Saturday, January 23, 2016

சீரகம்

சீரகம் (சீர் + அகம்)


அகத்தை சீர் செய்யக்கூடிய பொருள் தான் சீரகம் ஆகும். இதனுடைய பூர்வீகம் எகிப்து நாடாகும். இதன் தாவரப் பெயர் Cuminum cyminum (Umbelliferae). சீரகத்தில் இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. இது நம் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் என்ற பொருளிலுள்ள ஹீமுடன் (Heme) இணைந்து பிராண வாயுவை உடல் முழுவதும் எடுத்து செல்கிறது. 


இதில் டேர்பீன்ஸ் (Terpenes) என்று சொல்லக்கூடிய எஷன்ஷியல் ஆயில் (Essential oils) அதிக அளவு உள்ளது. பொதுவாக குமினால்டிஹைடு (Cuminaldehyde) மற்றும் தைமோல் (Thymol) என்ற மருத்துவ குணம் கொண்ட வேதிப்பொருள் அதிக அளவு உள்ளது. இது நம் வாயிலுள்ள உமிழ்நீர் சுரப்பி (Salivary glands) மற்றும் ஜீரண மண்டலத்தில் அமிலம் (Acids), காரம் (Bile), ஜீரண நொதிபொருளை (Digestive enzymes) சுரக்க தூண்டுகிறது.


ஒரு தேக்கரண்டி சீரகத்தை 2 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து (பாத்திரத்தை மூடி) பின்பு குளிர வைத்து நாள் முழுவதும் குடித்து வந்தால் ஜீரண மண்டலத்தில் எந்த பிரச்சனையும் வராது. மேலும் நம் உடல் குளிர்ச்சி அடையும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் ஆகியவை நீங்கி விடும்.

சீரகத்துடன் பூண்டை அரைத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் குடல் நோய்கள் குணமாகும்ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து, கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு விரைவில் நிற்கும்மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

சீரகத்தை வறுத்து மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி சாப்பிட்டால் மந்தம் நீங்கும்முருங்கைக் கீரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

சீரகத்தில் பல வகைகள் உள்ளன, அவை பெருஞ்சீரகம் (Fennel), சிறுஞ்சீரகம் (Caraway) மற்றும் கருஞ்சீரகம்.



பெருஞ்சீரகத்தின் தாவரப் பெயர் Foeniculum vulgare என்றும், சிறுஞ்சீரகத்தின் தாவரப் பெயர் Carum carvi என்றும் அழைக்கப்படுகிறது. இவை இரண்டும் Umbelliferae என்ற குடும்பத்தை சேர்ந்தது. பெருஞ்சீரகத்தில் Anethole என்ற வேதிப்பொருளும், சிறுஞ்சீரகத்தில் Carvone என்ற வேதிப்பொருளும் அதிக அளவு உள்ளன.


இப்பொருள்கள் அனைத்தும் நம் வீட்டு சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கும்.

Saturday, January 16, 2016

டெங்கு (டெங்கி) காய்ச்சல்

டெங்கு (டெங்கி) காய்ச்சல் (Dengue Fever), DENV என்று அழைக்கக்கூடிய வைரஸினால் ஏற்படக்கூடியது. இது நான்கு உள்வகை (Subtypes: DENV-1, DENV-2, DENV-3 & DENV-4) பிரிவுகளை உடையது. பொதுவாக இது ப்ளேவிவைரஸ் (Flavivirus) என்று அழைக்கக்கூடிய ப்ளேவிவிரிடே (Flaviviridae) குடும்பத்தை சேர்ந்தது. இக்காய்ச்சல் மலேரியாவைப்போல கொசுக்களினால் பரவக்கூடியது. இக்கொசு ஏடெஸ் இஜிப்டி (Aedes aegypti) என்று அழைக்கப்படுகிறது. இது  சுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.

டெங்கு (டெங்கி) காய்ச்சலுக்கு இதுவரை  ஆங்கில மருத்துவத்தில் மருந்து எதுவுமில்லை. பொதுவாக  எந்த வைரஸ் நோய்க்கும் மருந்து கிடையாது. ஆகவேதான் தடுப்பு மருந்து பிறந்தது முதல் கொடுக்கப்படுகிறது. பிறகு எப்படி சித்த மருத்துவத்தில் குணப்படுத்தப்படுகிறது?


டெங்கு (டெங்கி) காய்ச்சல் ஆசியா மற்றும் ஆப்ரிக்கா கண்டங்களில் அதிக அளவு காணப்படுகிறது.


இக்கொசு, டெங்கு (டெங்கி) காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து இரத்தத்தை உறிஞ்சி உட்கொண்டு பின்பு சாதாரண நபர்களை கடிக்கும் பொழுது, கொசு இரத்தத்திலுள்ள வைரஸ், கடி படுபவரின் இரத்தத்தில் கலந்து விடுகிறது..


சித்த மருத்துவத்தில் டெங்கு (டெங்கி) காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் மிக அருமருந்தாகும். இது ஒன்பது மூலிகைகளை உள்ளடக்கியது.

நிலவேம்பு (Andrographis paniculata)
வெட்டிவேர் (Vetiveria zizanioides)
விலாமிச்சை வேர் (Plectranthus vettiveroides)
சுக்கு (Zingiber officinale)
மிளகு (Piper nigrum)
கோரைக்கிழங்கு (Cyperus rotundus)
சந்தனம் (Santalum album)
பற்படாகம் (Mollugo cerviana)
பேய்புடல் (Trichosanthes cucumerina)

சித்த மருந்து கடையில் நிலவேம்பு குடிநீர் பொடி கிடைக்கிறது. ஒரு தேக்கரண்டி அளவு பொடியை 200 மிலி அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு 50 மிலி வந்தவுடன் இதை வடிகட்டி 10 - 50 மிலி அளவு குடிநீரை பெரியவர்கள் குடிக்க வேண்டும். 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் 15 மிலி அளவு குடிக்க வேண்டும். 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 5 - 10 மிலி அளவு குடிக்க வேண்டும். குடிநீர் தயாரித்த 3 மணி நேரத்தில் உபயோகித்து கொள்ள வேண்டும். நிலவேம்பு குடிநீரை சாப்பாட்டுக்கு முன் குடிப்பது மிகவும் சிறந்தது.

மூலப்பொருட்களின் நன்மைகள்:

நிலவேம்பு - முக்கிய மூலப்பொருள், காய்ச்சலை குணமாக்கும் வேதிப்பொருள் மிகுந்து இருக்கிறது, வைரஸ் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

கோரைக்கிழங்கு, பற்பாடகம் - காய்ச்சலை குணப்படுத்தும்.

பேய்ப்புடல் - குடலில் தங்கியுள்ள மாசுக்களை வெளியேற்றும்.

சுக்கு, மிளகு - உடலில் சுரக்கும் நொதிகளை சீராக்கும்.

வெட்டி வேர், விலாமிச்சை வேர், சந்தனம் - ஜுரத்தால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும்.

Dengue Fever - Pitha Suram
NIS - Dengue & Chikun Gunya
WHO - Dengue Fever

Thursday, January 14, 2016

தமிழக நதிகள் இணைப்பு

தமிழக நதிகளை இணைப்பது குறித்து, திரு வி.பொன்ராஜ் அவர்களின் ஆராய்ச்சி கட்டுரை


தமிழக நீர்வழிகள் சாலைத் திட்டம் புதுமையாக முன்மொழியப் பட்டுள்ளது. இது நீர் சேகரிப்பாகவும் வெள்ளக் கட்டுப்பாட்டு அமைப்பாகவும் இணைந்து செயல்படுகிறது. இருவழிகளில் நீர் செல்லவும் ஆற்றுப் படுகைகளுக்கிடையில் ஏற்கனவே உள்ள அமைப்புகளின் மீது, பாதிப்பின்றி இணைப்புகளை மேற்கொள்கிறது.
பின்வரும் அணைகளை இணைக்கிறது: சாத்தனூர், மேட்டூர், பவானி சாகர், வைகை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, சோலையாறு, பாபநாசம், சேர்வலாறு. அத்துடன் பல ஏரிகளையும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம், வீராணம், ராமநாதபுரம் ஏரிகளையும் இணைக்கிறது.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகளும் தமிழக நீர்வழி கிரிடில் இணைக்கப்படுகிறது. ஒரே கிடைமட்டத்தில் வரும்படியாக இது கடல் மட்டத்துக்கு மேல் 250 மீட்டர் உயரத்தில் கட்டப்படும். இணைப்பின் எந்தப் பகுதியிலிருந்தும், நீரை ஏற்றவோ, இறக்கவோ முடிகிற வகையில் அணைகளையும், ஏரிகளையும் இது இணைக்கிறது. ஆறுகள் முழுவதுமே, தமிழக நீர்வழிப் பாதையுடன் இணைக்கப்படுகின்றன.
இந்த திட்டத்தை, ஐந்து கட்டங்களாக நடைமுறைப்படுத்த முடியும்.
  • முதல் கட்டத்தில், மேட்டூரும், வைகையும், 350 கி.மீ., நீள நீர்வழியால் இணைக்கலாம்.
  • இரண்டாம் கட்டத்தில், மேட்டூரையும், பாலாறையும், 270 கி.மீ., தூரத்தில் இணைக்கலாம்.
  • மூன்றாம் கட்டத்தில், 130 கி.மீ., நீள வழியில், வைகையையும், தாமிரபரணியையும் இணைக்கலாம்.
  • நான்காம் கட்டத்தில், தாமிரபரணியையும், பெருஞ்சாணியையும் இணைக்கலாம்.
  • ஐந்தாம் திட்டமாக, சம காலத்தில், ஆறுகளையும், ஏரி, -துணை ஆறுகளையும், ஆங்காங்கே இணைக்க வேண்டும்


இந்த திட்டத்தின் முக்கியத்துவம் என்னவென்றால், இது, அந்தந்த படுகைகளில் பயன்படுத்தப்படும் நீரை இணைப்பதில்லை; மாறாக உபரி நீரைமட்டுமே இணைக்கிறது. அதுவும், இரு வழிகளில் இணைக்கிறது. இதில் எங்கும், நீரேற்றும் வசதி பயன்படுத்தப்படவில்லை
பலன்கள்
திறமையான வெள்ளக் கட்டுப்பாடு; 75 லட்சம் ஹெக்டேருக்கு நீர்ப்பாசன வசதி; 2,150 மெகாவாட் நீர்மின்சக்தி; நிலத்தடி நீர் மட்ட உயர்வால், ஆண்டுக்கு, 1,350 மெகாவாட் மின்சக்தி மிச்சமாதல்; சரக்குப் போக்குவரத்துக்காக, 900 கி.மீ., நீள நீர்வழித்தடம்; 30 அடி ஆழமும், 360 அடி அகலமும் உள்ள நீர்வழியில், ஆண்டு முழுக்க போக்குவரத்து நடக்கலாம்; சாலைகளோடு ஒப்பிடுகையில், நீர்வழிப் போக்குவரத்துக்கான எரிபொருளில், 90 சதவீதம் மிச்சமாகும்; அத்துடன் நீர்வழி கிரிடிலிருந்து, 5 கோடி பேருக்கு, நேரடி குடிநீர் இணைப்பைச் சாத்தியமாக்கலாம்; மீன்வளர்ப்பு, சுற்றுலா, நீர் விளையாட்டுகள் என, பல கூடுதல் வாய்ப்புகள் இருக்கின்றன.
நன்றி: தினமலர் 

Tuesday, January 12, 2016

தொட்டா சிணுங்கி (Mimosa pudica)



தொட்டா சிணுங்கி செடியின் இலையை தொட்டவுடன் அது உடனே மூடிக்கொள்ளும், கொஞ்ச நேரம் கழித்து தானாக திறந்து கொள்ளும். அதை பார்ப்பதற்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இந்த செயல் தொட்டா சிணுங்கி தாவரத்தின் தனி சிறப்பாகும். இதற்கு காரணம் தான் என்ன?

இச்செயலுக்கு காரணம், இத்தாவரத்தில் இருக்கும் இரண்டு மிக முக்கிய வேதிப்பொருளாகும், அவை 
  1. மிமோபுதின் (Mimopudine) 
  2. பொட்டாசியம் உப்பு உள்ள க்ளுகோபைரனோசில் ஜென்சேட் (Potassium 5-O-beta-D-glucopyranosylgentlsate)
மிமோபுதின் (Mimopudine) என்ற வேதிப்பொருள் இலையை திறப்பதற்கும், பொட்டாசியம் உப்பு உள்ள க்ளுகோபைரனோசில் ஜென்சேட் (Potassium 5-O-beta-D-glucopyranosylgentlsateஎன்ற வேதிப்பொருள் இலையை மூடுவதற்கும் உதவுகிறது.


மருத்துவ  குணங்கள்:

தொட்டா சிணுங்கி, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த நோய்களுக்கு அருமருந்தாகும். சர்க்கரை நோய்க்கு தோட்டா சிணுங்கி இலைச்சாறு 30 மி.லி. வீதம் காலை மாலை என்று இருவேளைக்கு இரண்டு மாதம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும். இரத்த அழுத்தத்திற்கு 15 மி.லி. வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

தொட்டா சிணுங்கி செடியின் வேரை பொடி செய்து பாலில் கலந்து இரண்டு மாதம் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். தொட்டா சிணுங்கி செடி முழுவதையும் தண்ணீர் விட்டு அரைத்து (மாவு மாதிரி), அதை வெள்ளை துணியில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி மற்றும் வீக்கம் குணமாகும். மாவு மாதிரி அரைத்ததை அப்படியே புண்ணில் தடவினால் நாள்பட்ட புண் குணமாகும்.

தூக்கமின்மை நோய்க்கும் இச்செடி நல்ல மருந்தாகும். 5.0 கிராம் அளவு இச்செடியின் இலையை கொதிக்க வைத்து இரவு நேரத்தில் 2 - 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நோய் (Insomnia) குணமாகும்.

ஃபினீயல் சுரப்பி vs தொட்டா சிணுங்கி

ஃபினீயல் சுரப்பி (Pineal Gland) பெருமூளையின் (Cerebrum) அடிப்பாகத்தில் அமைந்துள்ள நாளமில்லா சுரப்பியாகும் (Endocrine gland). இச்சுரப்பி மெலடோனின் (Melatonin) என்ற இயக்குநீரை (Hormone) சுரக்கிறது. இது நம் உடலில் உயிரியல் கடிகாரத்தை (Biological Clock) சீராக வைத்திருக்க உதவுகிறது. அதாவது, மெலடோனினின் வேலையானது ஒரு நாளில் மனிதனை இரவு - பகல் என்று அது அதுக்குரிய வேலையை செய்ய ஞாபகப்படுத்துகிறது (Circadian Rhythm). பொதுவாக தூங்கும் முறையை ஒழுங்கு படுத்துகிறது. இதன் அளவில் ஏதாவது பிரச்சனை என்றால் தூக்கம் வருவதிலும் பிரச்சனை வரும்.


சித்தர்கள் தங்கள் உடலை பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்வதற்கு இச்சுரபிதான் மிக முக்கிய காரணமாகும். பிரபஞ்ச சக்தியை ஆழ்நிலை தியானம் மற்றும் தவத்தின் மூலம் பெற்று பல வருடங்கள் வாழ்ந்துள்ளார்கள்.


அப்படியான ஆழ்நிலை தியானத்தின் போது இச்சுரபி "டைமெத்தில் ட்ரிப்டமைன் (N,N-dimethyltryptamine) என்ற வேதிப்பொருளை சுரக்கிறது. பொதுவாக இவ்வேதிப்பொருள்  உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பொருளாகும். ஏனென்றால் இதை உட்கொண்டால் நம் மனநிலையை ஏகாந்த நிலைக்கு கொண்டு செல்லும்.


இவ்வேதிப்பொருள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் திசுக்களை புதுப்பிக்கவும் உதவுவதாக விஞ்ஞானிகள் 2014 ஆம் ஆண்டு கண்டுபிடித்துள்ளார்கள். இவ்வேதிப்பொருள் இயற்கையாகவே தொட்டா சிணுங்கி செடியின் வேர் பகுதியில் நிறைந்துள்ளது. ஆகவே முறையாக இச்செடியின் வேர் பகுதியை சாப்பிட்டால் நமக்கு டைமெத்தில் ட்ரிப்டமைன் (N,N-dimethyltryptamine) குறைவில்லாமல் கிடைக்கும். இவ்வேதிப்பொருள் நம் உடலில் சேர்வதற்கு முன்பே சில நொதிப்பொருளின் (Enzyme) மூலம் ஜீரணம் ஆகி வெளியேறிவிடும். ஆகையால் முறையாக சாப்பிட வேண்டும்.

மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் தற்பொழுது உள்ள நுகர்வு கலாசாரத்தில் நாம் உபயோகிக்கும் பல பொருட்கள் இச்சுரபியை அழித்துக் கொண்டு வருகிறது. முக்கியமாக பற்பசையில் உள்ள ஃபுளோரைடு (Fluoride) வேதிப்பொருள் ஒரு காரணியாகும். இச்சுரபியானது ஃபுளோரைடு வேதிப்பொருளை தன்னிடத்தில் உறிஞ்சி கொள்வதனால் இதன் செயல்பாடு குறைந்து கொண்டே வருகிறது.

Monday, January 11, 2016

எலுமிச்சை பழம்




எலுமிச்சை பழத்திற்கு தேவக்கனி என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆனால் சித்தா நூலிலிருந்து அறியப்படுவது என்னவென்றால் "எலி" எல்லா பழங்களையும் கடித்து விடும், ஆனால் எலுமிச்சையை மட்டும் தொடவே தொடாது. எனவே எலி மிச்சம் வைத்த பழம் "எலிமிச்சை", அது மருவி "எலுமிச்சை" ஆகியிருக்கும்.

எலுமிச்சையின் புளிப்பு சுவைக்கு காரணம் அதிலிருக்கும் சிட்ரிக் அமிலமாகும். மேலும் வைட்டமின் "சி" (அஸ்கார்பிக் அமிலம்) அதிக அளவில் இருக்கிறது. இது நம் உடல் "இரும்பு சத்தை" உட்கிரகிக்க உதவுகிறது. நாம் ஹோட்டலில் சில சமயம் சிக்கன் ப்ரை (அ) சிக்கன் 65 ஆர்டர் செய்வது வழக்கம். சிக்கனுடன், எலுமிச்சை பழத்துண்டையும் சேர்த்து கொடுப்பார்கள், ஏன்? 



ஏனெனில் சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை. ஆகையால் சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின்-சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டுச் சாப்பிட வேண்டும்.