Sunday, April 25, 2021

கோவிட்-19 (Covid-19 Vaccine) தடுப்பூசி

கோவிட்-19 என்ற வைரஸ் பெரும் தொற்று நோய் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நோய் தொற்று முதன்முதலில் சீனா நாட்டில் ஹூபை (Hubei) மாகாணத்தில் உள்ள வூஹான் (Wuhan) நகரத்தில் டிசம்பர் 2019 ஆண்டு கண்டறியப்பட்டது.


இந்த வைரஸ், வூஹான் நகரத்தில் உள்ள கறி சந்தையில் விற்கப்பட்ட வௌவால் (Bat) கறியிலிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கும் என்று மருத்துவ உலகம் நம்பியது.


உலக சுகாதார மையம் (WHO) மார்ச் 11, 2020 ல் இந்த நோய் உலகப்பெரும் தொற்று (Pandemic) என்று அறிவித்தது. கோவிட்-19 நோய் மிகக்குறுகிய காலத்தில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி ஏராளமான உயிர்களை காவு வாங்கியுள்ளது. அது மட்டுமில்லாமல் உலக பொருளாதாரத்தையே முடக்கிப் போட்டுள்ளது. இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், மூக்கு ஒழுகுதல், மூச்சு வாங்குதல், மணம், சுவை அறியும் தன்மை இழத்தல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு முதலியன முக்கிய அறிகுறிகளாக தென்பட்டன. 

இந்த நோய் சாதாரணமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எச்சில் மூலமாகவோ அல்லது தொடுதல் மற்றும் தும்மலின் போது காற்றின் வழியாக சீக்கிரமாக பரவுகிறது. இந்த நோய் தொற்றின் பரவலை தனி மனித இடைவெளி (6 அடி), முகக்கவசம் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் மூலம் கட்டுப்படுத்தலாம்.  


COVID-19 என்பது கொரோனா வைரஸ் நோய் (COrona VIrus Disease)-2019 என்பதின் சுருக்கமாகும். இந்த வைரஸ் நோய் மனிதனுடைய நுரையீரலை தாக்கி நிமோனியாவை உண்டுபண்ணி (நுரையீரலில் நீர் கோர்த்துக்கொள்வது) சுவாசிக்க முடியாமல் செய்து அதன்மூலம் உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை வேலையிழக்க செய்து கடைசியில் உயிரை கொல்கிறது. மருத்துவ உலகம் இந்த வைரஸை சார்ஸ்-கோவி-2 (SARS-COV-2; Severe Acute Respiratory Syndrome-Corona Virus-2) என்றழைக்கிறது. இந்த நோய் முதல் அலையில் அதிகமாக வயதானவர்களை தாக்கியது மேலும் சுவாச நோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களை அதிகம் பாதித்தது. கோவிட்-19 தாக்கியவர்களை முதலில் தனியாக பிரித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த நோய் 7 லிருந்து 10 நாட்களுக்குள் சரியாகி விடும். இந்த காலத்தில் நோயுற்றவர்கள் தேவையான சத்துள்ள உணவு பொருட்களை முக்கியமாக வைட்டமின் C & D நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சுவாச பிரச்னை ஏற்படும். அவர்களுக்கு பிராணவாயு (Oxygen) தனியாக கொடுக்க வேண்டும் (வெண்டிலேட்டர் மூலமாக) மற்றும் மருத்துவரின் மேற்பார்வையில் முக்கிய மருந்துகளை (Remdesivir மற்றும் Corticosteroids) கொடுத்து குணப்படுத்தலாம். 


கோவிட்-19 வைரஸ் தன்னைத்தானே உருமாற்றிக்கொண்டு வெவ்வேறு வடிவில் இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று உக்கிரமாக வெளிப்படுத்தி அதிவேகமாக பரவி மேலும் மேலும் உலக மக்களை அச்சுறுத்துகிறது. ஆகையால் இதை கட்டுப்படுத்த வேண்டுமானால் தடுப்பூசி மருந்து தான் ஒரே தீர்வு என்று உலக நாடுகளும், உலக சுகாதார மையம் மற்றும் பெரிய மருந்து நிறுவனங்களும் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டி ஒரு வருடத்தில் முறையான தடுப்பூசிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

தடுப்பூசி என்பது கீழ்காணும் வழிமுறைகளில் தயாரிக்கப்படும்.
  1. நோயை உண்டுபண்ணும் வைரஸை முழுவதும் செயல் இழக்கச்செய்து அல்லது கொன்று அதை உடம்பில் செலுத்துவது (Inactivated Vaccine)
  2. நோய் உண்டுபண்ணும் வைரஸின் செயல் திறனை மட்டும் (Virulence) நீக்கி பின்பு உயிருடன் கூடிய வைரஸை உடம்பில் செலுத்துவது (Live-attanuated Vaccine).
  3. நோயை உண்டுபண்ணும் வைரஸின் புரதத்தை (Protein) அதாவது COVID-19 வைரஸின் புரதத்தை (Spike protein) எடுத்து மற்றொரு நோய் உண்டுபண்ணாத வைரஸில் புகுத்தி பின்பு உடலில் செலுத்துவது (Viral Vector Vaccine).
  4. நோய் உண்டுபண்ணும் வைரஸின் மரபணுவை (DNA or RNA or mRNA) மட்டும் தனியாக எடுத்து அதை கொழுமியம் நானோ துகள்களுடன் (Lipid Nanoparticles) சேர்த்து பின்பு உடலில் செலுத்துவது (Nucleic Acid Vaccine).

நியூக்ளிக் ஆசிட் (மரபணு) தடுப்பூசி என்பது Deoxyribonuclic Acid (DNA) முதலில் messenger Ribonucleic Acid (mRNA) ஆக மாற்றப்பட்டு அத்துடன் கொழுமியம் நானோ துகள்களை சேர்த்து பின்பு அதை உடலில் செலுத்துவது ஆகும். ஏனென்றால் mRNA என்பது நிலையானது அல்ல, ஆகையால் கொழுமியம் நானோ துகள்களுடன் சேர்க்கும்பொழுது mRNA நிலைத்தன்மை பெறுகிறது. இந்த முறையில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து தான் முதன்முதலாக தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.


உலக மருந்து நிறுவனங்கள் மேலே குறிப்பிட்ட முறைகளில் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து ஒவ்வொரு நாட்டின் அரசிடமும் கட்டுப்படியான விலையில் விற்பனை செய்துள்ளன. குறிப்பாக Pfizer, Moderna, AstraZeneca, Novavax மற்றும் Janssen நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு கொடுத்துள்ளது. அதுமாதிரி சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகள் தங்கள் நாட்டிலே தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து உற்பத்தி பண்ணி மக்களுக்கு அளித்திருக்கிறது.

கீழ்காணும் நாடுகளில் பின்வரும் தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளித்து மக்களுக்கு செலுத்தி வருகிறார்கள்.


இந்திய மக்கள் அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக சுவாச நோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.


நன்றி: Nature Publications; CDC; Countries' website 

Thursday, April 8, 2021

தமிழக தேர்தல் திருவிழா 2021

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடக்கும் தேர்தல் திருவிழா 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரிடமும் தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டு விட்டது. தேர்தல் ஆணையம் முக்கிய நிகழ்வுகள் பற்றி கீழ்காணும் அட்டவணையை வெளியிட்டது.

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 2021 ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 38 மாவட்டங்களையும் 234 தொகுதிகளாக பிரித்து  தேர்தல் நடைபெற்றது. இதில் 6.26 கோடி மக்கள் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. 



தேர்தல் ஆணையம் சொன்ன வாக்காளர்கள் கணக்கு சரியானதா என்று புரிய வில்லை. ஏனென்றால் இதே தேர்தல் ஆணையம் தான் ஒவ்வொரு முறையும் வெவ்வேறான கணக்கை சொல்லியிருக்கிறது. எது உண்மையான வாக்காளர்கள் எண்ணிக்கை என்று தெரியவில்லை. 


தமிழ் நாடு தேர்தல் களத்தில் இதுவரையில்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் கட்சிகள் போட்டியில் கலந்து கொண்டது. ஏறத்தாழ 40 கட்சிகள் தனியாகவோ அல்லது கூட்டணி அமைத்தோ போட்டியிட்டன. அதுவும் இந்த தேர்தலில் பெரிய ஆளுமைகள் திரு கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா இல்லாத சட்டமன்ற தேர்தலாகும். அதிமுக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு அணி, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் ஒரு அணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாகவும், மேலும் மற்ற உதிரி கட்சிகளும் இந்த தேர்தலில் பங்கேற்றன. முக்கியமாக நாம் தமிழர் கட்சி 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் இந்த சட்டசபை தேர்தலில் களமிறக்கி பெண்களுக்கு அரசியலில் 50 சதவீதம் ஒதுக்கீடு கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

தேசிய ஜனநாயக கூட்டணி  


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 


மக்களின் முதல் கூட்டணி  


அமமுக கூட்டணி 


நாம் தமிழர் கட்சி 


சகாயம் அரசியல் பேரவை கூட்டணி 


மற்ற கட்சிகள் 


கட்சி தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் 


மொத்தமாக 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் 4 கோடியே 57 இலட்சத்து 46 ஆயிரத்து எழுநூற்று தொண்ணூற்று மூன்று (4,57,46,793) ஓட்டுக்கள் EVM இயந்திரத்தின் மூலமும், 4 இலட்சத்து 89 ஆயிரத்து அறுநூற்று தொண்ணூற்று ஒன்பது (4,89,699) ஓட்டுக்கள் தபால் மூலமாகவும், மொத்தமாக 4 கோடியே 62 இலட்சத்து 36 ஆயிரத்து நானூற்று தொண்ணூற்று இரண்டு (4,62,36,492) ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இதுவே குறிப்பிட தகுந்த ஓட்டு சதவீதம் தான் ஏனென்றால் கொரோனா என்ற உயிர்கொல்லி நோய் இரண்டாம் அலையாக தமிழகம் எங்கும் பரவலாக பரவிக்கொண்டிருக்கிறது என்ற சூழ்நிலையில் 70 சதவீதத்திற்கு மேல் பதிவாயிருந்தது பாராட்டத்தக்க அம்சமாகும். இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதமும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.06 சதவீதமும் பதிவாகியிருந்தது. 

தமிழ் நாடு 2021 தேர்தல் வாக்கு சதவீதம்


தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இம்முறை தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பெருமளவில் ஆதரவு தந்து ஆட்சி கட்டிலில் அமர்த்தி விட்டார்கள். திமுக தனியாக 125 இடங்களிலும், கூட்டணியாக 159 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த கூட்டணியில் மதிமுக, கொமதேக, மமக மற்றும் தவாக ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் அவர்களுடைய வெற்றியும் திமுக வெற்றியாக கணக்கில் கொள்ளப்படுவதால் திமுக மொத்தமாக 133 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


தொடர்ந்து 10 வருடங்களாக ஆளும் கட்சியாக (2011 - 2021) இருந்த அதிமுக மோசமாக தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு இல்லாமல் பாராட்டும் விதத்தில் தனியாக 65 இடங்களிலும், கூட்டணியாக 75 இடங்களிலும் வெற்றிப்பெற்று வலுவான எதிர்க்கட்சியாக வந்துள்ளது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 3.15 சதவீதம் மட்டுமே. 


இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக கூட்டணி மற்றும் கமல் அவர்களின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி, இரண்டுமே எதிர்பார்க்காத விதத்தில் தோல்வியை சந்தித்து உள்ளன. அமமுக கூட்டணி 2.85 சதவீதமும், மநீம கூட்டணி 2.74 சதவீதமும் மட்டுமே வாக்குகள் பெற்றுள்ளன.



234 தொகுதிகளில் 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் தேர்தலில் நிறுத்தி போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் 6.58 சதவீதம் வாக்குகளை பெற்று 3 ஆவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. இக்கட்சியின் சார்பாக யாரும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகாமல் போனாலும் அனைத்து தொகுதியிலும் சீரான வாக்குகளை பெற்று அனைத்து மக்களுக்குமான கட்சியாக உருவாகி உள்ளது.


தமிழக அரசியல் கட்சிகள் பெற்ற வெற்றி மற்றும் வாக்கு சதவீதம் பட்டை வரைபடமாக (Bar Graph) கொடுக்கப்பட்டுள்ளது.


கூட்டணிகள் (திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மநீம கூட்டணி) பெற்ற வாக்குகள், நாம் தமிழர் கட்சி மற்றும் NOTA  பெற்ற வாக்குகள் பை வரைபடமாக (Pie Graph) கொடுக்கப்பட்டியிருக்கிறது.


திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும் இந்த சமயத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தலைவிரித்து ஆடிக்கொண்டியிருக்கிறது. தேர்தல் பரப்புரையின் போது அனைத்து கட்சிகளும் மக்களை கூட்டி எங்களுக்கு தான் அதிகமாக ஆதரவு இருப்பதுபோல் மக்களிடம் காட்டிக்கொண்டார்கள். அதன் விளைவு கற்பனை பண்ண முடியாத தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அதிமுக அரசு வைத்து சென்றிருக்கும் கடன் 5 இலட்சம் கோடியாக இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக எப்படி இவை அனைத்தையும் சமாளித்து நல்லாட்சி தருகிறது என்று பார்ப்போம்.

நன்றி: ECI, The Hindu, Wikipedia