Sunday, October 22, 2017

சிறுகண் பீளை - Aerva lanata


சிறுகண் பீளை ஒரு அற்புதமான மூலிகை, இதற்கு பூளைப்பூ, பொங்கல் பூ, சிறு பீளை என்று பல பெயர்கள் உண்டு. பொதுவாக தமிழ் நாட்டில் பல பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகையிலும்  சில சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப் படுகிறது. 

பொங்கல் பண்டிகையின் போது நம் வீடுகளில் சிறுகண் பீளை, ஆவாரை, வேப்பிலை ஆகிய மூன்றையும் கட்டி வைப்போம், இதற்கு காப்பு கட்டு என்று பெயர், மார்கழி மாதம் கடைசி தேதியில் செய்வோம். பொங்கல் முடிந்தவுடன் அதை தூக்கி வீசிவிடுவோம். ஏன் என்றால் இந்த மூலிகைகளின் மகத்துவம் நமக்கு தெரிவதில்லை, அதுபோல் நம் வீடுகளில் இதை ஏன் கட்டினோம் என்றும் புரிந்து கொள்வதில்லை. இந்த மூலிகைகள் விஷக்கடிக்கு அருமருந்தாகும். 

சிறுகண் பீளை சிறுநீர் கல்லை உடைத்து வெளியேற்றும் ஆற்றல் உடையது. அவ்வாறு செய்வதனால் நமக்கு அறுவை சிகிச்சை தேவை படுவதில்லை, இதைத்தான் மதிப்பிற்குரிய நம்மாழ்வார் அவர்கள் "அறுவை சிகிச்சை மூலிகை" என்று அழைப்பார்.

இது மானாவாரியாக அனைத்து பகுதியிலும் விளையக்கூடிய பயிராகும். மார்கழி, தை மாதத்தில் இதன் விளைச்சல் அதிகம் இருக்கும். இந்த மூலிகையை பற்றி பதார்த்த குணப்பாடத்தில் (291) குறிப்பிடப் பட்டுள்ளது.

"நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை 
பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும் 
பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை 
யாமிது கற்பேதி யறி"

இதுபோல் தேரையர் அவர்கள் தன்னுடைய குணவாகடத்திரட்டில் இம்மூலிகையை பற்றி குறிப்பிட்டுள்ளார் 

"சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கை 
விக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவே 
கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு
காட்டிற் கழன்றோடுங்காண்"

எவ்வாறு பயன்படுத்துவது?
  1. சிறுகண் பீளையை சமூலமாக (முழுச்செடி) எடுத்து நன்றாக கழுவி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அரைத்து  சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இச்சாற்றை 50 மிலி வீதம் காலை மாலை என பருகி வந்தால் சிறுநீர் கல்லடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் விரைவில் குணமாகும்.
  2. சிறுகண் பீளை குடிநீராகவும் அருந்தலாம். 
குடிநீர் எவ்வாறு தயாரிப்பது?

சிறுகண் பீளை சமூலம், நெருஞ்சி சமூலம், மாவிலிங்க வேர், பேராமுட்டி வேர் ஆகியவற்றை தலா 25 கிராம் எடுத்து நசுக்கி அவற்றை 4 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அது 1 லிட்டராக சுண்டிய பின்பு அதை ஆற வைத்து, வடிகட்டி ஒரு நாளைக்கு 4 அல்லது 5 தடவை குடித்து வந்தால் சிறுநீர் கல் கரைந்து வெளியேறிவிடும்.

சிறுபீளையில் இருக்கும் மருத்துவகுணப் பொருட்கள் 



எளிதில் கிடைக்கும் இவ்வகையான மூலிகை செடிகளை பயன்படுத்தி நம்முடைய ஆரோக்கியத்தை பேணிக் காப்போம்.

No comments: