Showing posts with label Kidney stone. Show all posts
Showing posts with label Kidney stone. Show all posts

Friday, November 30, 2018

மூக்கிரட்டை (Boerhaavia diffusa)


மூக்கிரட்டை கொடியினத்தை சேர்ந்த கீரை வகையாகும். இது நமது ஊரில் புல்வெளிகளிலும், வயல் வெளியிலும் படர்ந்து வளர்ந்து இருப்பதை காணலாம். இதனுடைய தாவரவியல் பெயர் போரோவியா டிஃபியூசா (Boerhaavia diffusa).  

மூக்கிரட்டை பற்றிய அகத்தியர் குணபாடம் 

"சீத மகற்றுந் தினவடக்குங் காந்திதரும் 
வாத வினையை மடிக்குங்காண் பேதி
கொடுக்குமதை உண்டாக்காற் கோமளமே! பித்தம்
அடுக்குமே மூக்கிரட்டையாய்…"    

மூக்கிரட்டை சீதள நோய்களை அகற்றும், தினவு என்கிற நமைச்சலைப் போக்கும், உடலுக்கு அழகை தரும், வாதத்தால் (காற்றால்) உண்டாகும் நோய்களை அழிக்கும், ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப் போக்கும், பித்தமும் அதிமாகும். ஆகையால் ஒவ்வொரு மருந்துக்கும்  பக்கவிளைவுகள் உள்ளது என்பதால் அளவோடு சாப்பிட வேண்டும்.

மூக்கிரட்டையின் வேர் அதிகமான மருத்துவ குணங்களை கொண்டது. மேலும் இதனை சமூலமாகவும் உபயோகப்படுத்தலாம்.

மூக்கிரட்டை கசாயம் 

நிழலில் உலர வைக்கப்பட்ட வேரை (10 கி) தண்ணீரில் (200 மிலி) நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு 100 மிலி யாக வந்தவுடன் கசாயத்தை ஆற வைத்து வடிகட்டி பருக வேண்டும். காலை மாலை இரு வேளையாக 20 மிலி அளவு உணவுக்கு முன்பு குடிக்க வேண்டும். 

இவ்வாறு செய்து வந்தால் உடலில் ஏற்பட்ட தைராய்டு பிரச்சனை குணமாகும். உடல் பருமன் குறையும் மேலும் தொப்பையை குறைக்கும். சிறுநீரக கல்லை வெளியேற்றுவதற்கு இது அருமருந்தாகும். இரத்த சோகையை போக்கி இரத்த ஓட்டத்தை சரி செய்யும்.

இத்தனை பயன்களுக்கும் முக்கிய காரணம் இதில் பொதிந்து இருக்கும் மருத்துவ குண வேதிப்பொருட்கள் ஆகும்.



Sunday, October 8, 2017

சிறுநீரகக் கல் - மருத்துவம்


ஒருவருக்கு சிறுநீரகக் கல் பிரச்சனை ஏற்பட்டால் அதனால் ஏற்படும் வலி சொல்லி மாளாது. இந்தியாவில் 10% ஆண்களுக்கும் 4% பெண்களுக்கும் இப்பிரச்சனை உள்ளது. இதை ஆங்கிலத்தில் யூரோலித்தியாசிஸ் (Urolithiasis/Nephrolithiasis) என்று அழைப்பார்கள். மேற்கு உலகத்தில் இதன் பாதிப்பு இந்தியாவை விட மிக மிக அதிகம்.

இது எதனால் ஏற்படுகிறது?

அறிவியலின் கூற்றுப்படி நாம் மிக குறைந்த அளவு தண்ணீர் எடுத்து கொள்வதாலும், முறையற்ற உணவு பழக்க வழக்கத்தாலும் மற்றும் அதிக மனஅழுத்தத்தாலும் கூட இப்பிரச்சனை ஏற்படுகிறது.


உணவு வகைகளில் நாம் ஆக்சலேட் (Oxalate) அதிகம் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்வது தான் இதற்கு முக்கிய காரணம். இது பொதுவாக உருளை கிழங்கு, ருபார்ப் (Rhubarb), பீன்ஸ், ஸ்பீனாச் (Spinach) மற்றும் சாக்லேட் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. அதனால் இப்பிரச்சனை உள்ளவர்கள் இது போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.


இது மட்டும் இல்லாமல் அடிக்கடி டீ குடிப்பதனாலும் இப்பிரச்சனை வரும். ஏனென்றால் டீ அதிக அளவு நீரை உடலில் இருந்து வெளியேற்றிவிடும். அதனால் நம்முடைய சிறுநீர் மிக அடர்த்தியாகி கல் உண்டாகிறது. சிறுநீர் கல் என்பது கால்சியம் ஆக்சலேட் (Calcium oxalate), யூரிக் ஆசிட் (Uric acid) போன்றவற்றால் ஆனது. 


சிறுநீரகக் கல் பல அளவுகளில் இருக்கும். பெரிய அளவில் இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலியை தாங்கவே முடியாது.


அப்படியானால் எது மாதிரியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்? 

நம் உணவில் சிட்ரிக் அமிலம் (Citric acid) அதிகம் உள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளவேண்டும். இது பொதுவாக பழங்களில் அதிகம் காணப்படும்.

                            
சித்த மருத்துவத்தில் எப்படி இப்பிரச்சனையை போக்குவது?

சித்த மருத்துவத்தில் மூன்று மூலிகைகளை இதற்கு பயன்படுத்துகிறார்கள், அவை ...
  1. மூக்கிரட்டை (Boerhavia diffusa
  2. சிறுகண் பீளை (Aerva lanata)
  3. யானை நெருஞ்சில் (Pedalium murex)
இந்த மூலிகைகளை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்.