Monday, December 26, 2016

தாம்பூலம் மருத்துவ குணங்கள்


தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்ந்தது ஆகும். இதை ஆங்கிலத்தில் Betel leaf, betel nut and slaked lime (CaO + water) என்று சொல்வார்கள்.  

வெற்றிலை 
வெற்றிலையில் உள்ள மருத்துவ குண பொருட்கள் 

பாக்கு
பாக்கில் உள்ள மருத்துவ குண பொருட்கள்



சுண்ணாம்பு

(CaO + water) = Ca(OH)2

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் 
  1. டையாஸ்டேஸ் (Diastase) என்ற பொருள் வெற்றிலையில் அதிகம் உள்ளது. இது ஸ்டார்ச் போன்ற பொருளை செரிக்க உதவுகிறது.
  2. நம் வாயில் உமிழ்நீரை அதிகம் சுரக்க செய்கிறது. உமிழ்நீரில் உள்ள நொதிகள் கிருமி நாசினியாகவும், உணவை செரிமானம் பண்ணவும் உதவுகிறது.
  3. உடல் பருமனை குறைக்கவும் உதவி புரிகிறது. ஒரு வெற்றிலை உடன் சில மிளகு துண்டுகளை சேர்த்து 2 மாதங்கள் உண்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
  4. தாய்ப்பாலை சுரக்கவும் பயன்படுத்தப் படுகிறது. ஒரு இலையை எண்ணெயில் ஊற வைத்து மார்பகங்களின் வெளிப்புறத்தில் வைக்க வேண்டும்.
பாக்கின் மருத்துவ குணங்கள்
  1. மலச்சிக்கலை போக்கும். மலத்துவாரத்தில் உள்ள புண்களை குணப்படுத்தும்.
  2. பற்களில் கசியும் இரத்தத்தை போக்கும்.
சுண்ணாம்பின் மருத்துவ குணங்கள் 
  1. எண்ணெய் பதார்த்தங்களின் செரிமானத்திற்கு உதவுகிறது.
  2. பாக்கில் உள்ள மருத்துவ குண பொருட்களை வெளிக்கொணர உதவுகிறது.
  3. ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது.
  4. பற்களை உறுதியுடன் வைத்துக் கொள்கிறது.
தாம்பூலம் பயன்படுத்தும் முறை

ஒரு பெரிய வெற்றிலையின் பின்புறத்தில் சிறிதளவு சுண்ணாம்பை தடவிக்கொள்ள வேண்டும். அதனுடன் மிகச்சிறிய அளவு பாக்கை சேர்த்து, மடித்து வாயில் வைத்து நன்றாக மென்று உமிழ்நீரை விழுங்க வேண்டும். தாம்பூலத்தில் உள்ள இந்த மூன்று பொருட்கள் நம் உடலில் உள்ள முக்குணமான வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்றையும் சரியான விகிதத்தில் சமன் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. 

Friday, November 25, 2016

எட்டு போடு

எட்டு போட்டால் நோய் விட்டு போகும் 


இது ஒரு நடை பயிற்சி !

நம்முடைய வீட்டில் முன்னாடி எல்லாம் நம் பெற்றோர்கள் ஒரு எட்டு போயிட்டு வா என்று சொல்லி கேள்விப் பட்டிருப்போம். அதனுடைய அர்த்தம் இதுதான் .....

இந்த பயிற்சி பண்ணுவதற்கு 10 அடி இடம் தேவைப்படும். இதை வீட்டிலோ அல்லது வெட்ட வெளியிலோ பண்ணலாம். படத்தில் உள்ளது போல் எட்டு வடிவத்தில் குறித்துக்கொண்டு நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சியை ஒரு நாளைக்கு இரு வேளை செய்ய வேண்டும்., குறைந்தது 30 நிமிடம் பண்ண வேண்டும். முதல் 15 நிமிடம் தெற்கிலிருந்து வடக்காகவும் அடுத்த 15 நிமிடம் வடக்கிலிருந்து தெற்காகவும் நடக்க வேண்டும். 

இப்பயிற்சியை முறையாக செய்து வந்தால் நம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து நம்முடைய ஐம்புலன்களும் நன்றாக வேலை செய்யும். 

பயிற்சியை செய்து பலன் பெறுங்கள்!

Figure 8 walking exercise
Figure 8 walking exercise - Video
Figure 8 walking exercise - Video

Tuesday, October 4, 2016

யோஷினோரி ஓசுமி (Yoshinori Ohsumi) - நோபல் பரிசு 2016 (மருத்துவம்)


யோஷினோரி ஓசுமி, 2016 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுகிறார். இவருடைய ஆராய்ச்சி மனித உடலில் செல்கள் எவ்வாறு பிரிகிறது? தன்னுள் அமைந்துள்ள பொருட்களை எப்படி மறுசுழற்சி செய்துகொள்கிறது என்று ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளார். இந்த கண்டுபிடிப்பின் மூலம் புற்றுநோய், பார்க்கின்சன், நீரழிவு போன்ற நோய்களுக்கான காரணம் மற்றும் அதற்கான நிவாரணம் குறித்து அறிந்து கொள்ள முடியும்.   

இவருடைய ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் ஈஸ்ட்டை (Yeast) பயன்படுத்தி தன்னைத்தானுண்ணல் (Autophagy) செயல்முறையை கண்டுபிடிப்பது மற்றும் அதனுடைய (ATG) குறியீட்டு மரபணுக்களை (Genes) அடையாளம் காண்பது அதன்மூலம் நோய்க்கான காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுத்துவது என்பதாகும். அதில் இவர் வெற்றியும் கண்டுள்ளார்.





வாழ்த்துக்கள்!

Tuesday, September 27, 2016

கற்பூரவள்ளி


கற்பூரவள்ளி சித்த மருத்துவத்தில் "கற்ப மூலிகை" என்று அழைக்கப்படும். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இந்த மருத்துவ பயன்களுக்கு காரணம் அதில் பொதிந்துள்ள வேதிப்பொருட்களே ஆகும். இவை டெர்பினாய்ட்ஸ் (Terpenoids) என்ற வகையை சேர்ந்ததாகும்.


சித்தர்கள் அகத்தியர் மற்றும் தேரையர் இந்த மூலிகையை பற்றி பாடல்களாக வடித்துள்ளனர். அவை 

காச இருமல் கதித்தம சூரியயையம் 
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் வீசுசுரங் 
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு 
(அகத்தியர் குணபாடம்)   

கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே 
(தேரையர் குணபாடம்)  

குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். அப்போது கற்பூரவள்ளி இலையை பிழிந்து சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு (Palm Sugar) கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் இருமல் குணமாகும்.


இம்மூலிகை காச நோய்க்கு அருமருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறெடுத்து அதனுடன் தேன் (Honey) கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறையும்.

ஆகையால் நம் வீட்டில் கற்பூரவள்ளியை வளர்த்து அதனுடைய மருத்துவ பயனை அடைவோம்.

Sunday, September 25, 2016

பொன் முட்டையிடும் வாத்து

மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதல்வர் திரு ஜெயலலிதா அவர்கள் 22-09-2016 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் இரவு 10.15 க்கு சேர்க்க படுகிறார். 

  
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இரவு 1.00 மணிக்கு முதல்வர் அவர்களின் உடல்நிலை குறித்து செய்தி வெளியிடுகிறது. இதை கேட்டவுடன் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் இரவு 1.05 மணி முதல் மருத்துவமனை முன்பு திரளாக குவிகிறார்கள். அவர்கள் அனைவரும் அன்று இரவு மற்றும் மறுநாள் முழுவதும் மருத்துவமனை கதவின் முன்பு காத்திருக்கிறார்கள். கடவுளின் அருளால் நமது முதல்வர் உடல்நலம் பெற்று ஆரோக்கியமாக இருக்கிறார்.


படம்: நன்றி விகடன்

நமது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பாசத்தை கண்டவுடன் உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு. இதே பாசத்தை நமது விவசாயிகளிடமும், மக்களிடமும் காண்பித்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அவர்களுக்கு தெரியாத என்ன? நமது முதல்வர் அவர்கள் அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் "பொன் முட்டையிடும் வாத்து" என்று! முதல்வர் மட்டும் இல்லையென்றால் அமைச்சர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் "செல்லா காசு"!

வாழ்க நமது அமைச்சர்களின் அளப்பரிய சேவை!

மக்கள் மத்தியில் இன்னொறு விதமான எண்ண ஓட்டமும் உள்ளது. இந்த காய்ச்சல் உண்மையான காய்ச்சலா? இல்லை சொத்து குவிப்பு வழக்கில் வரும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முன்னாடியே ஏற்படுத்திக் கொண்ட நாடகக் காய்ச்சலா? அல்லது உண்மையிலேயே முதல்வர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறாரா?

ஆண்டவனுக்கே வெளிச்சம்!!

நம் மதிப்பிற்குரிய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

Friday, September 23, 2016

இந்திய தொழிற்நுட்பக் கல்லூரிகள் (IITs)


இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் 8 மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இந்திய தொழிற்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழிற்நுட்பக் கல்லூரிகள் இல்லாத மாநிலங்கள் பின்வருமாறு 

1) அருணாசலப் பிரதேசம்
2) ஹரியானா  
3) மணிப்பூர் 
4) மேகாலயா 
5) மிசோரம் 
6) நாகலாந்து 
7) சிக்கிம் 
8) திரிபுரா 

Sunday, September 18, 2016

இந்திய மொழிகள்

இந்தியா பல மொழி வழி மாநிலங்கள் சேர்ந்த தேசமாகும். அதனால் இந்திய தேசத்திற்கு என்று ஒரு தேசிய மொழி கிடையாது. ஆகையால் "ஹிந்தி" மொழியை தேசிய மொழி (National Language) என்று யாரும் கூற வேண்டாம். அது ஒரு அதிகார அலுவல் (Official) மொழியாகும். 


இந்தியாவில் 8 வது அரசியலமைப்பு அட்டவணையின் படி 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டவையாகும், அவை 


இது தவிர இந்திய மாநிலங்களின் அதிகாரபூர்வ மொழிகளை பற்றி பார்ப்போம்.


ஆகையால் ஹிந்தி மொழியை தேசிய மொழி என்று பரப்புரை செய்ய வேண்டாம். 

Saturday, September 17, 2016

கடிகாரமும் உடல் உறுப்பு பணிகளும்



கடவுள் ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் இரண்டு மணி நேரம் ஒதுக்கி உள்ளார். அந்தந்த நேரத்தில் அந்த உடல் உறுப்பு அதனதன் வேலையை செய்ய நாம் அனுமதிக்க வேண்டும், இல்லையேல் நமது ஆரோக்கியம் பாழாகும்.

காலை 3.00 மணியிலிருந்து 5.00 மணி வரை 


இது நுரையீரலுக்கான நேரம், இந்நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாக சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்ய உகந்த நேரமாகும்.

காலை 5.00 மணியிலிருந்து 7.00 மணி வரை 


இது பெருங்குடலுக்கான நேரம், இந்த நேரத்தில் காலை கடன்களை கண்டிப்பாக முடித்து விட வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். இந்த நேரம் உடலுறவுக்கும் உகந்த நேரமாகும், ஏனென்றால் இந்நேரத்தில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை அதிக அளவு இருக்கும்.

காலை 7.00 மணியிலிருந்து 9.00 மணி வரை 


இது வயிற்றுக்கான நேரம், இந்த நேரத்தில் கல்லை தின்றாலும் வயிறு கரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும். காலை உணவை எப்பொழுதுமே தவிர்க்க கூடாது. காலையில் சாப்பிடுவது தான் உடலில் ஒட்டும்.

காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை 


இது மண்ணீரலுக்கான நேரம், காலையில் உண்ட உணவு செரித்து இரத்தமாகவும், ஊட்டச்சத்தாகவும் மாற்றும் நேரமாகும். இச்சமயம் தண்ணீரே குடிக்கக் கூடாது. நீரிழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரமாகும்.

காலை 11.00 மணியிலிருந்து 13.00 மணி வரை 


இது இதயத்திற்கான நேரமாகும், இந்நேரத்தில் அதிகமாக பேசுதல், கோபப்படுதல், படபடத்தல் கூடாது. இதய நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்கும் நேரமாகும்.

மதியம் 13.00 மணியிலிருந்து 15.00 மணி வரை


இது சிறுகுடலுக்கான நேரம், இந்த நேரத்தில் மிதமான உணவை உட்கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுப்பது நல்லது.

மதியம் 15.00 மணியிலிருந்து 17.00 மணி வரை


இது சிறுநீர்ப்பைக்கான நேரம், நீர் கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரமாகும்.

மாலை 17.00 மணியிலிருந்து 19 மணி வரை 


இது சிறுநீரகங்களின் நேரமாகும், பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிகாலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய மற்றும் வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

இரவு 19.00 மணியிலிருந்து 21.00 மணி வரை 


இது பெரிகார்டியத்தின் நேரமாகும், பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஜவ்வு ஆகும். இந்நேரம் இரவு உணவுக்கு உகந்த நேரமாகும்.

இரவு 21.00 மணியிலிருந்து 23.00 மணி வரை


இது டிரிபிள் ஹீட்டருக்கான நேரம். டிரிபிள் ஹீட்டர் என்பது உடல் உறுப்பு அல்ல. இது உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்நேரம் உறங்கச் செல்ல உகந்த நேரமாகும்.

இரவு 23.00 மணியிலிருந்து 1.00 மணி வரை


இது பித்தப்பைக்கான நேரம், இந்த நேரத்தில் தூங்காமல் விழித்திருந்தால் பித்தப்பை செயல்பாடு பாதிக்கும்.

இரவு 1.00 மணியிலிருந்து 3.00 மணி வரை


இது கல்லீரலுக்கான நேரம், இந்நேரத்தில் உட்கார்ந்து இருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கண்டிப்பாக படுத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் உடலில் ஓடும் இரத்தத்தை கல்லீரல் சுத்திகரித்து அனுப்பும் நேரமாகும். இந்நேரம் விழித்திருந்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பு இல்லாமல் பாதிப்பு அடைவீர்கள்.

Friday, September 16, 2016

அங்கீகாரம் - இந்தியாவின் சாபக்கேடு



அலோக் சாகர், இவர் IIT-Delhi முன்னால் பேராசிரியர். தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள மலைவாழ் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த கிராமத்தின் பெயர் "கோச்சமு" என்ற மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் கிராமம். இங்கு சாலை வசதியோ மின்சார வசதியோ எதுவும் கிடையாது. ஏறத்தாழ 1000 பேர் வசிக்கும் கிராமம் ஆகும்.  

இவரைப்பற்றி பேச என்ன காரணம்? இவர் இந்தியாவின் ரிசர்வ் பேங்க் முன்னால் கவர்னர் திரு ரகுராம் ராஜனின் ஆசிரியர் ஆவார். இவர் டெல்லி IIT கல்லூரியில் இளநிலை படிப்பையும், முதுநிலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பை அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் (Houstan, Texas) பல்கலைக்கழகத்திலும் முடித்திருக்கிறார். அதற்கு பிறகு டெல்லி IIT கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியிருக்கிறார், பின்பு 1982 ஆண்டு பணியிலிருந்து விலகி ஆதிவாசி மக்களுக்காக கடந்த 32 ஆண்டுகளாக உழைத்து கொண்டு இருக்கிறார். 

இவருடைய தினசரி வாழ்க்கை, விதைகளை சேகரிப்பது, அதை பழங்குடி மக்களிடம் கொடுத்து செடி, கொடி  மரங்களை நடவைப்பது. இதுவரை 50000 மரங்களை நட்டு வளர்த்துள்ளார். இவரின் சொத்து கதவு இல்லாத ஓலை குடிசை வீடு, ரொம்ப பழைய சைக்கிள், 3 குர்தா மட்டுமே. ஒவ்வொரு நாளும் 60 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து பக்கத்து கிராமங்களுக்கு சென்று அந்த பழங்குடி மக்களுக்கு இயற்கையை பற்றி புரிய வைத்து இயற்கையோடு இயைந்து வாழ வழி சொல்லித்தருகிறார். இவரது சேவை மிகவும் மகத்தானது.

எளிமையின் உருவம்! தீர்க்கதரிசனமான பார்வை. இவருடைய அப்பா இந்திய அரசாங்கத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர் (IRS officer). அம்மா, இயற்பியல் பாடம் நடத்தும் கல்லூரி பேராசிரியை மற்றும் இவரது சகோதரர் தற்சமயம் டெல்லி IIT கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவ்வளவு இருந்தும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வந்து விட்டார். அவருக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். 

இவரை பற்றி இப்பத்தான் தெரிய வருகிறது, ஏன்? ஏனெனில் அவர் வசிக்கும் ஊரில் சமீபத்தில் தேர்தல் நடந்தது, அச்சமயம் அதிகாரிகள் அவரை அந்த ஊரை விட்டு வெளியேற சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான் அவர் தன்னைப்பற்றி சொல்லியிருக்கிறார். அதிகாரிகள் குறுக்கு விசாரணை செய்து உறுதிப்படுத்திய பிறகுதான் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.

நமக்குத்தான் இது போன்ற மக்கள் உயிருடன் இருக்கும்போது அங்கீகரிக்க தெரியாதே! செத்த பிறகுதானே புகழ் பாடுவோம் - என்ன சாபக்கேடோ!

Alok Sagar   

Wednesday, August 31, 2016

இந்தியா


இந்த கார்ட்டூன் திரு சிராஜ் காசிம் என்பவரால் வரையப்பட்டது. இது ஒடிசா மாநிலத்தில் நடந்த சம்பவம், திரு தானா மாஜி என்பவருடைய மனைவி இறந்த பிறகு உடலை 10 கிலோமீட்டர் தூக்கிக் கொண்டு நடந்தே வந்திருக்கிறார். ஏனெனில் அவருக்கு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் ஏழை மலைவாழ் குடிமகன். இந்த செய்தியை படித்த வலியின் காரணமாக வரையப்பட்டது.

நன்றி: சிராஜ் காசிம் 

அய்யோ பதறுதுங்க
அடிவயிறு எரியுதுங்க
பொய்யா நெசமான்னும்
புத்திக்கு வெளங்கலங்க

கட்டுனவ செத்துப்போனா
காரியந்தான் செய்வாங்க
பொட்டலமா தூக்கிக்கிட்டா
பொடிநடையா போவாங்க?

பெத்த மக அழுதுகிட்டே
பேசாம நடக்கயில
கத்தியழ ஒருத்தருமே
கடுகளவும் நெருங்கலயே

பொட்டியில காசிருந்தா
போயிருப்பா கவுரமா
துட்டில்லா புருசனுக்கும்
தோள் வலியக் கொடுக்காம

என்னங்க நாடு இது
எழவெடுத்த ஆட்சி இது
பொட்டுன்னு போனாலும்
பொத குழியும் கிடைக்காம

போறது பொருளா? உசுரா?
புரிஞ்சிக்க முடியலைங்க
பாரத மாதாவான்னு
பிரிச்சிப்பாத்து வெளியிடுங்க!

நன்றி: யுவபாரதி 

Tuesday, July 12, 2016

பஞ்சபூத ஸ்தலங்கள்


நிலம் - காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோவில் 

நீர் - திருவானைக்காவல் - ஜம்புகேசுவரர் கோவில் 

நெருப்பு - திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோவில் 

காற்று - திருகாளஹஸ்தி - காளத்தீஸ்வரர் கோவில் 

ஆகாயம் - சிதம்பரம் - தில்லை நடராஜர் கோவில்

Saturday, June 4, 2016

முதலுதவி பொருட்கள் விற்கும் சாதனம்

14 வயது சிறுவன் டெய்லோர் ரொசந்தல் (Taylor Rosenthal).... அடுத்த பில்கேட்ஸ் என்றால் நம்ப முடிகிறதா?

அப்படி அச்சிறுவன் சாதித்ததுதான் என்ன ........தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கிறதா ... வாருங்கள் பார்ப்போம்


அச்சிறுவனுக்கு பேஸ்பால் விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு. அவ்வாறு விளையாடும்பொழுது தனக்கோ அல்லது தன்னுடன் விளையாடுபவர்களுக்கோ காயமோ ..சிராய்ப்போ ஏற்படுவதுண்டு. ஒவ்வொறு முறையும் அருகிலுள்ள கடைக்கோ அல்லது மருந்து கடைக்கோ சென்று முதலுதவி பொருட்கள் வாங்க வேண்டியிருந்தது. இதை கவனித்த இச்சிறுவன், முதலுதவிப் பொருட்களை ATM போன்று பணம் செலுத்தி உடனுக்குடன் கிடைப்பது போல் பண்ணினால் அனைவருக்கும் உபயோகமாகுமே என்று எண்ணி இதை வடிவமைத்து அதற்கு காப்புரிமையும் பெற்று விட்டான்.  

தற்பொழுது ரெக்மெட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதை பிரபலப் படுத்தியதன் மூலம் இரண்டு இலட்சம் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை பெற்றிருக்கிறது அந்நிறுவனம். மேலும் நிறைய கேளிக்கை பூங்காக்களில் இச்சாதனத்தை நிறுவ முதலீடு செய்திருக்கிறார்கள். 

இப்ப புரியுதா....இச்சிறுவன் அடுத்த பில்கேட்ஸ் என்று.... நாமும் நம் இளைய தலைமுறையை ஊக்கப்படுத்துவோம்.

Sunday, May 22, 2016

முடக்கத்தான் கீரை


முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். மழை காலங்களில் மட்டுமே கிடைக்கும் கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் எல்லோருடைய வீட்டு கொல்லைப் புறங்களிலும் இது படர்ந்து கிடக்கும்.

கை கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதனால் இக்கீரைக்கு முடக்கு + அற்றான் = முடக்கற்றான் என்ற காரணப் பெயர் வந்தது. இதுவே நாளடைவில் மருவி முடக்கத்தான் என்று அழைக்கப் படுகிறது. இதனுடைய தாவரப் பெயர் கார்டியோஸ்பெர்மம் ஹலிக்காகேபம் (Cardiospermum helicacabum) என்பதாகும். இதை ஆங்கிலத்தில் பலூன் வைன் (Balloon vine) என்றும் அழைப்பார்கள். 

இதனுடைய மருத்துவ குணத்திற்கு காரணம் இதில் பொதிந்துள்ள வேதிப் பொருள்கள் ஆகும். அவையாவன அபிஜெனின் (Apigenin), லூட்டியொலின் (Luteolin), கார்டியோஸ்பெர்மின் (Cardiospermin), ஸ்கொபாலெடின் (Scopoletin), அம்பெல்லிபெரோன் (Umbelliferone) மற்றும் பல.




முடக்கத்தான் கீரையை மாதம் இருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சிறிது கசப்பு சுவையுடையது, ஆனால் சமைத்து சாப்பிட்டால் இதன் கசப்பு சுவை அவ்வளவாக தெரியாது. இதை உணவில் தோசையாகவோ அல்லது துவையல் செய்தோ சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

இக்கீரை மூட்டுகளில் தங்கியிருக்கும் யூரிக் ஆசிட் (Uric acid) என்ற காரணியை கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். அவ்வாறு செய்யும் பொழுது உடலுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உப்புக்களை தங்க வைத்து விடுகிறது, அதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

முடக்கத்தான் கீரையை கொதிக்க வைத்து உண்ண வேண்டாம், ஏனெனில் கொதிக்க வைக்கும் பொழுது அதிலுள்ள மருத்துவகுண வேதிப்பொருள் அழிந்துவிடும்.

ஆயுர்வேதம்


தமிழ்நாட்டில் தற்பொழுது ஆறு வகையான மருத்துவ முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன அவை 
  1. தமிழர் மருத்துவ முறை (சித்த மருத்துவம்)
  2. ஆங்கிலேயர் மருத்துவ முறை (அலோபதி மருத்துவம்)
  3. ஆரியர் மருத்துவ முறை (ஆயுர்வேத மருத்துவம்)
  4. முகமதியர் மருத்துவ முறை (யுனானி மருத்துவம்)
  5. இயற்கை மருத்துவ முறை (இயற்கை மருத்துவம்)
  6. ஜெர்மானிய மருத்துவ முறை (ஹோமியோபதி மருத்துவம்)
ஆயுர்வேதத்திற்கு முதலாசிரியர்கள் தேவதாசர் (தன்வந்திரி), சிசிருதர் என்பவர்களே. இவர்கள் இருவரும் ஒரு காலத்தவர்கள். கி.மு 6000 ஆண்டுகளில் வாழ்ந்தவர்கள். சிசிருதர் தேவதாசரின் சிஷ்யர் ஆவார். 

ஆயுர்வேதமானது 100  அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொறு அத்தியாயமும் 100 சுலோகங்களால் அமைக்கப் பட்டிருக்கிறது. 

ஆயுர்வேதம் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை பின்வருமாறு 
  1. சல்லியம் (இரண வைத்தியம்)
  2. சாலக்கியம் (கழுத்துக்கு மேற்பட்ட வியாதிகள்)
  3. காயம் (மற்ற உடலின் வியாதிகள்)
  4. பூதம் (பிசாசு குணங்கள்)
  5. கௌமாரம் (குழந்தை வைத்தியம்)
  6. ஆகதம் (விஷங்களைப் பற்றியது)
  7. இரசாயனம் (இளமையாக்கல்)
  8. வசீகரணம் (வீரிய விருத்தி)
சிசிருதர், விசுவாசமித்திரரின் மூத்த பிள்ளையுக்கு அடுத்த பிள்ளையாவார். இவர்கள் 7 பேர் அண்ணன் தம்பிகள் ஆவர். மூத்த பிள்ளையை தவிர ஏனையோர் தேவதாசரிடம் ஆயுர்வேதம் கற்றுக் கொண்டார்கள்.

சிசிருதர், சிசிருத சம்ஹிதை என்ற நூலை எழுதினார். இவர் இரண வைத்தியத்தில் (சர்ஜரி) நிபுணர். சம்ஹிதை என்றால் மஞ்சரி என்ற பொருள். அதாவது அவருக்கு முன்னிருந்த வைத்தியர்களுடைய அபிப்பிராயங்களை எல்லாம் எடுத்து அக்காலத்துக்கு தகுந்தபடி ஒழுங்குபடுத்தி நூல் செய்வதாகும். 

Wednesday, May 18, 2016

சோனுநிகம் சாலையோர வீடியோ



சோனுநிகம் பிரபல பாலிவுட் பாடகர். இவர் தமிழிலும் சில பாடல்கள் பாடியுள்ளார். அண்மையில் மும்பை வீதியில் பிச்சைகாரன் வேஷத்தில் அமர்ந்து பாட்டு பாடினார். அவர் வேஷம் போட்டு அமர்ந்து இருந்ததனால் ஒருவரும் கவனிக்கவில்லை. அவரவருக்கு அவரவர் வேலை, அதனால் ஏது நேரம் மனமயங்கும் பாடலை நின்று கேட்டு ரசிப்பதற்கு.............?

இதுவே கச்சேரியில் சோனுநிகம் பாடுகிறார் என்றால் ஆயிரக்கணக்கில் கொடுத்து ரசிப்பார்கள். இதுதானே உண்மை .....! போலியான உலகம்.

ஆனால் ...ஒரு இளைஞர் அவர் அருகில் வந்து அவரை பாராட்டி விட்டு, அவரிடமே நீங்கள் நன்றாக பாடுகிறீர்கள், உங்கள் பாடலை நான் பதிவு பண்ணிக்கலாமா? என்று அனுமதி கேட்டு பாடலை பதிவு பண்ணிக் கொள்கிறார். பாடல் பாடி முடிந்தவுடன் சோனுநிகம் கிளம்ப எத்தனிக்கும்போது அவரிடம் 12 ரூபாயை கொடுத்து நீங்கள் காலை உணவு சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள், சாப்பிட வைத்து கொள்ளுங்கள் என்று சொல்வது ...உண்மையில் மனதை வருடியது.

இந்த அனுபவத்தைப் பற்றி அவர் கூறுவது ....

நான்தான் அதே குரல்தான்...உடையிலும் தோற்றத்திலும் தான் வித்தியாசம் காண்பித்தேன். அத்தனை மனிதர்கள் பார்த்து கடந்து போனாலும் ஒருவர் வந்து நீங்க சாப்பிட்டீங்களா? என்று அன்பாக கேட்டு 12 ரூபாயை கொடுத்த பொழுது அத்தனை மகிழ்ச்சி ..! லட்சக்கணக்கில் சம்பாதித்த போது கிடைக்காத சந்தோசம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நம்மைச் சுற்றி நடக்கும் பல நல்ல விஷயங்களை நாம் கவனிக்க தவறி விடுகிறோம்....... பாராட்டவும் மறந்து விடுகிறோம்!

Tuesday, May 17, 2016

நெய்

'
"நெய்யில்லா உண்டி பாழ்" என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும்.

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட நெய் எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.



பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்கு பின் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்து விடும். இதனை சட்டியில் வைத்து காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரிந்து, வாசனை உண்டாகும். இதுவே நெய்யாகும். இதனை வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். 

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருந்து கெடாமல் பாதுகாக்க நெய்யை பயன்படுத்தி வந்துள்ளனர். ஒரு தேக்கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

மொத்த கொழுப்பு = 99.5%

நிறைவுற்ற (பூரித) கொழுப்பு அமிலம் (Saturated Fatty Acids) = 77-81%
ஒற்றை அபூரித கொழுப்பு அமிலம் (Mono Unsaturated Fatty Acids) = 16-17%
நிறைவற்ற (அபூரித) கொழுப்பு அமிலம் (Poly Unsaturated Fatty Acids) = 3-6%




ஒமேகா கொழுப்பு அமிலம் (ω -fatty acids) என்றால் என்ன?

கொழுப்பு அமிலத்தில் முதல் கார்பன் அணு முனை ஒமேகா என்று அழைக்கப்படும். அபூரித இணைப்பு எந்த கார்பன் அணுவில் ஆரம்பிக்கிறதோ அந்த எண்ணை குறித்து பெயரிடப்படும். 


நெய்யை எவ்வாறு உணவில் பயன்படுத்த வேண்டும்?

"நெய் உருக்கி மோர் பெருக்கி ....."

நெய்யை இளஞ்சூட்டில் நன்றாக உருக்கி சுடுசாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து சூட்டை தணிக்கும். மலச்சிக்கலை போக்கும். வாத பித்த கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
  • ஞாபக சக்தியை தூண்டும் 
  • சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும் 
  • கண் பார்வையை கூட்டும்   
குடற்புண் குணமாக 

குடற்புண் என்பது சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருந்தாலோ அல்லது பட்டினி கிடந்தாலோ ஏற்படும். குடலில் உள்ள ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புற சுவரை புண்ணாக்கி விடுகிறது. மேலும் வாயு கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்து கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை பொருள் உபயோகிப்பவர்களுக்கும், அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் குடற்புண் உண்டாகிறது. இதனால் வாயிலும் புண் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இது போன்ற உபாதை உள்ளவர்கள், நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடற்புண் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும் மற்றும் மலச்சிக்கல் நீங்கும், ஜீரண சக்தியை தூண்டும்.