்தை இன்னொரு நோயுக்கு அல்லது புதிதாக உருவான நோயுக்கு பயன்படுத்துவதை மறுபயன்பாடு (Repurposing) என்று அழைப்பார்கள். உதாரணமாக தலிடோமைடு (Phthalidomide) என்ற மருந்து (Drug) பெண்களின் கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை (Morning sickness) தடுப்பதற்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. அந்த மருந்தை உட்கொண்டவர்களின் குழந்தைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கை கால் வளர்ச்சி இன்றி பிறந்தன. அதற்கு போக்கோமிலியா (Phocomelia) என்று பெயர். அதன்பிறகு அந்த மருந்தை தடை செய்தார்கள்.


இதே மருந்து பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு இப்பொழுது தொழுநோயுக்கும் (Leprosy) மற்றும் புற்றுநோயுக்கும் (Multiple myeloma) சில முன்னெச்சரிக்கையுடன் பரிந்துரைக்கப்படுகிறது. அதுமாதிரி ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்தும் முதன்முதலில் எபோலா (Ebola) வைரஸ் நோயை குணமாக்குவதற்காக க்ளீயாட் சயின்ஸஸ் (Gilead Sciences) என்ற மருந்து கம்பெனியால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த மருந்து எதிர்பார்த்த செயல்திறனை (Efficacy) பெற்றிருக்கவில்லை என்று தரக்கட்டுப்பாட்டு துறையால் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. 

அதேசமயம் இந்த மருந்து சார்ஸ்-கோவி-1 மற்றும் மெர்ஸ்-கோவி வைரஸ் நோய்களுக்கு எதிராக ஆய்வுக்கூடிய (In vitro) முறையிலும், உயிருள்ள சிறிய விலங்குகளிலும் (In vivo) பரிசோதிக்கப்பட்ட போது உறுதியளிக்கும் வகையில் முடிவுகள் கிடைத்தன. மேலும் இந்த மருந்து இன்னும் 3 ஆவது கட்ட (Phase-3) பரிசோதனையில் தான் உள்ளது. 

ரெம்டெசிவிர் மருந்து நியூக்ளியோசைடு (Nucleoside) தடுப்பான் (Inhibitors) வகையை சேர்ந்ததாகும். இந்த வகை மருந்துகள் ஏற்கனவே புற்றுநோயை குணப்படுத்தவும் மற்றும் வைரஸினால் ஏற்படும் தொற்று நோய்களை (HIV, HBV, HCV, HSV, CMV, VZV) குணப்படுத்தவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகள் எயிட்ஸ் (AIDS) மற்றும் ஹெபடைடிஸ் பி (Hepatitis B) நோய்களை குணப்படுத்த உதவுகிறது.  

 


கொரோன வைரஸ் என்பது நேர்மறையான தனித்த இழை RNA [(+) single strand RNA (+ssRNA)] வகையை சேர்ந்ததாகும். இது நமது உடலில் மூக்கு வழியாகவோ அல்லது வாய் மூலமாகவோ உட்புகுகிறது. அதன் பிறகு இதிலுள்ள முள் (spike) போன்ற புரதம் (Protein) நம் உடலில் உள்ள ACE 2 (Angiotensin Converting Enzyme 2) ஏற்பி (Receptor) உடன் ஒட்டிக்கொண்டு நம்முடைய செல்லுக்குள் (Cell) செல்கிறது. அப்புறம் எண்டோசோம் (Endosome) க்கு இடமாற்றம் (Translocated) பெற்று அங்குள்ள புரோட்டியேஸ் (Protease enzyme) நொதி மூலம் முள் புரதம் (Spike protein) பிளவு (Cleave) ஏற்பட்டு வைரஸின் மரபணு (Virus genome) வெளியேறி பாலிப்ரோட்டின்ஸ் (Polyproteins, PP1a & PP1b) ஆக மாறுகிறது. இந்த பாலிப்ரோட்டின்ஸ், RdRp (RNA dependent RNA polymerase) நொதி (Enzyme) மூலம் புது வைரல் மரபணுவாக (Viral genome) பிரதிபலிக்கிறது (Replication). பிறகு நம் செல்லில் உள்ள எண்டோபிளாஸ்மிக் ரெட்டிகுலம் (Endoplasmic reticulum) மூலம் உருவாகும் முள் புரதத்தையும் (Spike protein) மற்றும் கட்டமைப்புக்கான (Structural) மற்ற புரதங்களையும் (proteins) சேர்த்து புது வைரஸாக செல்லில் (Cell) இருந்து வெளியேறுகிறது (exocytosis). இவ்வாறு கொரோனா வைரஸ் நம் உடலுக்குள் சென்று புது வைரஸாக மாற 6 படிநிலைகளை கடந்து பெருகுகிறது (Multiplication).  


இந்த 6 படிநிலைகளில் ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து 4ஆம் படிநிலையான RdRp (RNA dependent RNA polymerase) நொதியின் (enzyme) செயல்பாட்டை தடுக்கிறது. ஏனென்றால் இந்த நொதி (enzyme) வேலை செய்வதற்கு ATP (Adenosine Triphosphate) என்ற நியூக்ளியோடைடு (Nucleotide) மிகவும் அவசியமாகும். இந்த நியூக்ளியோடைடு (Nucleotide) RdRp நொதியுடன் சேர்ந்து புது மரபணுவை உண்டுபண்ணும்.


பொதுவாக ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து என்பது ஒரு சார்பு மருந்து (Prodrug) வகையை சேர்ந்தது. இதற்கென்று தனித்த மருத்துவ குணம் கிடையாது. இது நமது உடம்பில் சென்ற பிறகு தான் வளர்சிதை (Metabolise) மாற்றம் அடைந்து உண்மையான மருந்தாக மாறுகிறது. ஏனென்றால்  நியூக்ளியோசைடு (Nucleoside) தடுப்பான் (Inhibitors) மருந்துகளை அவ்வளவு சீக்கிரம் நம் உடலால் உறிஞ்சிக்கொள்ள (Absorption) முடியாது. அதற்காக உண்மையான மருந்தை (Drug) சார்பு மருந்தாக (Prodrug) மாற்றி நம் உடலில் செலுத்துவார்கள். அது நமது உடலில் நியூக்ளியோடைடு (Nucleotide) ஆக மாற்றம் பெற்று ATP (Adenosine Triphosphate) வடிவமைப்புக்கு ஒத்ததாக மாறுகிறது.


ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து ATP (Adenosine Triphosphate) வடிவமைப்புக்கு ஒத்து உள்ளதால் இம்மருந்து RdRp (RNA dependent RNA polymerase) நொதியுடன் (enzyme) சேர்ந்து புது மரபணு உண்டுபண்ணுவதை தடுத்து விடுகிறது.


இப்பொழுது அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Center for Disease Control and Prevention, CDC) இந்த மருந்தை பரிந்துரை (Recommendation) பட்டியலில் (List) இருந்து எடுத்து விட்டது. இதனுடைய செயல்திறன் (efficacy) என்பது மிகவும் குறைவுதான், மேலும் இது அனைத்து மக்களுக்கும் உபயோகமானதாக இல்லை. 

தற்சமயம் கொரோனா சிகிச்சை முறையை மூன்றாக பிரித்துள்ளார்கள். முதல்நிலையில் இந்த வைரஸ் மூக்கு தொண்டை பகுதியில் இருக்கும். அப்போது காய்ச்சல்,  உடல்வலி, மூக்கு ஒழுகுதல், சுவை மறத்து போதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இது 1-5 நாட்கள் இருக்கும். உடலில் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த நிலையிலே நோய் சரியாகி  விடும், மாத்திரை மருந்து தேவையில்லை. 85 சதவீதம் மக்கள் இப்படி குணமாகி விடுகிறார்கள். மீதம் இருக்கும் 15 சதவீதம் மக்கள் அடுத்த கட்டப்பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இரண்டாம் நிலை என்பது அடுத்த 6-9 நாட்களுக்குள் ஏற்படக்கூடிய நுரையீரல் பாதிப்பு ஆகும். இந்த நிலையில் மருத்துவர்கள் கார்டிகோஸ்டிராய்டு (Corticosteroids) மருந்துகளை கொடுத்து குணப்படுத்தி விடுகிறார்கள். இதற்கு அடுத்த கட்டம் (மூன்றாவது நிலை) நோய் மிகவும் முற்றின வகையை சேர்ந்ததாகும் (10 தினங்களுக்கு மேல்). இதில் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இது பொதுவாக வைரஸினால் ஏற்படக்கூடியது கிடையாது. மாறாக இது நம் உடலில் ஏற்படும் எதிர்ப்பு சக்தினால் தோன்றக்கூடியது. இதற்கு சைட்டோகைன் (Cytokine) ஸ்டார்ம் (Storm) என்று அழைப்பார்கள். இந்த சமயத்தில் தான் நோயாளிகளுக்கு பிராணவாயு மற்றும் ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்து மற்றும் பிற உயிர் காக்கும் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. 

ஆகையால் கொரோனா நோய் தொற்று கண்டறிந்தவர்கள் மருத்துவரிடம் முறையான சிகிச்சையை காலம் தாழ்த்தாமல் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் முகக்கவசம் அணிந்து இந்நோய் வராமல் தடுப்பதுதான் மிகச்சிறந்த வழிமுறையாகும். அப்புறம், தடுப்பூசி கிடைத்தால் உடனே போட்டுக்கொண்டு நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நன்றி: 
ACS Central Science 2020 6 672
European Journal of Medicinal Chemistry 2020 201 112527
MedChemComm 2019 10 200

Sunday, April 25, 2021

கோவிட்-19 (Covid-19 Vaccine) தடுப்பூசி

கோவிட்-19 என்ற வைரஸ் பெரும் தொற்று நோய் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நோய் தொற்று முதன்முதலில் சீனா நாட்டில் ஹூபை (Hubei) மாகாணத்தில் உள்ள வூஹான் (Wuhan) நகரத்தில் டிசம்பர் 2019 ஆண்டு கண்டறியப்பட்டது.


இந்த வைரஸ், வூஹான் நகரத்தில் உள்ள கறி சந்தையில் விற்கப்பட்ட வௌவால் (Bat) கறியிலிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கும் என்று மருத்துவ உலகம் நம்பியது.


உலக சுகாதார மையம் (WHO) மார்ச் 11, 2020 ல் இந்த நோய் உலகப்பெரும் தொற்று (Pandemic) என்று அறிவித்தது. கோவிட்-19 நோய் மிகக்குறுகிய காலத்தில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி ஏராளமான உயிர்களை காவு வாங்கியுள்ளது. அது மட்டுமில்லாமல் உலக பொருளாதாரத்தையே முடக்கிப் போட்டுள்ளது. இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், மூக்கு ஒழுகுதல், மூச்சு வாங்குதல், மணம், சுவை அறியும் தன்மை இழத்தல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு முதலியன முக்கிய அறிகுறிகளாக தென்பட்டன. 

இந்த நோய் சாதாரணமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எச்சில் மூலமாகவோ அல்லது தொடுதல் மற்றும் தும்மலின் போது காற்றின் வழியாக சீக்கிரமாக பரவுகிறது. இந்த நோய் தொற்றின் பரவலை தனி மனித இடைவெளி (6 அடி), முகக்கவசம் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் மூலம் கட்டுப்படுத்தலாம்.  


COVID-19 என்பது கொரோனா வைரஸ் நோய் (COrona VIrus Disease)-2019 என்பதின் சுருக்கமாகும். இந்த வைரஸ் நோய் மனிதனுடைய நுரையீரலை தாக்கி நிமோனியாவை உண்டுபண்ணி (நுரையீரலில் நீர் கோர்த்துக்கொள்வது) சுவாசிக்க முடியாமல் செய்து அதன்மூலம் உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை வேலையிழக்க செய்து கடைசியில் உயிரை கொல்கிறது. மருத்துவ உலகம் இந்த வைரஸை சார்ஸ்-கோவி-2 (SARS-COV-2; Severe Acute Respiratory Syndrome-Corona Virus-2) என்றழைக்கிறது. இந்த நோய் முதல் அலையில் அதிகமாக வயதானவர்களை தாக்கியது மேலும் சுவாச நோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களை அதிகம் பாதித்தது. கோவிட்-19 தாக்கியவர்களை முதலில் தனியாக பிரித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த நோய் 7 லிருந்து 10 நாட்களுக்குள் சரியாகி விடும். இந்த காலத்தில் நோயுற்றவர்கள் தேவையான சத்துள்ள உணவு பொருட்களை முக்கியமாக வைட்டமின் C & D நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சுவாச பிரச்னை ஏற்படும். அவர்களுக்கு பிராணவாயு (Oxygen) தனியாக கொடுக்க வேண்டும் (வெண்டிலேட்டர் மூலமாக) மற்றும் மருத்துவரின் மேற்பார்வையில் முக்கிய மருந்துகளை (Remdesivir மற்றும் Corticosteroids) கொடுத்து குணப்படுத்தலாம். 


கோவிட்-19 வைரஸ் தன்னைத்தானே உருமாற்றிக்கொண்டு வெவ்வேறு வடிவில் இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று உக்கிரமாக வெளிப்படுத்தி அதிவேகமாக பரவி மேலும் மேலும் உலக மக்களை அச்சுறுத்துகிறது. ஆகையால் இதை கட்டுப்படுத்த வேண்டுமானால் தடுப்பூசி மருந்து தான் ஒரே தீர்வு என்று உலக நாடுகளும், உலக சுகாதார மையம் மற்றும் பெரிய மருந்து நிறுவனங்களும் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டி ஒரு வருடத்தில் முறையான தடுப்பூசிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

தடுப்பூசி என்பது கீழ்காணும் வழிமுறைகளில் தயாரிக்கப்படும்.
  1. நோயை உண்டுபண்ணும் வைரஸை முழுவதும் செயல் இழக்கச்செய்து அல்லது கொன்று அதை உடம்பில் செலுத்துவது (Inactivated Vaccine)
  2. நோய் உண்டுபண்ணும் வைரஸின் செயல் திறனை மட்டும் (Virulence) நீக்கி பின்பு உயிருடன் கூடிய வைரஸை உடம்பில் செலுத்துவது (Live-attanuated Vaccine).
  3. நோயை உண்டுபண்ணும் வைரஸின் புரதத்தை (Protein) அதாவது COVID-19 வைரஸின் புரதத்தை (Spike protein) எடுத்து மற்றொரு நோய் உண்டுபண்ணாத வைரஸில் புகுத்தி பின்பு உடலில் செலுத்துவது (Viral Vector Vaccine).
  4. நோய் உண்டுபண்ணும் வைரஸின் மரபணுவை (DNA or RNA or mRNA) மட்டும் தனியாக எடுத்து அதை கொழுமியம் நானோ துகள்களுடன் (Lipid Nanoparticles) சேர்த்து பின்பு உடலில் செலுத்துவது (Nucleic Acid Vaccine).

நியூக்ளிக் ஆசிட் (மரபணு) தடுப்பூசி என்பது Deoxyribonuclic Acid (DNA) முதலில் messenger Ribonucleic Acid (mRNA) ஆக மாற்றப்பட்டு அத்துடன் கொழுமியம் நானோ துகள்களை சேர்த்து பின்பு அதை உடலில் செலுத்துவது ஆகும். ஏனென்றால் mRNA என்பது நிலையானது அல்ல, ஆகையால் கொழுமியம் நானோ துகள்களுடன் சேர்க்கும்பொழுது mRNA நிலைத்தன்மை பெறுகிறது. இந்த முறையில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து தான் முதன்முதலாக தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.


உலக மருந்து நிறுவனங்கள் மேலே குறிப்பிட்ட முறைகளில் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து ஒவ்வொரு நாட்டின் அரசிடமும் கட்டுப்படியான விலையில் விற்பனை செய்துள்ளன. குறிப்பாக Pfizer, Moderna, AstraZeneca, Novavax மற்றும் Janssen நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு கொடுத்துள்ளது. அதுமாதிரி சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகள் தங்கள் நாட்டிலே தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து உற்பத்தி பண்ணி மக்களுக்கு அளித்திருக்கிறது.

கீழ்காணும் நாடுகளில் பின்வரும் தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளித்து மக்களுக்கு செலுத்தி வருகிறார்கள்.


இந்திய மக்கள் அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக சுவாச நோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.


நன்றி: Nature Publications; CDC; Countries' website