Tuesday, October 10, 2017

யானை நெருஞ்சில் (Pedalium murex)


இத்தாவரம் யானை நெருஞ்சில் அல்லது யானை வணங்கி என்று அழைக்கப்படும். இதில் இருக்கும் முட்களைப் பார்த்து யானைகள் பயப்படும் என்பதனால் இப்பெயர் பெற்றது. 

இந்த மூலிகைச் செடி பயிர் நிலத்தில் நன்றாக வளரக்கூடியது, களை என்று தான் சொல்வோம், ஆனால் இதில் அளப்பரிய மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் இலை சதைப் பாங்காக இருக்கும். தண்ணீரில் போட்டால் அந்த நீர் உடனே கெட்டித்தன்மை ஆவதை பார்க்கலாம். இச்செடியில் உள்ள காய், பூ, இலை, தண்டு, வேர் என அனைத்தும் மருத்துவத்திற்கு உபயோகமாகும். அதனால்தான் இச்செடியை காயகல்ப மூலிகை என்று சொல்வார்கள்.

பொதுவாக தமிழ் நாட்டில் இம்மூலிகையை சிறுநீரகக் கல்லை கரைப்பதற்குக் கொடுப்பார்கள். இச்செடியின் சாற்றை 8 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் கல் கரைந்து சிறுநீர் மூலம் வெளியேறிவிடும்.

எப்படி தயாரித்து சாப்பிடுவது?
  1. யானை நெருஞ்சில் செடியை சமூலமாகவும், அத்துடன் மூச்சிரட்டை செடி (ஒரு கைப்பிடி அளவு) மற்றும் சிறுகண் பீளை (ஒரு கைப்பிடி அளவு) மூன்றையும் நன்றாக அரைத்து அதில் 2 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து 500மிலி ஆனவுடன் இறக்கி விடவும். இளஞ்சூட்டில் வடிகட்டி, பெரியவர்கள் 250மிலி காலை மாலை என இரு வேளை தொடர்ந்து 8 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அதன் பலனை நன்றாக உணர்வீர்கள்.
  2. யானை நெருஞ்சில் இலையை புளிச்ச நீரில் (பழைய சோற்று நீர்) ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த புளிச்ச நீரை குடித்தால் இதே பயனை அடையலாம். 
  3. வீட்டில் ரசம் பண்ணும்பொழுது அதில் இச்செடியின் இலைகளை போட்டுத் தயாரித்தால் அதற்கு பெயர் யானை நெருஞ்சில் ரசம். இதுவும் சிறுநீர் கல்லைக் கரைப்பதற்கு மிகவும் பயன்படும்.
இவ்வாறு மூன்று வகைகளில் இச்செடியை பயன்படுத்தலாம்.

இம்மூலிகையின் மருத்துவக்குணப் பொருட்கள்



எளிதில் கிடைக்கும் இம்மூலிகைகளை பயன்படுத்தி நம்முடைய ஆரோக்கியத்தை பேணிக்காப்போம்.

Sunday, October 8, 2017

சிறுநீரகக் கல் - மருத்துவம்


ஒருவருக்கு சிறுநீரகக் கல் பிரச்சனை ஏற்பட்டால் அதனால் ஏற்படும் வலி சொல்லி மாளாது. இந்தியாவில் 10% ஆண்களுக்கும் 4% பெண்களுக்கும் இப்பிரச்சனை உள்ளது. இதை ஆங்கிலத்தில் யூரோலித்தியாசிஸ் (Urolithiasis/Nephrolithiasis) என்று அழைப்பார்கள். மேற்கு உலகத்தில் இதன் பாதிப்பு இந்தியாவை விட மிக மிக அதிகம்.

இது எதனால் ஏற்படுகிறது?

அறிவியலின் கூற்றுப்படி நாம் மிக குறைந்த அளவு தண்ணீர் எடுத்து கொள்வதாலும், முறையற்ற உணவு பழக்க வழக்கத்தாலும் மற்றும் அதிக மனஅழுத்தத்தாலும் கூட இப்பிரச்சனை ஏற்படுகிறது.


உணவு வகைகளில் நாம் ஆக்சலேட் (Oxalate) அதிகம் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்வது தான் இதற்கு முக்கிய காரணம். இது பொதுவாக உருளை கிழங்கு, ருபார்ப் (Rhubarb), பீன்ஸ், ஸ்பீனாச் (Spinach) மற்றும் சாக்லேட் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. அதனால் இப்பிரச்சனை உள்ளவர்கள் இது போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.


இது மட்டும் இல்லாமல் அடிக்கடி டீ குடிப்பதனாலும் இப்பிரச்சனை வரும். ஏனென்றால் டீ அதிக அளவு நீரை உடலில் இருந்து வெளியேற்றிவிடும். அதனால் நம்முடைய சிறுநீர் மிக அடர்த்தியாகி கல் உண்டாகிறது. சிறுநீர் கல் என்பது கால்சியம் ஆக்சலேட் (Calcium oxalate), யூரிக் ஆசிட் (Uric acid) போன்றவற்றால் ஆனது. 


சிறுநீரகக் கல் பல அளவுகளில் இருக்கும். பெரிய அளவில் இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலியை தாங்கவே முடியாது.


அப்படியானால் எது மாதிரியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்? 

நம் உணவில் சிட்ரிக் அமிலம் (Citric acid) அதிகம் உள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளவேண்டும். இது பொதுவாக பழங்களில் அதிகம் காணப்படும்.

                            
சித்த மருத்துவத்தில் எப்படி இப்பிரச்சனையை போக்குவது?

சித்த மருத்துவத்தில் மூன்று மூலிகைகளை இதற்கு பயன்படுத்துகிறார்கள், அவை ...
  1. மூக்கிரட்டை (Boerhavia diffusa
  2. சிறுகண் பீளை (Aerva lanata)
  3. யானை நெருஞ்சில் (Pedalium murex)
இந்த மூலிகைகளை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்.

Sunday, September 10, 2017

சித்த மருத்துவத்தில் சிறுநீர் சோதனை



சித்த மருத்துவத்தில் சிறுநீர் சோதனை பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்....

காலையில் எழுந்தவுடன் கழிக்கும் சிறுநீரை ஒரு கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டு உற்றுப் பாருங்கள்.
  • எண்ணெய் துளி பாம்பு போல் நெளிந்து காணப்பட்டால் உங்களுக்கு வாதம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
  • எண்ணெய் துளி மோதிரம் போல் வட்டமாக காணப்பட்டால் உங்களுக்கு பித்தம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
  • எண்ணெய் துளி முத்து போல் அப்படியே நின்றால் உங்களுக்கு கபம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
அதுபோல்
  • எண்ணெய் துளி வேகமாக சிறுநீரில் பரவினால் நோய் விரைவில் குணமாகும் 
  • எண்ணெய் துளி அப்படியே நின்றால் நோய் குணமாகத் தாமதமாகும்.
  • எண்ணெய் துளி கீழே அமிழ்ந்தால் நோய் குணமாகாது என்று புரிந்து கொள்ளலாம்.

இதுமாதிரி சிறுநீரின் நிறம் மற்றும் மணம் ஆகியவற்றின் மூலம் நோயின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

Friday, September 1, 2017

கட்டுக்கொடி


கட்டுக்கொடி ஒரு ஏறு கொடியினம், முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக்கொடி என இரண்டு வகைப்படும். இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இனவிருத்தியாகும். விதை மூலமும் இனவிருத்தி செய்யப்படும்.

மருத்துவப் பயன்கள்:
  1. குளிர்ச்சியூட்டியாகவும், உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.
  2. பாக்களவு இலையை மென்று தின்றால் இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் குறையும்.
  3. இலை, வேப்பங்கொழுந்து சமஅளவு அரைத்து காலை மட்டும் எடுத்து வந்தால் நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம் போன்ற நோய்கள் குணமாகும்.
  4. இலையுடன் மாம்பருப்பும் சமமாக அரைத்து பால், சர்க்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். 
  5. சிறிதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாதநோய், கீல் நோய் குணமாகும்.
  6. இலைச்சாற்றை  சர்க்கரை நீரில் கலந்து வைத்தால் சிறிது நேரத்தில் ஜெல்லி போல் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.
  7. வேரையும், கழற்சி பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு வரும் வயிற்றுவலி தீரும்.
இதிலுள்ள மருத்துவ குணப்பொருட்கள்  



கழற்சிக்காய் + விதை (சித்தா மருந்தகத்தில் கழற்சிப் பருப்பு கிடைக்கும்)


Thursday, August 31, 2017

ஐயமிட்டு உண் - ஐஸா ஃபாத்திமா ஜாஸ்மின்


ஐஸா ஃபாத்திமா ஜாஸ்மின் ஒரு விவசாயி மகள், இவர் படித்து பல் மருத்துவராக பணிபுரிகிறார். இவர் ஆரம்பித்திருக்கும் செயல் மிகவும் பாராட்டுக்குரியது.

அப்படி என்ன செய்தார்.......

திருவான்மியூரை சேர்ந்த இவர், பெசன்ட் நகரிலுள்ள ஒரு பொது இடத்தில் குளிர்சாதனப்பெட்டியை வைத்து அதில் வீடுகளில் மிச்சமாகும் உணவுப்பொருட்களை வைக்கிறார். அதனால் அவ்வழியே வரும் ஏழை மக்கள் தங்களுடைய பசியை போக்கி கொள்கின்றனர். இப்படி செய்வதன் மூலம் வீடுகளிலோ திருமணம் மண்டபங்களிலோ மிச்சமாகும் உணவுகளை குப்பையில் கொட்டாமல் பசியோடு இருப்பவர்களுக்கு கொடுத்து பசியாற்றலாம். 

இது மட்டுமல்லாமல், உணவோடு பழைய புத்தகம், துணிமணிகள் போன்றவற்றையும் வைத்திருக்கிறார். இதனை பார்த்து மற்றவர்களும் அவர்களுக்கு தேவையில்லாதவைகளை, மற்றவர்கள் உபயோகிக்க கூடிய பொருட்களை இங்கு வைத்துவிட்டு செல்கிறார்கள். 

இது மிகவும் போற்றுதலுக்கு உரிய செயலாகும். இது மேலும் மேலும் வளர மக்களின் பேராதரவு தேவை.

இந்த அரிய பணி சிறக்கட்டும்!!