Sunday, May 22, 2016

முடக்கத்தான் கீரை


முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாகும். மழை காலங்களில் மட்டுமே கிடைக்கும் கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் எல்லோருடைய வீட்டு கொல்லைப் புறங்களிலும் இது படர்ந்து கிடக்கும்.

கை கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதனால் இக்கீரைக்கு முடக்கு + அற்றான் = முடக்கற்றான் என்ற காரணப் பெயர் வந்தது. இதுவே நாளடைவில் மருவி முடக்கத்தான் என்று அழைக்கப் படுகிறது. இதனுடைய தாவரப் பெயர் கார்டியோஸ்பெர்மம் ஹலிக்காகேபம் (Cardiospermum helicacabum) என்பதாகும். இதை ஆங்கிலத்தில் பலூன் வைன் (Balloon vine) என்றும் அழைப்பார்கள். 

இதனுடைய மருத்துவ குணத்திற்கு காரணம் இதில் பொதிந்துள்ள வேதிப் பொருள்கள் ஆகும். அவையாவன அபிஜெனின் (Apigenin), லூட்டியொலின் (Luteolin), கார்டியோஸ்பெர்மின் (Cardiospermin), ஸ்கொபாலெடின் (Scopoletin), அம்பெல்லிபெரோன் (Umbelliferone) மற்றும் பல.




முடக்கத்தான் கீரையை மாதம் இருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சிறிது கசப்பு சுவையுடையது, ஆனால் சமைத்து சாப்பிட்டால் இதன் கசப்பு சுவை அவ்வளவாக தெரியாது. இதை உணவில் தோசையாகவோ அல்லது துவையல் செய்தோ சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

இக்கீரை மூட்டுகளில் தங்கியிருக்கும் யூரிக் ஆசிட் (Uric acid) என்ற காரணியை கரைத்து சிறுநீர் மூலம் வெளியேற்றிவிடும். அவ்வாறு செய்யும் பொழுது உடலுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற உப்புக்களை தங்க வைத்து விடுகிறது, அதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை.

முடக்கத்தான் கீரையை கொதிக்க வைத்து உண்ண வேண்டாம், ஏனெனில் கொதிக்க வைக்கும் பொழுது அதிலுள்ள மருத்துவகுண வேதிப்பொருள் அழிந்துவிடும்.

ஆயுர்வேதம்


தமிழ்நாட்டில் தற்பொழுது ஆறு வகையான மருத்துவ முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன அவை 
  1. தமிழர் மருத்துவ முறை (சித்த மருத்துவம்)
  2. ஆங்கிலேயர் மருத்துவ முறை (அலோபதி மருத்துவம்)
  3. ஆரியர் மருத்துவ முறை (ஆயுர்வேத மருத்துவம்)
  4. முகமதியர் மருத்துவ முறை (யுனானி மருத்துவம்)
  5. இயற்கை மருத்துவ முறை (இயற்கை மருத்துவம்)
  6. ஜெர்மானிய மருத்துவ முறை (ஹோமியோபதி மருத்துவம்)
ஆயுர்வேதத்திற்கு முதலாசிரியர்கள் தேவதாசர் (தன்வந்திரி), சிசிருதர் என்பவர்களே. இவர்கள் இருவரும் ஒரு காலத்தவர்கள். கி.மு 6000 ஆண்டுகளில் வாழ்ந்தவர்கள். சிசிருதர் தேவதாசரின் சிஷ்யர் ஆவார். 

ஆயுர்வேதமானது 100  அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொறு அத்தியாயமும் 100 சுலோகங்களால் அமைக்கப் பட்டிருக்கிறது. 

ஆயுர்வேதம் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை பின்வருமாறு 
  1. சல்லியம் (இரண வைத்தியம்)
  2. சாலக்கியம் (கழுத்துக்கு மேற்பட்ட வியாதிகள்)
  3. காயம் (மற்ற உடலின் வியாதிகள்)
  4. பூதம் (பிசாசு குணங்கள்)
  5. கௌமாரம் (குழந்தை வைத்தியம்)
  6. ஆகதம் (விஷங்களைப் பற்றியது)
  7. இரசாயனம் (இளமையாக்கல்)
  8. வசீகரணம் (வீரிய விருத்தி)
சிசிருதர், விசுவாசமித்திரரின் மூத்த பிள்ளையுக்கு அடுத்த பிள்ளையாவார். இவர்கள் 7 பேர் அண்ணன் தம்பிகள் ஆவர். மூத்த பிள்ளையை தவிர ஏனையோர் தேவதாசரிடம் ஆயுர்வேதம் கற்றுக் கொண்டார்கள்.

சிசிருதர், சிசிருத சம்ஹிதை என்ற நூலை எழுதினார். இவர் இரண வைத்தியத்தில் (சர்ஜரி) நிபுணர். சம்ஹிதை என்றால் மஞ்சரி என்ற பொருள். அதாவது அவருக்கு முன்னிருந்த வைத்தியர்களுடைய அபிப்பிராயங்களை எல்லாம் எடுத்து அக்காலத்துக்கு தகுந்தபடி ஒழுங்குபடுத்தி நூல் செய்வதாகும். 

Wednesday, May 18, 2016

சோனுநிகம் சாலையோர வீடியோ



சோனுநிகம் பிரபல பாலிவுட் பாடகர். இவர் தமிழிலும் சில பாடல்கள் பாடியுள்ளார். அண்மையில் மும்பை வீதியில் பிச்சைகாரன் வேஷத்தில் அமர்ந்து பாட்டு பாடினார். அவர் வேஷம் போட்டு அமர்ந்து இருந்ததனால் ஒருவரும் கவனிக்கவில்லை. அவரவருக்கு அவரவர் வேலை, அதனால் ஏது நேரம் மனமயங்கும் பாடலை நின்று கேட்டு ரசிப்பதற்கு.............?

இதுவே கச்சேரியில் சோனுநிகம் பாடுகிறார் என்றால் ஆயிரக்கணக்கில் கொடுத்து ரசிப்பார்கள். இதுதானே உண்மை .....! போலியான உலகம்.

ஆனால் ...ஒரு இளைஞர் அவர் அருகில் வந்து அவரை பாராட்டி விட்டு, அவரிடமே நீங்கள் நன்றாக பாடுகிறீர்கள், உங்கள் பாடலை நான் பதிவு பண்ணிக்கலாமா? என்று அனுமதி கேட்டு பாடலை பதிவு பண்ணிக் கொள்கிறார். பாடல் பாடி முடிந்தவுடன் சோனுநிகம் கிளம்ப எத்தனிக்கும்போது அவரிடம் 12 ரூபாயை கொடுத்து நீங்கள் காலை உணவு சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள், சாப்பிட வைத்து கொள்ளுங்கள் என்று சொல்வது ...உண்மையில் மனதை வருடியது.

இந்த அனுபவத்தைப் பற்றி அவர் கூறுவது ....

நான்தான் அதே குரல்தான்...உடையிலும் தோற்றத்திலும் தான் வித்தியாசம் காண்பித்தேன். அத்தனை மனிதர்கள் பார்த்து கடந்து போனாலும் ஒருவர் வந்து நீங்க சாப்பிட்டீங்களா? என்று அன்பாக கேட்டு 12 ரூபாயை கொடுத்த பொழுது அத்தனை மகிழ்ச்சி ..! லட்சக்கணக்கில் சம்பாதித்த போது கிடைக்காத சந்தோசம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நம்மைச் சுற்றி நடக்கும் பல நல்ல விஷயங்களை நாம் கவனிக்க தவறி விடுகிறோம்....... பாராட்டவும் மறந்து விடுகிறோம்!

Tuesday, May 17, 2016

நெய்

'
"நெய்யில்லா உண்டி பாழ்" என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும்.

எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட நெய் எவ்வாறு தயாரிக்கப் படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.



பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்கு பின் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்து விடும். இதனை சட்டியில் வைத்து காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரிந்து, வாசனை உண்டாகும். இதுவே நெய்யாகும். இதனை வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். 

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருந்து கெடாமல் பாதுகாக்க நெய்யை பயன்படுத்தி வந்துள்ளனர். ஒரு தேக்கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

மொத்த கொழுப்பு = 99.5%

நிறைவுற்ற (பூரித) கொழுப்பு அமிலம் (Saturated Fatty Acids) = 77-81%
ஒற்றை அபூரித கொழுப்பு அமிலம் (Mono Unsaturated Fatty Acids) = 16-17%
நிறைவற்ற (அபூரித) கொழுப்பு அமிலம் (Poly Unsaturated Fatty Acids) = 3-6%




ஒமேகா கொழுப்பு அமிலம் (ω -fatty acids) என்றால் என்ன?

கொழுப்பு அமிலத்தில் முதல் கார்பன் அணு முனை ஒமேகா என்று அழைக்கப்படும். அபூரித இணைப்பு எந்த கார்பன் அணுவில் ஆரம்பிக்கிறதோ அந்த எண்ணை குறித்து பெயரிடப்படும். 


நெய்யை எவ்வாறு உணவில் பயன்படுத்த வேண்டும்?

"நெய் உருக்கி மோர் பெருக்கி ....."

நெய்யை இளஞ்சூட்டில் நன்றாக உருக்கி சுடுசாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து சூட்டை தணிக்கும். மலச்சிக்கலை போக்கும். வாத பித்த கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
  • ஞாபக சக்தியை தூண்டும் 
  • சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும் 
  • கண் பார்வையை கூட்டும்   
குடற்புண் குணமாக 

குடற்புண் என்பது சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருந்தாலோ அல்லது பட்டினி கிடந்தாலோ ஏற்படும். குடலில் உள்ள ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புற சுவரை புண்ணாக்கி விடுகிறது. மேலும் வாயு கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்து கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை பொருள் உபயோகிப்பவர்களுக்கும், அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் குடற்புண் உண்டாகிறது. இதனால் வாயிலும் புண் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இது போன்ற உபாதை உள்ளவர்கள், நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடற்புண் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும் மற்றும் மலச்சிக்கல் நீங்கும், ஜீரண சக்தியை தூண்டும்.

Monday, May 16, 2016

டாடா குடும்பம்

நான் வியந்து பார்க்கும் பல ஆளுமைகளில் மதிப்பிற்குரிய இரத்தன் டாடா அவர்களும் ஒருவர், என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மற்றும் முன்மாதிரியானவர். அதனால் அவரைப் பற்றி, அவரின் குடும்பத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பின்வரும் செய்திகள் இணையத்தில் எடுக்கப்பட்டது.




TATA Group