Sunday, December 3, 2017

ஜெயலலிதா குடும்பப் பின்னணி


செல்வி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாயிருக்கிறது. இது அவரே ஏற்படுத்திக் கொண்டது தான். பொதுவாழ்விற்கு வருபவர் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். இதை செல்வி ஜெயலலிதா ஒரு போதும் செய்ததில்லை. 

அரசியலுக்கு வருவதற்கு முன்னர் 1970 களில் குமுதம் பத்திரிகை க்கு கொடுத்த பேட்டியில் திருமணம் ஆகாமல் திரு சோபன் பாபுவுடன் ஒன்றாக கணவன் மனைவியாக வாழ்கிறேன் என்று உண்மையாக தைரியமாக சொன்னார். அதன் பிறகு அரசியலில் இறங்கினார்; தனிப்பட்ட வாழ்க்கையை திரை போட்டு மூடிக் கொண்டார்.

அதனால் ஏற்பட்ட விளைவு?

டிசம்பர் 5, 2016 க்கு பிறகு ஆளாளுக்கு நான் தான் செல்வி ஜெயலலிதாவின் மகள் என்றோ அல்லது மகன் என்றோ கிளம்பி வருகிறார்கள். தற்சமயம் "அம்ருதா" என்ற பெண்மணி, நான் தான் செல்வி ஜெயலலிதாவின் மகள் என்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். இதுவரை இவர் திருமதி சைலஜாவின் மகளாக அறியப்பட்டார். திருமதி சைலஜா ஜெயலலிதாவின் சகோதரி ஆவார். 

அம்ருதா தனக்கு டி என் ஏ சோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுயிருக்கிறார். சோதனைக்கு அனுமதி கிடைத்து, வெற்றி அடையும் பட்சத்தில், நாடே ஜெயலலிதாவை "அம்மா" என்று அழைத்து கொண்டாடிய போது, அவரோ தன் சொந்த மகளை நாட்டு மக்களிடம் இருந்து மறைத்து விட்டாரே என்று பழித்துப் பேசும்.

இதனால் இதுவரை நாம் சொல்லி வந்த "செல்வி" ஜெயலலிதா என்கின்ற அடைமொழி இனிமேல் "திருமதி" ஜெயலலிதா என்று சொல்லக் கூடுமோ...ஆண்டவனுக்கே வெளிச்சம்.

செல்வி ஜெயலலிதா அவர்களின் பழைய புகைப்படம்:


வாசுதேவன் & சைலஜா 


அம்ருதா 


Sunday, November 26, 2017

தமிழ் எழுதிப் பழகுவோம்

தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. தற்சமயம் தமிழ் பேசும் மக்களில் பலரும் பிழை இல்லாமல் எழுதுவது அரிதாகி வருகிறது. 

ஏன்

நம்மால் தமிழ் மொழியை ஏன் பிழை இல்லாமல் எழுத முடிவதில்லை. ஏனென்றால் தமிழில் சில எழுத்துக்களை நமக்கு சரியாக உச்சரிக்கத் தெரிவதில்லை. குறிப்பாக பின்வரும் எழுத்துக்களைச் சொல்லலாம்.

"ண" ; "ந" ; "ன"

"ல" ; "ழ" ; "ள"

"ர" ; "ற"

ண் ; ந் ; ன் - எப்படி பயன்படுத்த வேண்டும்? முதலில் மூன்று சுழி "ண்" மற்றும் இரண்டு சுழி "ன்" என்று சொல்வதை விடவேண்டும். "ண்" என்பதை "டண்ணகரம்" என்றும், "ன்" என்பதை "றன்னகரம்" என்றும், "ந்" என்பதை "தந்நகரம்" என்றே சொல்ல வேண்டும்.

உதாரணம்: மண்டபம்; கொண்டாட்டம்

மூன்று சுழி "ண்" ஒற்றெழுத்துக்குப் பின் எப்பவும் "ட" என்ற உயிர்மெய் எழுத்து தான் வரும்.

உதாரணம்: தென்றல்; சென்றான்

இரண்டு சுழி "ன்" ஒற்றெழுத்துக்குப் பின் எப்பவும் "ற" என்ற உயிர்மெய் எழுத்து தான் வரும்.

உதாரணம்: பந்து; வெந்தயம்; மந்தை

"ந்" ஒற்றெழுத்துக்குப் பின் எப்பவும் "த" என்ற உயிர்மெய் எழுத்து தான் வரும்.


தமிழ் எழுத்துக்களின் வரிசை பட்டியலை உற்று கவனியுங்கள். "ண" வுக்கு முன் எழுத்து "ட" ஆகும்; "ந" வுக்கு முன் எழுத்து "த" ஆகும்; அதுபோல் "ன" வுக்கு முன் எழுத்து "ற" இருப்பதைப் பார்க்கலாம்.

ஆகையால் நாம் நம் தாய்மொழியை பிழை இல்லாமல் எழுதி பழகுவோம்.

லகர, ளகர, ழகர வேறுபாடுகள்

"ர்" & "ற்"

Sunday, October 22, 2017

சிறுகண் பீளை - Aerva lanata


சிறுகண் பீளை ஒரு அற்புதமான மூலிகை, இதற்கு பூளைப்பூ, பொங்கல் பூ, சிறு பீளை என்று பல பெயர்கள் உண்டு. பொதுவாக தமிழ் நாட்டில் பல பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகையிலும்  சில சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப் படுகிறது. 

பொங்கல் பண்டிகையின் போது நம் வீடுகளில் சிறுகண் பீளை, ஆவாரை, வேப்பிலை ஆகிய மூன்றையும் கட்டி வைப்போம், இதற்கு காப்பு கட்டு என்று பெயர், மார்கழி மாதம் கடைசி தேதியில் செய்வோம். பொங்கல் முடிந்தவுடன் அதை தூக்கி வீசிவிடுவோம். ஏன் என்றால் இந்த மூலிகைகளின் மகத்துவம் நமக்கு தெரிவதில்லை, அதுபோல் நம் வீடுகளில் இதை ஏன் கட்டினோம் என்றும் புரிந்து கொள்வதில்லை. இந்த மூலிகைகள் விஷக்கடிக்கு அருமருந்தாகும். 

சிறுகண் பீளை சிறுநீர் கல்லை உடைத்து வெளியேற்றும் ஆற்றல் உடையது. அவ்வாறு செய்வதனால் நமக்கு அறுவை சிகிச்சை தேவை படுவதில்லை, இதைத்தான் மதிப்பிற்குரிய நம்மாழ்வார் அவர்கள் "அறுவை சிகிச்சை மூலிகை" என்று அழைப்பார்.

இது மானாவாரியாக அனைத்து பகுதியிலும் விளையக்கூடிய பயிராகும். மார்கழி, தை மாதத்தில் இதன் விளைச்சல் அதிகம் இருக்கும். இந்த மூலிகையை பற்றி பதார்த்த குணப்பாடத்தில் (291) குறிப்பிடப் பட்டுள்ளது.

"நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை 
பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும் 
பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை 
யாமிது கற்பேதி யறி"

இதுபோல் தேரையர் அவர்கள் தன்னுடைய குணவாகடத்திரட்டில் இம்மூலிகையை பற்றி குறிப்பிட்டுள்ளார் 

"சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கை 
விக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவே 
கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு
காட்டிற் கழன்றோடுங்காண்"

எவ்வாறு பயன்படுத்துவது?
  1. சிறுகண் பீளையை சமூலமாக (முழுச்செடி) எடுத்து நன்றாக கழுவி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அரைத்து  சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இச்சாற்றை 50 மிலி வீதம் காலை மாலை என பருகி வந்தால் சிறுநீர் கல்லடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் விரைவில் குணமாகும்.
  2. சிறுகண் பீளை குடிநீராகவும் அருந்தலாம். 
குடிநீர் எவ்வாறு தயாரிப்பது?

சிறுகண் பீளை சமூலம், நெருஞ்சி சமூலம், மாவிலிங்க வேர், பேராமுட்டி வேர் ஆகியவற்றை தலா 25 கிராம் எடுத்து நசுக்கி அவற்றை 4 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அது 1 லிட்டராக சுண்டிய பின்பு அதை ஆற வைத்து, வடிகட்டி ஒரு நாளைக்கு 4 அல்லது 5 தடவை குடித்து வந்தால் சிறுநீர் கல் கரைந்து வெளியேறிவிடும்.

சிறுபீளையில் இருக்கும் மருத்துவகுணப் பொருட்கள் 



எளிதில் கிடைக்கும் இவ்வகையான மூலிகை செடிகளை பயன்படுத்தி நம்முடைய ஆரோக்கியத்தை பேணிக் காப்போம்.

Tuesday, October 17, 2017

இந்திய ரூபாயின் குறியீடு


அமெரிக்கா (💲), இங்கிலாந்து (£), ஐரோப்பிய ஒன்றியம் (€), ஜப்பான் (¥) போன்ற நாடுகளில் இருக்கும் பணத்திற்கு குறியீடு இருப்பது போல் இந்திய ரூபாய்க்கும் குறியீடு வேண்டும் என்று திரு மன்மோகன் சிங் தலைமையில் ஆன காங்கிரஸ் அரசாங்கம் மார்ச் 5, 2009 அன்று இந்தியா முழுவதுக்குமான ஒரு போட்டியை அறிவித்தது. அப்போது நிதி மந்திரியாக இருந்த திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் குறியீடு நம் இந்திய கலாசாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று சொன்னார்.

இப்போட்டியில் இந்தியா முழுவதும் 3331 பேர் கலந்து கொண்டார்கள். அவர்களில் இருந்து 5 பேர் உடைய வடிவமைப்பு  மட்டும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.


படத்தில் இருப்பவர்கள் ஷாரூக் J ஈரானி, KK சிபின், நந்திதா கோரியா மெஹரோத்ரா, D உதயக்குமார், ஹிதேஷ் பத்மஷாலி. இவர்கள் தான் அந்த 5 பேர்.

இவர்கள் வடிவமைத்த ரூபாய் குறியீடுகள் 


இந்த குறியீடுகளில் திரு உதயக்குமார் வடிவமைத்த ரூபாய் குறியீடு தான் வெற்றி பெற்றது. இந்த அறிவிப்பை இந்திய அரசாங்கம் ஜூலை 15, 2010 அன்று வெளியிட்டது.


போட்டியில் கலந்து கொள்ளும்போது உதயக்குமார் IIT மும்பை முதுகலை மாணவர், தற்போது IIT கவுகாத்தியில் இணை பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்த ரூபாய் குறியீட்டுக்கு இவர் கொடுத்த விளக்கம் 


Sunday, October 15, 2017

கர்ம வீரர் காமராசர் மந்திரிசபை


பெருந்தலைவர் திரு காமராசர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக 3 முறை இருந்துள்ளார்.

முதல் முறை: ஏப்ரல் 13, 1954 - மார்ச் 30, 1957
இரண்டாவது முறை: ஏப்ரல் 1, 1957 - மார்ச் 1, 1962
மூன்றாவது முறை: மார்ச் 3, 1962 - அக்டோபர் 2, 1963

திரு ராஜாஜி அவர்களுக்கு பிறகு (ஏப்ரல் 10, 1952 - ஏப்ரல் 12, 1954) திரு காமராசர் அவர்கள் முதன்முறையாக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இரண்டாவது முறை 5 ஆண்டுகள் முழுவதுமாக பதவியில் இருந்து மிகச்சிறப்பாக பணியாற்றினார். மூன்றாவது முறை 1.5 வருடம் மட்டுமே முதல்வராக இருந்தார். அதன் பின்பு கட்சி பணிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 1964 முதல் 1967 வரை இருந்துள்ளார்.


திரு காமராசர் அவர்கள் இரண்டாவது முறை முதல்வராக இருந்த பொழுது தன்னையும் சேர்த்து மொத்தம் 8 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை அமைத்தார். இந்த அமைச்சர்கள் அனைவரும் மிக சிறந்த திறமைசாலிகள் மற்றும் நேர்மையானவர்கள். இவர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் மிகச் சிறந்த பொற்கால ஆட்சியை கொடுத்தார். 

இந்த ஆட்சியில் தான் எண்ணற்ற திட்டங்கள் தமிழ் நாட்டில் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், அணைகள் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இன்றளவும் பேர் பெற்று நிற்கின்றன. இப்பொழுது வரை பெருந்தலைவர் ஆட்சியை தான் எல்லோரும் பொற்கால ஆட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்,

இவருடைய அமைச்சரவையில் திரு U கிருஷ்ணாராவ் அவர்கள் சபாநாயகராகவும், திரு B பக்தவத்சல நாயுடு அவர்கள் துணை சபாநாயகராகவும் பணியாற்றி உள்ளார்கள்.

கவர்னர்களாக 3 பேர் இருந்துள்ளார்கள். திரு AJ ஜான், திரு PV ராஜமன்னார், திரு பிஷுராம் மேத்தி போன்றவர்கள் ஆவர்.


பெருந்தலைவர் பள்ளிகளில் மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்து அதிக மாணவர்கள் படிப்பறிவு பெற ஊன்றுகோலாக விளங்கினார். அதனால்தான் திரு காமராசர் அவர்களை கல்விக்கு கண் கொடுத்த கடவுளாக மக்கள் போற்றுகின்றனர்.

காமராசர் என்றாலே எளிமை - நேர்மை - கனிவு 

வாழ்க காமராசர் புகழ்!

Friday, October 13, 2017

அறிஞர் அண்ணாதுரை மந்திரிசபை


அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மார்ச் 6, 1967 முதல் பிப்ரவரி 3, 1969 வரை இருந்தார். அப்பொழுது அவருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டார்கள்.


சட்டசபையின் சபாநாயகராக திரு சி பா ஆதித்தனர் அவர்களும் துணை சபாநாயகராக திரு புலவர் க கோவிந்தன் அவர்களும் இருந்தனர்.


ஆளுநராக மதிப்புக்குரிய திரு சர்தார் உஜ்ஜல் சிங் அவர்கள் இருந்தார்.


திரு அண்ணா அவர்கள் 10 அமைச்சர்களை தன்னுடைய அமைச்சரவையில் வைத்து கொண்டு நல்லாட்சியை கொடுத்தார். ஆனால் இப்பொழுது 33 அமைச்சர்களை கொண்டு முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியை நடத்த திணறிக்கொண்டு இருக்கிறார். யார் எப்பொழுது தன்னுடைய அமைச்சரவையை கவிழ்த்து விடுவார்களோ என்ற பயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டு இருக்கிறார். ஆட்சிக்கு முட்டுக்கட்டை கொடுப்பதற்கு திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுத்து புது அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார்.

வாழ்க தமிழ் நாடு! 

ஒரு செய்தி 

திரு NV நடராசன் அவர்களின் புதல்வர் திரு NVN சோமு 1996 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தி மு க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிப்பிற்குரிய பிரதமர் திரு தேவகவுடா அவர்கள் அமைச்சரவையில் இராணுவத்துறையின் இணை அமைச்சராக பணியாற்றி உள்ளார். ஆனால் துரதிஷ்டமாக நவம்பர் 14, 1997 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியானார். அப்பொழுது மதிப்பிற்குரிய திரு IK குஜ்ரால் அவர்கள் பிரதமராக இருந்தார்.

திரு NVN சோமுவின் மகள் திருமதி டாக்டர் கனிமொழி சோமு அவர்கள் தி மு க வின் மருத்துவ அணி செயலாளராக தற்பொழுது உள்ளார்.


ஒரு கேள்வி 

தி மு க உருவானதற்கு 5 தலைவர்களே முக்கிய காரணம், அவர்கள் திரு அண்ணாதுரை, திரு நெடுஞ்செழியன், திரு EVK சம்பத், திரு மதியழகன், திரு NV நடராசன், இவர்களை தான் ஐம்பெரும் தலைவர்கள் என்று அழைப்பார்கள். இப்படி வரலாறு இருக்கும் போது எப்படி திரு கலைஞர் கருணாநிதி அவர்கள் தி மு க வின் தலைவரானார்?

அறிஞர் அண்ணாவின் கோட்பாடு 

கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு 

அறிஞர் அண்ணாவின் ஆங்கில புலமை 

அமெரிக்காவில் உள்ள யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பொழுது மாணவர்கள் நிறைய கேள்வி கேட்டனர். அதில் ஒரு மாணவர் because என்ற வார்த்தை தொடர்ந்து 3 மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியத்தை சொல்லச் சொன்னார். திரு அண்ணா அவர்கள் சற்றும் தாமதிக்காமல் நொடிப் பொழுதில் சொன்னார் 

"No sentence ends with because because because is a conjunction"

என்ன புலமை ஆங்கிலம் மொழியில் ....!

Tuesday, October 10, 2017

யானை நெருஞ்சில் (Pedalium murex)


இத்தாவரம் யானை நெருஞ்சில் அல்லது யானை வணங்கி என்று அழைக்கப்படும். இதில் இருக்கும் முட்களைப் பார்த்து யானைகள் பயப்படும் என்பதனால் இப்பெயர் பெற்றது. 

இந்த மூலிகைச் செடி பயிர் நிலத்தில் நன்றாக வளரக்கூடியது, களை என்று தான் சொல்வோம், ஆனால் இதில் அளப்பரிய மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் இலை சதைப் பாங்காக இருக்கும். தண்ணீரில் போட்டால் அந்த நீர் உடனே கெட்டித்தன்மை ஆவதை பார்க்கலாம். இச்செடியில் உள்ள காய், பூ, இலை, தண்டு, வேர் என அனைத்தும் மருத்துவத்திற்கு உபயோகமாகும். அதனால்தான் இச்செடியை காயகல்ப மூலிகை என்று சொல்வார்கள்.

பொதுவாக தமிழ் நாட்டில் இம்மூலிகையை சிறுநீரகக் கல்லை கரைப்பதற்குக் கொடுப்பார்கள். இச்செடியின் சாற்றை 8 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் கல் கரைந்து சிறுநீர் மூலம் வெளியேறிவிடும்.

எப்படி தயாரித்து சாப்பிடுவது?
  1. யானை நெருஞ்சில் செடியை சமூலமாகவும், அத்துடன் மூச்சிரட்டை செடி (ஒரு கைப்பிடி அளவு) மற்றும் சிறுகண் பீளை (ஒரு கைப்பிடி அளவு) மூன்றையும் நன்றாக அரைத்து அதில் 2 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து 500மிலி ஆனவுடன் இறக்கி விடவும். இளஞ்சூட்டில் வடிகட்டி, பெரியவர்கள் 250மிலி காலை மாலை என இரு வேளை தொடர்ந்து 8 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அதன் பலனை நன்றாக உணர்வீர்கள்.
  2. யானை நெருஞ்சில் இலையை புளிச்ச நீரில் (பழைய சோற்று நீர்) ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த புளிச்ச நீரை குடித்தால் இதே பயனை அடையலாம். 
  3. வீட்டில் ரசம் பண்ணும்பொழுது அதில் இச்செடியின் இலைகளை போட்டுத் தயாரித்தால் அதற்கு பெயர் யானை நெருஞ்சில் ரசம். இதுவும் சிறுநீர் கல்லைக் கரைப்பதற்கு மிகவும் பயன்படும்.
இவ்வாறு மூன்று வகைகளில் இச்செடியை பயன்படுத்தலாம்.

இம்மூலிகையின் மருத்துவக்குணப் பொருட்கள்



எளிதில் கிடைக்கும் இம்மூலிகைகளை பயன்படுத்தி நம்முடைய ஆரோக்கியத்தை பேணிக்காப்போம்.

Sunday, October 8, 2017

சிறுநீரகக் கல் - மருத்துவம்


ஒருவருக்கு சிறுநீரகக் கல் பிரச்சனை ஏற்பட்டால் அதனால் ஏற்படும் வலி சொல்லி மாளாது. இந்தியாவில் 10% ஆண்களுக்கும் 4% பெண்களுக்கும் இப்பிரச்சனை உள்ளது. இதை ஆங்கிலத்தில் யூரோலித்தியாசிஸ் (Urolithiasis/Nephrolithiasis) என்று அழைப்பார்கள். மேற்கு உலகத்தில் இதன் பாதிப்பு இந்தியாவை விட மிக மிக அதிகம்.

இது எதனால் ஏற்படுகிறது?

அறிவியலின் கூற்றுப்படி நாம் மிக குறைந்த அளவு தண்ணீர் எடுத்து கொள்வதாலும், முறையற்ற உணவு பழக்க வழக்கத்தாலும் மற்றும் அதிக மனஅழுத்தத்தாலும் கூட இப்பிரச்சனை ஏற்படுகிறது.


உணவு வகைகளில் நாம் ஆக்சலேட் (Oxalate) அதிகம் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்வது தான் இதற்கு முக்கிய காரணம். இது பொதுவாக உருளை கிழங்கு, ருபார்ப் (Rhubarb), பீன்ஸ், ஸ்பீனாச் (Spinach) மற்றும் சாக்லேட் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. அதனால் இப்பிரச்சனை உள்ளவர்கள் இது போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.


இது மட்டும் இல்லாமல் அடிக்கடி டீ குடிப்பதனாலும் இப்பிரச்சனை வரும். ஏனென்றால் டீ அதிக அளவு நீரை உடலில் இருந்து வெளியேற்றிவிடும். அதனால் நம்முடைய சிறுநீர் மிக அடர்த்தியாகி கல் உண்டாகிறது. சிறுநீர் கல் என்பது கால்சியம் ஆக்சலேட் (Calcium oxalate), யூரிக் ஆசிட் (Uric acid) போன்றவற்றால் ஆனது. 


சிறுநீரகக் கல் பல அளவுகளில் இருக்கும். பெரிய அளவில் இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலியை தாங்கவே முடியாது.


அப்படியானால் எது மாதிரியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்? 

நம் உணவில் சிட்ரிக் அமிலம் (Citric acid) அதிகம் உள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளவேண்டும். இது பொதுவாக பழங்களில் அதிகம் காணப்படும்.

                            
சித்த மருத்துவத்தில் எப்படி இப்பிரச்சனையை போக்குவது?

சித்த மருத்துவத்தில் மூன்று மூலிகைகளை இதற்கு பயன்படுத்துகிறார்கள், அவை ...
  1. மூக்கிரட்டை (Boerhavia diffusa
  2. சிறுகண் பீளை (Aerva lanata)
  3. யானை நெருஞ்சில் (Pedalium murex)
இந்த மூலிகைகளை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்.

Sunday, September 10, 2017

சித்த மருத்துவத்தில் சிறுநீர் சோதனை



சித்த மருத்துவத்தில் சிறுநீர் சோதனை பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்....

காலையில் எழுந்தவுடன் கழிக்கும் சிறுநீரை ஒரு கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டு உற்றுப் பாருங்கள்.
  • எண்ணெய் துளி பாம்பு போல் நெளிந்து காணப்பட்டால் உங்களுக்கு வாதம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
  • எண்ணெய் துளி மோதிரம் போல் வட்டமாக காணப்பட்டால் உங்களுக்கு பித்தம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
  • எண்ணெய் துளி முத்து போல் அப்படியே நின்றால் உங்களுக்கு கபம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
அதுபோல்
  • எண்ணெய் துளி வேகமாக சிறுநீரில் பரவினால் நோய் விரைவில் குணமாகும் 
  • எண்ணெய் துளி அப்படியே நின்றால் நோய் குணமாகத் தாமதமாகும்.
  • எண்ணெய் துளி கீழே அமிழ்ந்தால் நோய் குணமாகாது என்று புரிந்து கொள்ளலாம்.

இதுமாதிரி சிறுநீரின் நிறம் மற்றும் மணம் ஆகியவற்றின் மூலம் நோயின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

Friday, September 1, 2017

கட்டுக்கொடி


கட்டுக்கொடி ஒரு ஏறு கொடியினம், முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக்கொடி என இரண்டு வகைப்படும். இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இனவிருத்தியாகும். விதை மூலமும் இனவிருத்தி செய்யப்படும்.

மருத்துவப் பயன்கள்:
  1. குளிர்ச்சியூட்டியாகவும், உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.
  2. பாக்களவு இலையை மென்று தின்றால் இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் குறையும்.
  3. இலை, வேப்பங்கொழுந்து சமஅளவு அரைத்து காலை மட்டும் எடுத்து வந்தால் நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம் போன்ற நோய்கள் குணமாகும்.
  4. இலையுடன் மாம்பருப்பும் சமமாக அரைத்து பால், சர்க்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். 
  5. சிறிதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாதநோய், கீல் நோய் குணமாகும்.
  6. இலைச்சாற்றை  சர்க்கரை நீரில் கலந்து வைத்தால் சிறிது நேரத்தில் ஜெல்லி போல் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.
  7. வேரையும், கழற்சி பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு வரும் வயிற்றுவலி தீரும்.
இதிலுள்ள மருத்துவ குணப்பொருட்கள்  



கழற்சிக்காய் + விதை (சித்தா மருந்தகத்தில் கழற்சிப் பருப்பு கிடைக்கும்)


Thursday, August 31, 2017

ஐயமிட்டு உண் - ஐஸா ஃபாத்திமா ஜாஸ்மின்


ஐஸா ஃபாத்திமா ஜாஸ்மின் ஒரு விவசாயி மகள், இவர் படித்து பல் மருத்துவராக பணிபுரிகிறார். இவர் ஆரம்பித்திருக்கும் செயல் மிகவும் பாராட்டுக்குரியது.

அப்படி என்ன செய்தார்.......

திருவான்மியூரை சேர்ந்த இவர், பெசன்ட் நகரிலுள்ள ஒரு பொது இடத்தில் குளிர்சாதனப்பெட்டியை வைத்து அதில் வீடுகளில் மிச்சமாகும் உணவுப்பொருட்களை வைக்கிறார். அதனால் அவ்வழியே வரும் ஏழை மக்கள் தங்களுடைய பசியை போக்கி கொள்கின்றனர். இப்படி செய்வதன் மூலம் வீடுகளிலோ திருமணம் மண்டபங்களிலோ மிச்சமாகும் உணவுகளை குப்பையில் கொட்டாமல் பசியோடு இருப்பவர்களுக்கு கொடுத்து பசியாற்றலாம். 

இது மட்டுமல்லாமல், உணவோடு பழைய புத்தகம், துணிமணிகள் போன்றவற்றையும் வைத்திருக்கிறார். இதனை பார்த்து மற்றவர்களும் அவர்களுக்கு தேவையில்லாதவைகளை, மற்றவர்கள் உபயோகிக்க கூடிய பொருட்களை இங்கு வைத்துவிட்டு செல்கிறார்கள். 

இது மிகவும் போற்றுதலுக்கு உரிய செயலாகும். இது மேலும் மேலும் வளர மக்களின் பேராதரவு தேவை.

இந்த அரிய பணி சிறக்கட்டும்!!

Sunday, August 6, 2017

மறந்துபோன (மறக்கடிக்கப்பட்ட) விஞ்ஞானி - எல்லப்பிரகடா சுப்பாராவ் (Yellapragada SubbaRow)


திரு சுப்பாராவ் அவர்கள் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் பீமாவரம் என்ற பகுதியில் (இப்பொழுது ஆந்திராவில் உள்ளது) பிறந்தவர். இவர் வாழ்ந்த காலம் 12 ஜனவரி 1895 முதல் 8 ஆகஸ்ட் 1948 வரை, அதாவது 53 வருடங்கள் வாழ்ந்தவர்.  இந்த குறுகிய காலத்தில் மருத்துவ உலகில் அளப்பரிய சாதனைகள் பல படைத்தவர். 

இவருடைய பள்ளிப்படிப்பு இராஜமுந்திரியிலும், கல்லூரிப் படிப்பு சென்னை மருத்துவக் கல்லூரியிலும் முடிந்தது. மேலும் உயர்படிப்பிற்கு அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் உள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திற்கு 12 அக்டோபர் 1922 ஆம் ஆண்டு சென்றார். 

அங்கு அவர் கண்டுபிடித்த சாதனைகள் பல, அவற்றில் சிலவற்றை நினைவு கூறுவோம்.

இவர் உயிர்வேதியல் (Biochemistry) துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அத்துறையில் உள்ள நிபுணத்துவத்தின் அடிப்படையில் நம் உடலில் உள்ள "பாஸ்பரஸ்" (Phosphorus) கனிமத்தை அளவிடக்கூடிய வழிமுறையை கண்டுபிடித்தார். இன்றளவும் அம்முறையை "ஃபிஷ்கி & சுப்பாராவ்" பாஸ்பரஸ் கண்டுபிடிக்கும் வழிமுறை என்றே அழைக்கப்படுகிறது.


இவருடைய கண்டுப்பிடிப்புக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நம் உடலில் ஆற்றல் எப்படி தேக்கி வைக்கப்படுகிறது மற்றும் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதாகும். நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரைடு செரிமானத்திற்கு பின்பு குளூக்கோஸ் மற்றும் ஆற்றலாக வெளிப்படுகிறது. ஆற்றலின் வெளிப்பாடு அடினோசின் ட்ரை பாஸ்பேட் (ATP) என்று அழைக்கப்படும். இந்த சங்கிலி செயல்முறையை வெளிக்கொணர்தலில் இவரின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


இது மட்டுமில்லை, நம் உடலில் வைட்டமின் பி9 (Vitamin B9) இருப்பதையும் இதன் குறைபாடு இரத்தசோகை என்ற நோயை உண்டாக்கும் என்பதையும் கண்டறிந்தார். முக்கியமாக கர்ப்ப காலத்தில் தாய்க்கு இந்த வைட்டமின் குறைபாடு இருந்தால் அது குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். வைட்டமின் பி9 யின் இன்னொரு பெயர் போலிக் ஆசிட் (Folic Acid) என்பதாகும். 


இவருடைய வைட்டமின் பி9 கண்டுபிடிப்பு மற்றுமொரு மருந்து கண்டுபிடிப்பிற்கு உறுதுணையாக இருந்தது. அது இரத்தப் புற்றுநோயுக்கு பயன்படுத்தப்படும் மீதோட்ரெக்ஷேட் (Methotrexate) என்ற மருந்தாகும். 
  

மற்றுமொரு அறிய கண்டுபிடிப்பு நாம் இன்றளவும் பயன்படுத்தும் ஹெட்ரஸான் (Hetrazan) என்று அழைக்கப்படும் டைஎத்தில் கார்ப்பமசின் (Diethylcarbamazine) என்ற மருந்தாகும். இது ஃபைலாரியாஸிஸ் (Filariasis) என்ற நோயுக்கு அருமருந்தாகும். இந்த நோயை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் நம் கால்கள் யானை கால் (Elephantiasis) போன்று பருத்துவிடும்.



கடைசியாக இவர் கண்டுப்பிடிப்புக்களில் ஆகச் சிறந்தது ஆரியோமைசின் (Aureomycin) என்றழைக்கப்படும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்தாகும். இது "ரிக்கெட்ஷியா" (Rickettsia) நோயை குணப்படுத்தும் வல்லமையுடையது. இன்றளவும் உபயோகத்தில் உள்ளது.


இவ்வளவு கண்டுபிடிப்புக்களை செய்து நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாத்தவரின் பெயர் இதுவரை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படவும் இல்லை, அது மாதிரி மற்ற மதிப்பு மிக்க பரிசுகளை கொடுத்து கௌரவிக்கப்படவும் இல்லை. நம் இந்திய அரசும் இதுவரை உயரிய விருது கொடுத்து கௌரவிக்கவும் இல்லை. 

அதனால், நாம் திரு சுப்பாராவ் அவர்களின் நினைவு நாள் 8 ஆகஸ்ட் ஐ நினைவு கூர்ந்து அவரை போற்றுவோம்.