Thursday, April 8, 2021

தமிழக தேர்தல் திருவிழா 2021

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடக்கும் தேர்தல் திருவிழா 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரிடமும் தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டு விட்டது. தேர்தல் ஆணையம் முக்கிய நிகழ்வுகள் பற்றி கீழ்காணும் அட்டவணையை வெளியிட்டது.

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. 2021 ஆண்டு கணக்கின்படி தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 38 மாவட்டங்களையும் 234 தொகுதிகளாக பிரித்து  தேர்தல் நடைபெற்றது. இதில் 6.26 கோடி மக்கள் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. 



தேர்தல் ஆணையம் சொன்ன வாக்காளர்கள் கணக்கு சரியானதா என்று புரிய வில்லை. ஏனென்றால் இதே தேர்தல் ஆணையம் தான் ஒவ்வொரு முறையும் வெவ்வேறான கணக்கை சொல்லியிருக்கிறது. எது உண்மையான வாக்காளர்கள் எண்ணிக்கை என்று தெரியவில்லை. 


தமிழ் நாடு தேர்தல் களத்தில் இதுவரையில்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் கட்சிகள் போட்டியில் கலந்து கொண்டது. ஏறத்தாழ 40 கட்சிகள் தனியாகவோ அல்லது கூட்டணி அமைத்தோ போட்டியிட்டன. அதுவும் இந்த தேர்தலில் பெரிய ஆளுமைகள் திரு கருணாநிதி மற்றும் செல்வி ஜெயலலிதா இல்லாத சட்டமன்ற தேர்தலாகும். அதிமுக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு அணி, தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் ஒரு அணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாகவும், மேலும் மற்ற உதிரி கட்சிகளும் இந்த தேர்தலில் பங்கேற்றன. முக்கியமாக நாம் தமிழர் கட்சி 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் இந்த சட்டசபை தேர்தலில் களமிறக்கி பெண்களுக்கு அரசியலில் 50 சதவீதம் ஒதுக்கீடு கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

தேசிய ஜனநாயக கூட்டணி  


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 


மக்களின் முதல் கூட்டணி  


அமமுக கூட்டணி 


நாம் தமிழர் கட்சி 


சகாயம் அரசியல் பேரவை கூட்டணி 


மற்ற கட்சிகள் 


கட்சி தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் 


மொத்தமாக 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் 4 கோடியே 57 இலட்சத்து 46 ஆயிரத்து எழுநூற்று தொண்ணூற்று மூன்று (4,57,46,793) ஓட்டுக்கள் EVM இயந்திரத்தின் மூலமும், 4 இலட்சத்து 89 ஆயிரத்து அறுநூற்று தொண்ணூற்று ஒன்பது (4,89,699) ஓட்டுக்கள் தபால் மூலமாகவும், மொத்தமாக 4 கோடியே 62 இலட்சத்து 36 ஆயிரத்து நானூற்று தொண்ணூற்று இரண்டு (4,62,36,492) ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இதுவே குறிப்பிட தகுந்த ஓட்டு சதவீதம் தான் ஏனென்றால் கொரோனா என்ற உயிர்கொல்லி நோய் இரண்டாம் அலையாக தமிழகம் எங்கும் பரவலாக பரவிக்கொண்டிருக்கிறது என்ற சூழ்நிலையில் 70 சதவீதத்திற்கு மேல் பதிவாயிருந்தது பாராட்டத்தக்க அம்சமாகும். இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதமும், குறைந்த பட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.06 சதவீதமும் பதிவாகியிருந்தது. 

தமிழ் நாடு 2021 தேர்தல் வாக்கு சதவீதம்


தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இம்முறை தமிழக மக்கள் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பெருமளவில் ஆதரவு தந்து ஆட்சி கட்டிலில் அமர்த்தி விட்டார்கள். திமுக தனியாக 125 இடங்களிலும், கூட்டணியாக 159 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த கூட்டணியில் மதிமுக, கொமதேக, மமக மற்றும் தவாக ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் அவர்களுடைய வெற்றியும் திமுக வெற்றியாக கணக்கில் கொள்ளப்படுவதால் திமுக மொத்தமாக 133 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


தொடர்ந்து 10 வருடங்களாக ஆளும் கட்சியாக (2011 - 2021) இருந்த அதிமுக மோசமாக தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு இல்லாமல் பாராட்டும் விதத்தில் தனியாக 65 இடங்களிலும், கூட்டணியாக 75 இடங்களிலும் வெற்றிப்பெற்று வலுவான எதிர்க்கட்சியாக வந்துள்ளது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் வெறும் 3.15 சதவீதம் மட்டுமே. 


இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக கூட்டணி மற்றும் கமல் அவர்களின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி, இரண்டுமே எதிர்பார்க்காத விதத்தில் தோல்வியை சந்தித்து உள்ளன. அமமுக கூட்டணி 2.85 சதவீதமும், மநீம கூட்டணி 2.74 சதவீதமும் மட்டுமே வாக்குகள் பெற்றுள்ளன.



234 தொகுதிகளில் 117 ஆண் வேட்பாளர்களையும், 117 பெண் வேட்பாளர்களையும் தேர்தலில் நிறுத்தி போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் 6.58 சதவீதம் வாக்குகளை பெற்று 3 ஆவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது. இக்கட்சியின் சார்பாக யாரும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகாமல் போனாலும் அனைத்து தொகுதியிலும் சீரான வாக்குகளை பெற்று அனைத்து மக்களுக்குமான கட்சியாக உருவாகி உள்ளது.


தமிழக அரசியல் கட்சிகள் பெற்ற வெற்றி மற்றும் வாக்கு சதவீதம் பட்டை வரைபடமாக (Bar Graph) கொடுக்கப்பட்டுள்ளது.


கூட்டணிகள் (திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மநீம கூட்டணி) பெற்ற வாக்குகள், நாம் தமிழர் கட்சி மற்றும் NOTA  பெற்ற வாக்குகள் பை வரைபடமாக (Pie Graph) கொடுக்கப்பட்டியிருக்கிறது.


திமுக ஆட்சி பொறுப்பு ஏற்கும் இந்த சமயத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை தலைவிரித்து ஆடிக்கொண்டியிருக்கிறது. தேர்தல் பரப்புரையின் போது அனைத்து கட்சிகளும் மக்களை கூட்டி எங்களுக்கு தான் அதிகமாக ஆதரவு இருப்பதுபோல் மக்களிடம் காட்டிக்கொண்டார்கள். அதன் விளைவு கற்பனை பண்ண முடியாத தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் அதிமுக அரசு வைத்து சென்றிருக்கும் கடன் 5 இலட்சம் கோடியாக இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக எப்படி இவை அனைத்தையும் சமாளித்து நல்லாட்சி தருகிறது என்று பார்ப்போம்.

நன்றி: ECI, The Hindu, Wikipedia

Tuesday, August 20, 2019

தமிழ்நாடு மாவட்டங்கள்

முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சியில் தமிழ்நாடு மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஜனவரி 8, 2019 முதல் ஆகஸ்ட் 15, 2019 வரை 5 புதிய மாவட்டங்கள் உருவாகி விட்டன. 7 மாதங்களில் 5 மாவட்டங்கள் உதயமாகி விட்டன, என்ன காரணம்? 

ஓட்டு அரசியலா? ஜாதி அரசியலா? அல்லது, உண்மையில் மக்களின் வசதிக்காகவா? 

எதன் அடிப்படையில் ஒரு மாவட்டத்தை இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ பிரிக்கிறார்கள்? மக்கள் தொகையின் அடிப்படையிலா அல்லது பரப்பளவின் அடிப்படையிலா?

1956 வருடம் தமிழ்நாடு மாவட்டங்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்தது. அப்பொழுது மக்கள் தொகை தோராயமாக 3 கோடியே 20 இலட்சம்.


மாவட்டங்கள்: 1) சென்னை 2) செங்கல்பட்டு 3) வடஆற்காடு 4) தென் ஆற்காடு 5) சேலம் 6) நீலகிரி 7) கோயம்புத்தூர் 8) திருச்சிராப்பள்ளி 9) தஞ்சாவூர் 10) மதுரை 11) இராமநாதபுரம் 12) திருநெல்வேலி 13) கன்னியாகுமரி

மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்படுகிறது. அதன்படி தமிழ் நாடு மக்கள் தொகையின் விபரம் பின்வருமாறு


2011 ஆண்டுக்கு பின் வரும் விபரங்கள் அனைத்தும் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது தமிழ் நாட்டில் மக்கள் தொகை பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் 1.015% சதவீதத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி பார்த்தால் 2021 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் மக்கள் தொகை தோராயமாக 8 கோடியே 40 இலட்சம் ஆகும். 

டாக்டர் இராமதாஸ் அவர்களின் (பாட்டாளி மக்கள் கட்சி) அறிக்கையில் 12 இலட்சம் மக்கள் தொகைக்கு 1 மாவட்டம் வேண்டும் என்று சொல்கிறார். அதன்படி பார்த்தால் 2021 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழ் நாட்டில் மொத்தம் 70 மாவட்டங்களை உருவாக்க வேண்டும். இது சாத்தியமாகுமா?

ஏனென்றால் இப்பொழுது அரசாங்கத்திற்கு வரும் வருமானத்தில் 71% சதவீதம் அளவு அரசு வேலை செய்பவர்களின் சம்பளமாகவும், ஒய்வு ஊதியமாகவும் கொடுக்கப்படுகிறது. அப்படியென்றால் 70 மாவட்டங்கள் உருவாக்குவதற்கு இப்பொழுது அரசு வேலை செய்பவர்களின் எண்ணிக்கையில் இன்னொரு மடங்கு ஆட்களை நியமிக்க வேண்டும். ஆனால் மக்கள் தொகை அதே அளவுதான் இருக்கப்போகிறது. அரசாங்கம் எப்படி வருமானத்தை பெருக்க முடியும்? ஒரே வழி வரியை உயர்த்தி மக்கள் தலையில் கட்டுவதுதான். அதனால் இது சாத்தியமாகாது.

ஆகையால் 20 இலட்சம் மக்கள் தொகைக்கு 1 மாவட்டம் என்று மொத்தம் 42 மாவட்டங்களை உருவாக்கி நிர்வகிக்கலாம். தற்சமயம் உள்ள 37 மாவட்டங்களின் பெயர்கள், பரப்பளவு மற்றும் மக்கள் தொகை விபரம் பின்வருமாறு (புதிதாக தோன்றிய மாவட்டங்களின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கணக்கிடப்படவில்லை)

2011 மக்கள் தொகை கணக்கு 

இந்த அட்டவணையின் படி சில மாவட்டங்களை (மக்கள் தொகை 25 இலட்சத்திற்கும் மேல்) மட்டும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கலாம். 

எத்தனை மாவட்டங்களை உருவாக்கினாலும் அது மக்கள்நலன் சார்ந்ததாகவும், ஊழலற்ற மாவட்ட நிர்வாகம் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 27-12-2020 அன்று பிரிக்கப்பட்டது.

நன்றி: தி ஹிந்து, இந்தியன் ஆன்லைன், விக்கிப்பீடியா, சென்சஸ் அறிக்கை 

Sunday, May 26, 2019

இந்திய ஜனநாயக திருவிழா 2019

இந்திய ஜனநாயக திருவிழா 2019, ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து மே 23 ஆம் தேதி முடிவு வெளியிடப்பட்டது. 


மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு (வேலூர் தொகுதி நீங்கலாக) தேர்தல் நடைபெற்றது. இம்முறை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் சிறு தாமதம் ஆனது, ஏனென்றால் தொகுதிக்கு 5 VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு அது ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளுடன் ஒத்து போகுதா என்று சரி பார்க்கப்பட்டது.

இம்முறையும் மக்கள் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெருவாரியாக வாக்களித்து மீண்டும் திரு மோடி அவர்களை பிரதமராக தேர்ந்தெடுத்து உள்ளார்கள். பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களில் வெற்றிப் பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.



இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழ் நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், பஞ்சாப் நீங்கலாக மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி பெருவாரியாக வெற்றிப் பெற்றுள்ளது. முக்கியமாக வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவிலும் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்துள்ளது. 
  
தமிழ் நாடு இந்த தடவையும் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் தனித்தன்மையுடன் விளங்குகிறது. 2014 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 37 இடங்களில் தனித்து வெற்றிப் பெற்றது. இந்த முறை (2019) திராவிட முன்னற்ற கழகத்தின் கூட்டணி 37 இடங்களில் அமோக வெற்றிப் பெற்றுள்ளது. வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றியடைந்துள்ளது. தேனி தொகுதியில் திரு பன்னீர்செல்வம் அவர்களுடைய மகன் திரு இரவீந்திரநாத் வெற்றிப் பெற்றுள்ளார். பிஜேபி போட்டியிட்ட 5 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை. 

தமிழ் நாட்டில் கள்ளக்குறிச்சியையும் சேர்த்து மொத்தம் 33 மாவட்டங்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பது விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து 33 ஆவது மாவட்டமாக உதயமானது. இந்த அறிவிப்பை முதலமைச்சர் திரு பழனிச்சாமி அவர்கள் 8 ஜனவரி 2019 அன்று அறிவித்தார். 


33 மாவட்டங்கள் உள்ள தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.


தமிழகத்தைப் பொறுத்தவரை 5 முனைப் போட்டியாக இருந்தது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமுமுக கூட்டணி, மக்கள் நீதி மையம் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என்று வேட்பாளர்கள் களத்தில் நின்று போட்டியிட்டார்கள். முக்கியமாக நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் 20 ஆண் வேட்பாளர்களையும், 20 பெண் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியிருந்தது.


தமிழக மக்கள் எப்பவும் திமுக, அதிமுகவுக்கு ஓட்டளித்து பழக்கப்பட்டவர்கள் என்பதனால் இம்முறை திமுகவுக்கு ஓட்டளித்து அமோக வெற்றிப் பெற வைத்துள்ளார்கள். தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுகவின் பெருவாரியான வாக்குகளைப் பிரிப்பார்கள் என்று நினைத்த நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்கள்.


மக்கள் நீதி மையம் 10 இடங்களில் 5 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக நான்கு இடங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள். நாம் தமிழர் கட்சி 8 இடங்களில் 5 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றுள்ளனர். இது தமிழக இளைஞர்களின் மனநிலை புதிய கட்சிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் அதன் சதவீதம் 


தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம், பட்டை வரைபடத்தில் (Bar Chart) கொடுக்கப்பட்டுள்ளது. 


விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திரு இரவிக்குமார், மதிமுகவை சேர்ந்த திரு கணேசமூர்த்தி, ஐக்கிய ஜனநாயக கட்சியை சேர்ந்த திரு பாரிவேந்தர் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த திரு சின்னராஜ் ஆகிய அனைவரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்கள்.

அதுபோல் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த திரு கிருஷ்ணசாமி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார்.

பாராளுமன்றத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 தேதி தேர்தல் நடைப்பெற்றது. திமுக சார்பாக திரு துரைமுருகன் அவர்களின் மகன் திரு கதிர் ஆனந்த் அவர்களும், அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் திரு சண்முகம் அவர்களும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருமதி தீபலட்சுமி அவர்களும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவு ஆகஸ்ட் 9 தேதி வெளியிடப்பட்டது. வேலூர் தொகுதியில் திமுகவின் திரு கதிர் ஆனந்த் அவர்கள் திரு சண்முகம் அவர்கள் பெற்ற வாக்குகளை விட 8141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்: திரு கதிர் ஆனந்த் (4,85,340 வாக்குகள், 47.38%), திரு சண்முகம் (4,77,199 வாக்குகள், 46.58%), தீபலட்சுமி (26995 வாக்குகள், 2.63%) மற்றும் நோட்டா (9417 வாக்குகள், 0.92%). இத்தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 10,24,352. தொகுதியில் உள்ள மொத்த வாக்குகள் 14,32,555.

நன்றி: The Hindu, ECI, Wikipedia

Saturday, December 1, 2018

மூக்கிரட்டை (Boerhaavia diffusa)


மூக்கிரட்டை கொடியினத்தை சேர்ந்த கீரை வகையாகும். இது நமது ஊரில் புல்வெளிகளிலும், வயல் வெளியிலும் படர்ந்து வளர்ந்து இருப்பதை காணலாம். இதனுடைய தாவரவியல் பெயர் போரோவியா டிஃபியூசா (Boerhaavia diffusa).  

மூக்கிரட்டை பற்றிய அகத்தியர் குணபாடம் 

"சீத மகற்றுந் தினவடக்குங் காந்திதரும் 
வாத வினையை மடிக்குங்காண் பேதி
கொடுக்குமதை உண்டாக்காற் கோமளமே! பித்தம்
அடுக்குமே மூக்கிரட்டையாய்…"    

மூக்கிரட்டை சீதள நோய்களை அகற்றும், தினவு என்கிற நமைச்சலைப் போக்கும், உடலுக்கு அழகை தரும், வாதத்தால் (காற்றால்) உண்டாகும் நோய்களை அழிக்கும், ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப் போக்கும், பித்தமும் அதிமாகும். ஆகையால் ஒவ்வொரு மருந்துக்கும்  பக்கவிளைவுகள் உள்ளது என்பதால் அளவோடு சாப்பிட வேண்டும்.

மூக்கிரட்டையின் வேர் அதிகமான மருத்துவ குணங்களை கொண்டது. மேலும் இதனை சமூலமாகவும் உபயோகப்படுத்தலாம்.

மூக்கிரட்டை கசாயம் 

நிழலில் உலர வைக்கப்பட்ட வேரை (10 கி) தண்ணீரில் (200 மிலி) நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு 100 மிலி யாக வந்தவுடன் கசாயத்தை ஆற வைத்து வடிகட்டி பருக வேண்டும். காலை மாலை இரு வேளையாக 20 மிலி அளவு உணவுக்கு முன்பு குடிக்க வேண்டும். 

இவ்வாறு செய்து வந்தால் உடலில் ஏற்பட்ட தைராய்டு பிரச்சனை குணமாகும். உடல் பருமன் குறையும் மேலும் தொப்பையை குறைக்கும். சிறுநீரக கல்லை வெளியேற்றுவதற்கு இது அருமருந்தாகும். இரத்த சோகையை போக்கி இரத்த ஓட்டத்தை சரி செய்யும்.

இத்தனை பயன்களுக்கும் முக்கிய காரணம் இதில் பொதிந்து இருக்கும் மருத்துவ குண வேதிப்பொருட்கள் ஆகும்.



Thursday, November 1, 2018

ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity)


இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் மதிப்புக்குரிய திரு. சர்தார் வல்லப்பாய் படேல் ஆவார். அவருடைய பிறந்த தினம் அக்டோபர் 31, 1875. இன்று அவருடைய 143-வது பிறந்த தினம். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர். அப்போது நம் இந்தியாவில் 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. அவை அனைத்தும் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தன. இவருடைய சீரிய முயற்சியால் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு "இந்தியா" என்ற நாடானது. அதனை நினைவு கூறும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டது தான் உலகிலேயே உயரமான "ஒற்றுமைக்கான சிலை".

இந்த சிலை குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றங்கரையிலுள்ள சர்தார் சரோவர் அணையின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 597 அடி (182 மீட்டர்) யாகும். உலகிலேயே உயரமான சிலை என்ற அந்தஸ்து பெற்றுள்ளது. இது கட்டடக்கலையின் திறமைக்கு மிகப்பெரிய சான்றாகும். இந்தியாவின் தலைசிறந்த சிற்பி பத்மபூஷன் திரு ராம் வி. சுதர் அவர்களும், பொறியாளர்களும் இணைந்து பணியாற்றி இச்சாதனையை செய்து உள்ளனர். 


சர்தார் சிலையின் முகத்தை பார்க்கும் பொழுது எத்தனை கடினமான வேலையை எவ்வளவு அழகாக, சிறப்பாக மிக குறுகிய காலத்தில் செய்து முடித்து உள்ளார்கள் என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது. இந்த சிலையை செய்ய 70,000 மெட்ரிக் டன் சிமெண்ட், 18500 மெட்ரிக் டன் எஃகு,  6000 மெட்ரிக் டன் இரும்பு, 1700 மெட்ரிக் டன் வெண்கலம் உபயோகப்படுத்தப்பட்டு 250 பொறியாளர்கள் மற்றும் 3700 பணியாளர்கள் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவு சுமார் 3000 கோடியாகும். 

அரசியல் காரணங்கள் பலவாக இருந்தாலும் இந்த கட்டடக்கலையின் சிறப்புக்கு நாம் தலைவணங்க வேண்டும் மற்றும் பெருமைப்பட வேண்டும்.



நன்றி: விகடன்

சிற்பி: ராம் வி. சுதர் 


கட்டடக்கலைக்கு ஒரு சல்யூட்!