Sunday, April 25, 2021

கோவிட்-19 (Covid-19 Vaccine) தடுப்பூசி

கோவிட்-19 என்ற வைரஸ் பெரும் தொற்று நோய் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நோய் தொற்று முதன்முதலில் சீனா நாட்டில் ஹூபை (Hubei) மாகாணத்தில் உள்ள வூஹான் (Wuhan) நகரத்தில் டிசம்பர் 2019 ஆண்டு கண்டறியப்பட்டது.


இந்த வைரஸ், வூஹான் நகரத்தில் உள்ள கறி சந்தையில் விற்கப்பட்ட வௌவால் (Bat) கறியிலிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கும் என்று மருத்துவ உலகம் நம்பியது.


உலக சுகாதார மையம் (WHO) மார்ச் 11, 2020 ல் இந்த நோய் உலகப்பெரும் தொற்று (Pandemic) என்று அறிவித்தது. கோவிட்-19 நோய் மிகக்குறுகிய காலத்தில் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி ஏராளமான உயிர்களை காவு வாங்கியுள்ளது. அது மட்டுமில்லாமல் உலக பொருளாதாரத்தையே முடக்கிப் போட்டுள்ளது. இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், மூக்கு ஒழுகுதல், மூச்சு வாங்குதல், மணம், சுவை அறியும் தன்மை இழத்தல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு முதலியன முக்கிய அறிகுறிகளாக தென்பட்டன. 

இந்த நோய் சாதாரணமாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எச்சில் மூலமாகவோ அல்லது தொடுதல் மற்றும் தும்மலின் போது காற்றின் வழியாக சீக்கிரமாக பரவுகிறது. இந்த நோய் தொற்றின் பரவலை தனி மனித இடைவெளி (6 அடி), முகக்கவசம் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் மூலம் கட்டுப்படுத்தலாம்.  


COVID-19 என்பது கொரோனா வைரஸ் நோய் (COrona VIrus Disease)-2019 என்பதின் சுருக்கமாகும். இந்த வைரஸ் நோய் மனிதனுடைய நுரையீரலை தாக்கி நிமோனியாவை உண்டுபண்ணி (நுரையீரலில் நீர் கோர்த்துக்கொள்வது) சுவாசிக்க முடியாமல் செய்து அதன்மூலம் உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை வேலையிழக்க செய்து கடைசியில் உயிரை கொல்கிறது. மருத்துவ உலகம் இந்த வைரஸை சார்ஸ்-கோவி-2 (SARS-COV-2; Severe Acute Respiratory Syndrome-Corona Virus-2) என்றழைக்கிறது. இந்த நோய் முதல் அலையில் அதிகமாக வயதானவர்களை தாக்கியது மேலும் சுவாச நோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களை அதிகம் பாதித்தது. கோவிட்-19 தாக்கியவர்களை முதலில் தனியாக பிரித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த நோய் 7 லிருந்து 10 நாட்களுக்குள் சரியாகி விடும். இந்த காலத்தில் நோயுற்றவர்கள் தேவையான சத்துள்ள உணவு பொருட்களை முக்கியமாக வைட்டமின் C & D நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சுவாச பிரச்னை ஏற்படும். அவர்களுக்கு பிராணவாயு (Oxygen) தனியாக கொடுக்க வேண்டும் (வெண்டிலேட்டர் மூலமாக) மற்றும் மருத்துவரின் மேற்பார்வையில் முக்கிய மருந்துகளை (Remdesivir மற்றும் Corticosteroids) கொடுத்து குணப்படுத்தலாம். 


கோவிட்-19 வைரஸ் தன்னைத்தானே உருமாற்றிக்கொண்டு வெவ்வேறு வடிவில் இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று உக்கிரமாக வெளிப்படுத்தி அதிவேகமாக பரவி மேலும் மேலும் உலக மக்களை அச்சுறுத்துகிறது. ஆகையால் இதை கட்டுப்படுத்த வேண்டுமானால் தடுப்பூசி மருந்து தான் ஒரே தீர்வு என்று உலக நாடுகளும், உலக சுகாதார மையம் மற்றும் பெரிய மருந்து நிறுவனங்களும் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டி ஒரு வருடத்தில் முறையான தடுப்பூசிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

தடுப்பூசி என்பது கீழ்காணும் வழிமுறைகளில் தயாரிக்கப்படும்.
  1. நோயை உண்டுபண்ணும் வைரஸை முழுவதும் செயல் இழக்கச்செய்து அல்லது கொன்று அதை உடம்பில் செலுத்துவது (Inactivated Vaccine)
  2. நோய் உண்டுபண்ணும் வைரஸின் செயல் திறனை மட்டும் (Virulence) நீக்கி பின்பு உயிருடன் கூடிய வைரஸை உடம்பில் செலுத்துவது (Live-attanuated Vaccine).
  3. நோயை உண்டுபண்ணும் வைரஸின் புரதத்தை (Protein) அதாவது COVID-19 வைரஸின் புரதத்தை (Spike protein) எடுத்து மற்றொரு நோய் உண்டுபண்ணாத வைரஸில் புகுத்தி பின்பு உடலில் செலுத்துவது (Viral Vector Vaccine).
  4. நோய் உண்டுபண்ணும் வைரஸின் மரபணுவை (DNA or RNA or mRNA) மட்டும் தனியாக எடுத்து அதை கொழுமியம் நானோ துகள்களுடன் (Lipid Nanoparticles) சேர்த்து பின்பு உடலில் செலுத்துவது (Nucleic Acid Vaccine).

நியூக்ளிக் ஆசிட் (மரபணு) தடுப்பூசி என்பது Deoxyribonuclic Acid (DNA) முதலில் messenger Ribonucleic Acid (mRNA) ஆக மாற்றப்பட்டு அத்துடன் கொழுமியம் நானோ துகள்களை சேர்த்து பின்பு அதை உடலில் செலுத்துவது ஆகும். ஏனென்றால் mRNA என்பது நிலையானது அல்ல, ஆகையால் கொழுமியம் நானோ துகள்களுடன் சேர்க்கும்பொழுது mRNA நிலைத்தன்மை பெறுகிறது. இந்த முறையில் கோவிட்-19 தடுப்பூசி மருந்து தான் முதன்முதலாக தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.


உலக மருந்து நிறுவனங்கள் மேலே குறிப்பிட்ட முறைகளில் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து ஒவ்வொரு நாட்டின் அரசிடமும் கட்டுப்படியான விலையில் விற்பனை செய்துள்ளன. குறிப்பாக Pfizer, Moderna, AstraZeneca, Novavax மற்றும் Janssen நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு கொடுத்துள்ளது. அதுமாதிரி சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகள் தங்கள் நாட்டிலே தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடித்து உற்பத்தி பண்ணி மக்களுக்கு அளித்திருக்கிறது.

கீழ்காணும் நாடுகளில் பின்வரும் தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளித்து மக்களுக்கு செலுத்தி வருகிறார்கள்.


இந்திய மக்கள் அனைவரும் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும், குறிப்பாக சுவாச நோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்.


நன்றி: Nature Publications; CDC; Countries' website 

Thursday, April 8, 2021

தமிழக தேர்தல் திருவிழா 2021

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடக்கும் தேர்தல் திருவிழா 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரிடமும் தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டு விட்டது. தேர்தல் ஆணையம் முக்கிய நிகழ்வுகள் பற்றி கீழ்காணும் அட்டவணையை வெளியிட்டது.

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 2021 ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 38 மாவட்டங்களையும் 234 தொகுதிகளாக பிரித்து  தேர்தல் நடைபெற்றது. இதில் 6.26 கோடி மக்கள் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. 



தேர்தல் ஆணையம் சொன்ன வாக்காளர்கள் கணக்கு சரியானதா என்று புரிய வில்லை. ஏனென்றால் இதே தேர்தல் ஆணையம் தான் ஒவ்வொரு முறையும் வெவ்வேறான கணக்கை சொல்லியிருக்கிறது. எது உண்மையான வாக்காளர்கள் எண்ணிக்கை என்று தெரியவில்லை. 


தமிழ் நாடு தேர்தல் களத்தில் இதுவரையில்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் கட்சிகள் போட்டியில் கலந்து கொண்டது. ஏறத்தாழ 40 கட்சிகள் தனியாகவோ அல்லது கூட்டணி அமைத்தோ போட்டியிட்டன. அதுவும் இந்த தேர்தலில் பெரிய ஆளுமைகள் திரு கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா இல்லாத சட்டமன்ற தேர்தலாகும். அதிமுக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு அணி, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் ஒரு அணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாகவும், மேலும் மற்ற உதிரி கட்சிகளும் இந்த தேர்தலில் பங்கேற்றன. முக்கியமாக நாம் தமிழர் கட்சி 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் இந்த சட்டசபை தேர்தலில் களமிறக்கி பெண்களுக்கு அரசியலில் 50 சதவீதம் ஒதுக்கீடு கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

தேசிய ஜனநாயக கூட்டணி  


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 


மக்களின் முதல் கூட்டணி  


அமமுக கூட்டணி 


நாம் தமிழர் கட்சி 


சகாயம் அரசியல் பேரவை கூட்டணி 


மற்ற கட்சிகள் 


கட்சி தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் 


மொத்தமாக 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் 4 கோடியே 57 இலட்சத்து 46 ஆயிரத்து எழுநூற்று தொண்ணூற்று மூன்று (4,57,46,793) ஓட்டுக்கள் EVM இயந்திரத்தின் மூலமும், 4 இலட்சத்து 89 ஆயிரத்து அறுநூற்று தொண்ணூற்று ஒன்பது (4,89,699) ஓட்டுக்கள் தபால் மூலமாகவும், மொத்தமாக 4 கோடியே 62 இலட்சத்து 36 ஆயிரத்து நானூற்று தொண்ணூற்று இரண்டு (4,62,36,492) ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இதுவே குறிப்பிட தகுந்த ஓட்டு சதவீதம் தான் ஏனென்றால் கொரோனா என்ற உயிர்கொல்லி நோய் இரண்டாம் அலையாக தமிழகம் எங்கும் பரவலாக பரவிக்கொண்டிருக்கிறது என்ற சூழ்நிலையில் 70 சதவீதத்திற்கு மேல் பதிவாயிருந்தது பாராட்டத்தக்க அம்சமாகும். இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதமும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.06 சதவீதமும் பதிவாகியிருந்தது. 

தமிழ் நாடு 2021 தேர்தல் வாக்கு சதவீதம்


தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இம்முறை தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பெருமளவில் ஆதரவு தந்து ஆட்சி கட்டிலில் அமர்த்தி விட்டார்கள். திமுக தனியாக 125 இடங்களிலும், கூட்டணியாக 159 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த கூட்டணியில் மதிமுக, கொமதேக, மமக மற்றும் தவாக ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் அவர்களுடைய வெற்றியும் திமுக வெற்றியாக கணக்கில் கொள்ளப்படுவதால் திமுக மொத்தமாக 133 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


தொடர்ந்து 10 வருடங்களாக ஆளும் கட்சியாக (2011 - 2021) இருந்த அதிமுக மோசமாக தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு இல்லாமல் பாராட்டும் விதத்தில் தனியாக 65 இடங்களிலும், கூட்டணியாக 75 இடங்களிலும் வெற்றிப்பெற்று வலுவான எதிர்க்கட்சியாக வந்துள்ளது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 3.15 சதவீதம் மட்டுமே. 


இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக கூட்டணி மற்றும் கமல் அவர்களின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி, இரண்டுமே எதிர்பார்க்காத விதத்தில் தோல்வியை சந்தித்து உள்ளன. அமமுக கூட்டணி 2.85 சதவீதமும், மநீம கூட்டணி 2.74 சதவீதமும் மட்டுமே வாக்குகள் பெற்றுள்ளன.



234 தொகுதிகளில் 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் தேர்தலில் நிறுத்தி போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் 6.58 சதவீதம் வாக்குகளை பெற்று 3 ஆவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. இக்கட்சியின் சார்பாக யாரும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகாமல் போனாலும் அனைத்து தொகுதியிலும் சீரான வாக்குகளை பெற்று அனைத்து மக்களுக்குமான கட்சியாக உருவாகி உள்ளது.


தமிழக அரசியல் கட்சிகள் பெற்ற வெற்றி மற்றும் வாக்கு சதவீதம் பட்டை வரைபடமாக (Bar Graph) கொடுக்கப்பட்டுள்ளது.


கூட்டணிகள் (திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மநீம கூட்டணி) பெற்ற வாக்குகள், நாம் தமிழர் கட்சி மற்றும் NOTA  பெற்ற வாக்குகள் பை வரைபடமாக (Pie Graph) கொடுக்கப்பட்டியிருக்கிறது.


திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும் இந்த சமயத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தலைவிரித்து ஆடிக்கொண்டியிருக்கிறது. தேர்தல் பரப்புரையின் போது அனைத்து கட்சிகளும் மக்களை கூட்டி எங்களுக்கு தான் அதிகமாக ஆதரவு இருப்பதுபோல் மக்களிடம் காட்டிக்கொண்டார்கள். அதன் விளைவு கற்பனை பண்ண முடியாத தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அதிமுக அரசு வைத்து சென்றிருக்கும் கடன் 5 இலட்சம் கோடியாக இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக எப்படி இவை அனைத்தையும் சமாளித்து நல்லாட்சி தருகிறது என்று பார்ப்போம்.

நன்றி: ECI, The Hindu, Wikipedia

Monday, August 19, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள்

முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சியில் தமிழ்நாடு மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஜனவரி 8, 2019 முதல் ஆகஸ்ட் 15, 2019 வரை 5 புதிய மாவட்டங்கள் உருவாகி விட்டன. 7 மாதங்களில் 5 மாவட்டங்கள் உதயமாகி விட்டன, என்ன காரணம்? 

ஓட்டு அரசியலா? ஜாதி அரசியலா? அல்லது, உண்மையில் மக்களின் வசதிக்காகவா? 

எதன் அடிப்படையில் ஒரு மாவட்டத்தை இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ பிரிக்கிறார்கள்? மக்கள் தொகையின் அடிப்படையிலா அல்லது பரப்பளவின் அடிப்படையிலா?

1956 வருடம் தமிழ்நாடு மாவட்டங்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்தது. அப்பொழுது மக்கள் தொகை தோராயமாக 3 கோடியே 20 இலட்சம்.


மாவட்டங்கள்: 1) சென்னை 2) செங்கல்பட்டு 3) வடஆற்காடு 4) தென் ஆற்காடு 5) சேலம் 6) நீலகிரி 7) கோயம்புத்தூர் 8) திருச்சிராப்பள்ளி 9) தஞ்சாவூர் 10) மதுரை 11) இராமநாதபுரம் 12) திருநெல்வேலி 13) கன்னியாகுமரி

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்படுகிறது. அதன்படி தமிழ் நாடு மக்கள் தொகையின் விபரம் பின்வருமாறு


2011 ஆண்டுக்கு பின் வரும் விபரங்கள் அனைத்தும் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது தமிழ் நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் 1.015% சதவீதத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி பார்த்தால் 2021 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் மக்கள் தொகை தோராயமாக 8 கோடியே 40 இலட்சம் ஆகும். 

டாக்டர் இராமதாஸ் அவர்களின் (பாட்டாளி மக்கள் கட்சி) அறிக்கையில் 12 இலட்சம் மக்கள் தொகைக்கு 1 மாவட்டம் வேண்டும் என்று சொல்கிறார். அதன்படி பார்த்தால் 2021 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ் நாட்டில் மொத்தம் 70 மாவட்டங்களை உருவாக்க வேண்டும். இது சாத்தியமாகுமா?

ஏனென்றால் இப்பொழுது அரசாங்கத்திற்கு வரும் வருமானத்தில் 71% சதவீதம் அளவு அரசு வேலை செய்பவர்களின் சம்பளமாகவும், ஒய்வு ஊதியமாகவும் கொடுக்கப்படுகிறது. அப்படியென்றால் 70 மாவட்டங்கள் உருவாக்குவதற்கு இப்பொழுது அரசு வேலை செய்பவர்களின் எண்ணிக்கையில் இன்னொரு மடங்கு ஆட்களை நியமிக்க வேண்டும். ஆனால் மக்கள் தொகை அதே அளவுதான் இருக்கப்போகிறது. அரசாங்கம் எப்படி வருமானத்தை பெருக்க முடியும்? ஒரே வழி வரியை உயர்த்தி மக்கள் தலையில் கட்டுவதுதான். அதனால் இது சாத்தியமாகாது.

ஆகையால் 20 இலட்சம் மக்கள் தொகைக்கு 1 மாவட்டம் என்று மொத்தம் 42 மாவட்டங்களை உருவாக்கி நிர்வகிக்கலாம். தற்சமயம் உள்ள 37 மாவட்டங்களின் பெயர்கள், பரப்பளவு மற்றும் மக்கள் தொகை விபரம் பின்வருமாறு (புதிதாக தோன்றிய மாவட்டங்களின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கணக்கிடப்படவில்லை)

2011 மக்கள் தொகை கணக்கு 

இந்த அட்டவணையின் படி சில மாவட்டங்களை (மக்கள் தொகை 25 இலட்சத்திற்கும் மேல்) மட்டும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கலாம். 

எத்தனை மாவட்டங்களை உருவாக்கினாலும் அது மக்கள்நலன் சார்ந்ததாகவும், ஊழலற்ற மாவட்ட நிர்வாகம் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 27-12-2020 அன்று பிரிக்கப்பட்டது.

நன்றி: தி ஹிந்து, இந்தியன் ஆன்லைன், விக்கிப்பீடியா, சென்சஸ் அறிக்கை 

Saturday, May 25, 2019

இந்திய ஜனநாயக திருவிழா 2019

இந்திய ஜனநாயக திருவிழா 2019, ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து மே 23 ஆம் தேதி முடிவு வெளியிடப்பட்டது. 


மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு (வேலூர் தொகுதி நீங்கலாக) தேர்தல் நடைபெற்றது. இம்முறை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சிறு தாமதம் ஆனது, ஏனென்றால் தொகுதிக்கு 5 VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு அது ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளுடன் ஒத்து போகுதா என்று சரி பார்க்கப்பட்டது.

இம்முறையும் மக்கள் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெருவாரியாக வாக்களித்து மீண்டும் திரு மோடி அவர்களை பிரதமராக தேர்ந்தெடுத்து உள்ளார்கள். பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களில் வெற்றிப் பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.



இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழ் நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், பஞ்சாப் நீங்கலாக மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி பெருவாரியாக வெற்றிப் பெற்றுள்ளது. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவிலும் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்துள்ளது. 
  
தமிழ் நாடு இந்த தடவையும் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் தனித்தன்மையுடன் விளங்குகிறது. 2014 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 37 இடங்களில் தனித்து வெற்றிப் பெற்றது. இந்த முறை (2019) திராவிட முன்னற்ற கழகத்தின் கூட்டணி 37 இடங்களில் அமோக வெற்றிப் பெற்றுள்ளது. வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றியடைந்துள்ளது. தேனி தொகுதியில் திரு பன்னீர்செல்வம் அவர்களுடைய மகன் திரு இரவீந்திரநாத் வெற்றிப் பெற்றுள்ளார். பிஜேபி போட்டியிட்ட 5 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை. 

தமிழ் நாட்டில் கள்ளக்குறிச்சியையும் சேர்த்து மொத்தம் 33 மாவட்டங்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பது விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து 33 ஆவது மாவட்டமாக உதயமானது. இந்த அறிவிப்பை முதலமைச்சர் திரு பழனிச்சாமி அவர்கள் 8 ஜனவரி 2019 அன்று அறிவித்தார். 


33 மாவட்டங்கள் உள்ள தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.


தமிழகத்தைப் பொறுத்தவரை 5 முனைப் போட்டியாக இருந்தது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமுமுக கூட்டணி, மக்கள் நீதி மையம் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என்று வேட்பாளர்கள் களத்தில் நின்று போட்டியிட்டார்கள். முக்கியமாக நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் 20 ஆண் வேட்பாளர்களையும், 20 பெண் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியிருந்தது.


தமிழக மக்கள் எப்பவும் திமுக, அதிமுகவுக்கு ஓட்டளித்து பழக்கப்பட்டவர்கள் என்பதனால் இம்முறை திமுகவுக்கு ஓட்டளித்து அமோக வெற்றிப் பெற வைத்துள்ளார்கள். தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுகவின் பெருவாரியான வாக்குகளைப் பிரிப்பார்கள் என்று நினைத்த நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்கள்.


மக்கள் நீதி மையம் 10 இடங்களில் 5 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக நான்கு இடங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள். நாம் தமிழர் கட்சி 8 இடங்களில் 5 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றுள்ளனர். இது தமிழக இளைஞர்களின் மனநிலை புதிய கட்சிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் அதன் சதவீதம் 


தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம், பட்டை வரைபடத்தில் (Bar Chart) கொடுக்கப்பட்டுள்ளது. 


விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திரு இரவிக்குமார், மதிமுகவை சேர்ந்த திரு கணேசமூர்த்தி, ஐக்கிய ஜனநாயக கட்சியை சேர்ந்த திரு பாரிவேந்தர் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த திரு சின்னராஜ் ஆகிய அனைவரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்கள்.

அதுபோல் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த திரு கிருஷ்ணசாமி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

பாராளுமன்றத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 தேதி தேர்தல் நடைப்பெற்றது. திமுக சார்பாக திரு துரைமுருகன் அவர்களின் மகன் திரு கதிர் ஆனந்த் அவர்களும், அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் திரு சண்முகம் அவர்களும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருமதி தீபலட்சுமி அவர்களும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவு ஆகஸ்ட் 9 தேதி வெளியிடப்பட்டது. வேலூர் தொகுதியில் திமுகவின் திரு கதிர் ஆனந்த் அவர்கள் திரு சண்முகம் அவர்கள் பெற்ற வாக்குகளை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்: திரு கதிர் ஆனந்த் (4,85,340 வாக்குகள், 47.38%), திரு சண்முகம் (4,77,199 வாக்குகள், 46.58%), தீபலட்சுமி (26995 வாக்குகள், 2.63%) மற்றும் நோட்டா (9417 வாக்குகள், 0.92%). இத்தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 10,24,352. தொகுதியில் உள்ள மொத்த வாக்குகள் 14,32,555.

நன்றி: The Hindu, ECI, Wikipedia