Wednesday, October 31, 2018

ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity)


இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் மதிப்புக்குரிய திரு. சர்தார் வல்லப்பாய் படேல் ஆவார். அவருடைய பிறந்த தினம் அக்டோபர் 31, 1875. இன்று அவருடைய 143-வது பிறந்த தினம். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர். அப்போது நம் இந்தியாவில் 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. அவை அனைத்தும் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தன. இவருடைய சீரிய முயற்சியால் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு "இந்தியா" என்ற நாடானது. அதனை நினைவு கூறும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது தான் உலகிலேயே உயரமான "ஒற்றுமைக்கான சிலை".

இந்த சிலை குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றங்கரையிலுள்ள சர்தார் சரோவர் அணையின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 597 அடி (182 மீட்டர்) யாகும். உலகிலேயே உயரமான சிலை என்ற அந்தஸ்து பெற்றுள்ளது. இது கட்டடக்கலையின் திறமைக்கு மிகப்பெரிய சான்றாகும். இந்தியாவின் தலைசிறந்த சிற்பி பத்மபூஷன் திரு ராம் வி. சுதர் அவர்களும், பொறியாளர்களும் இணைந்து பணியாற்றி இச்சாதனையை செய்து உள்ளனர். 


சர்தார் சிலையின் முகத்தை பார்க்கும் பொழுது எத்தனை கடினமான வேலையை எவ்வளவு அழகாக, சிறப்பாக மிக குறுகிய காலத்தில் செய்து முடித்து உள்ளார்கள் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. இந்த சிலையை செய்ய 70,000 மெட்ரிக் டன் சிமெண்ட், 18500 மெட்ரிக் டன் எஃகு,  6000 மெட்ரிக் டன் இரும்பு, 1700 மெட்ரிக் டன் வெண்கலம் உபயோகப்படுத்தப்பட்டு 250 பொறியாளர்கள் மற்றும் 3700 பணியாளர்கள் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவு சுமார் 3000 கோடியாகும். 

அரசியல் காரணங்கள் பலவாக இருந்தாலும் இந்த கட்டடக்கலையின் சிறப்புக்கு நாம் தலைவணங்க வேண்டும் மற்றும் பெருமைப்பட வேண்டும்.



நன்றி: விகடன்

சிற்பி: ராம் வி. சுதர் 


கட்டடக்கலைக்கு ஒரு சல்யூட்!

Saturday, October 27, 2018

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் சொன்னது


மூளைக்கு வல்லாரை 
முடிவளர நீலிநெல்லி 
ஈளைக்கு  முசுமுசுக்கை 
எலும்பிற்கு இளம்பிரண்டை! 

பல்லுக்கு வேலாலன் 
பசிக்கு சீரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி!  

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம் 
தோலுக்கு அருகுவேம்பு!

நரம்புக்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சித்தும்பை
உரத்திற்கு முருங்கைபூ
ஊதலுக்கு நீர்முள்ளி! 

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்!

உடலுக்கு எள்ளெண்ணெய்
உணர்ச்சிற்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டு!

கருப்பைக்கு அசோகப்பட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகு! 

விந்திற்கு ஓரிதழ்தாமரை  
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை!

  கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி!

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீர்
வேர்க்குருவிற்கு பனைநுங்கு
வெட்டைக்கு சிறுசெருப்படை!

தீப்புண்ணுக்கு குங்கிலியவெண்ணெய்
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணுக்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரியெட்டி! 

குருதிக்கழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை!

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்   
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை 
ஆண்மைக்கு பூனைக்காலி!

வெண்படைக்கு பூவரசு கார்போகி 
விதைநோயா கழற்சிவிதை 
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி 
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு!

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்கு வெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பு!  

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளமயக்க கஞ்சாகள்ளு
உடலிளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே!

அருந்தமிழர் வாழ்வியலில் 
அன்றாடம் சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!


நன்றி: WhatsApp

பன்றிக்காய்ச்சல் (Swine Flu)

பன்றிக்காய்ச்சல் நோயை ஆங்கிலத்தில் ஸ்வைன் ப்ளூ (Swine Flu) என்று அழைப்பார்கள். இந்த நோயுக்கு H1N1 என்ற வைரஸ் தான் காரணமாகும். இது முதலில் பன்றியை தாக்குகிறது. பன்றியின் மூலம் மனிதனுக்கு பரவுவதால் இந்நோயை பன்றிக்காய்ச்சல் என்று கூறுகிறோம். 

நோய்க்கான அறிகுறிகள்

பசியின்மை, மூக்கு ஒழுகுதல், தும்மல், இருமல், தொண்டை வறட்சி, மூட்டு வலி மற்றும் வயிற்றுப்போக்கு.


நோய் பரவும் முறை 


நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.


ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி வளர்ப்பவர்கள், அதற்கு உணவு கொடுத்த பின்பு உங்கள் கைகளை நன்றாக கழுவ வேண்டும். வீட்டு விலங்குகள் வளர்க்கும் இடங்களில் உணவு உட்கொள்ளக்கூடாது. நோய் அறிகுறி தெரிந்தவர்களிடம் மிகவும் கவனத்துடன் பழக வேண்டும்.

நோய் குணமாக்கும் வழிகள் 

ஆங்கில மருத்துவ முறை 

வரும் முன் காப்பது: ப்ளூ வேக்சின் (Flu Vaccine) எடுத்துக் கொள்வது (ஆண்டுக்கு ஒரு முறை)
வந்த பின்பு குணமாக்குவது: டமிப்ளூ (Tamiflu) என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. இம்மருந்தை மருத்துவர் ஆலோசனையின்படி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.


சித்த மருத்துவ முறை 

வரும் முன்பு காப்பது 

சித்த மருத்துவத்தில் "கபசுர குடிநீர்" கொடுக்கப் படுகிறது. இது 15 மூலிகைகள் கொண்ட மருத்துவ கலவையாகும். சித்தா மருந்தகத்தில் இம்மருந்து பொடியாக கிடைக்கிறது. இப்பொடியை 2.6 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி 300மிலி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்பு ஆற வைத்து, வடிகட்டி நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் 5 நாட்களுக்கு பருக வேண்டும். இப்படி குடித்து வந்தால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். 

மூலிகைகள்: நிலவேம்பு (Andrographis paniculata), கண்டுபரங்கி (Clerodendrum serratum), சுக்கு (Dried ginger), திப்பிலி (Piper longum), லவங்கம் (Syzygium aromaticum), ஆடாதொடா வேர் (Justicia adhatoda), சிருக்கன்கொரி (செந்தட்டி) வேர் (Tragia involucrata), சீந்தில் (Tinospora cardifolia), கற்பூரவள்ளி (Anisochilus carnosus), கோரைக்கிழங்கு (Cyperus rotundus), கோஷ்டம் (Cheilocostus specious), அக்கரகாரம் (Anacyclus pyrethrum), வட்டத்திரிப்பி வேர் (Sida acuta), முள்ளி வேர் (Hygrophila auriculata) மற்றும் கடுக்காய் தோல் (Terminalia chebula)

வந்த பின்பு காப்பது 
  1. கண்டங்கத்திரி (Solanum xanthocarpum), சுக்கு (Dried ginger) மற்றும் வில்வ இலை (Aegle marmelos) மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க (decoction) வைக்க வேண்டும். பிறகு இந்த கசாயத்தை ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் 8 நாட்களுக்கு சாப்பிட வேண்டும்.
  2. நன்னாரி (Hemidesmus indicus), தூதுவளை (Solanum trilobatum), செந்தட்டி (Tragia involucrata), ஆடாதொடா (Justicia adhatoda), கடுக்காய் (Terminalia chebula), நெல்லிக்காய் (Gooseberry), தாந்திரிக்காய் (Terminalia bellirica), சுக்கு (Dried ginger), சிசுவேர் (Oldenlandia umbellata) மற்றும் ஆடுதின்னாப்பாலை (Aristolochia bracteolata) ஆகிய அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க (decoction) வைக்க வேண்டும். பிறகு இந்த கசாயத்தை ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு வேளை வீதம் 8 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் கபசுரம் குணமாகும்.