Friday, October 13, 2017

அறிஞர் அண்ணாதுரை மந்திரிசபை


அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மார்ச் 6, 1967 முதல் பிப்ரவரி 3, 1969 வரை இருந்தார். அப்பொழுது அவருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டார்கள்.


சட்டசபையின் சபாநாயகராக திரு சி பா ஆதித்தனர் அவர்களும் துணை சபாநாயகராக திரு புலவர் க கோவிந்தன் அவர்களும் இருந்தனர்.


ஆளுநராக மதிப்புக்குரிய திரு சர்தார் உஜ்ஜல் சிங் அவர்கள் இருந்தார்.


திரு அண்ணா அவர்கள் 10 அமைச்சர்களை தன்னுடைய அமைச்சரவையில் வைத்து கொண்டு நல்லாட்சியை கொடுத்தார். ஆனால் இப்பொழுது 33 அமைச்சர்களை கொண்டு முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியை நடத்த திணறிக்கொண்டு இருக்கிறார். யார் எப்பொழுது தன்னுடைய அமைச்சரவையை கவிழ்த்து விடுவார்களோ என்ற பயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டு இருக்கிறார். ஆட்சிக்கு முட்டுக்கட்டை கொடுப்பதற்கு திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுத்து புது அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார்.

வாழ்க தமிழ் நாடு! 

ஒரு செய்தி 

திரு NV நடராசன் அவர்களின் புதல்வர் திரு NVN சோமு 1996 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தி மு க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிப்பிற்குரிய பிரதமர் திரு தேவகவுடா அவர்கள் அமைச்சரவையில் இராணுவத்துறையின் இணை அமைச்சராக பணியாற்றி உள்ளார். ஆனால் துரதிஷ்டமாக நவம்பர் 14, 1997 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியானார். அப்பொழுது மதிப்பிற்குரிய திரு IK குஜ்ரால் அவர்கள் பிரதமராக இருந்தார்.

திரு NVN சோமுவின் மகள் திருமதி டாக்டர் கனிமொழி சோமு அவர்கள் தி மு க வின் மருத்துவ அணி செயலாளராக தற்பொழுது உள்ளார்.


ஒரு கேள்வி 

தி மு க உருவானதற்கு 5 தலைவர்களே முக்கிய காரணம், அவர்கள் திரு அண்ணாதுரை, திரு நெடுஞ்செழியன், திரு EVK சம்பத், திரு மதியழகன், திரு NV நடராசன், இவர்களை தான் ஐம்பெரும் தலைவர்கள் என்று அழைப்பார்கள். இப்படி வரலாறு இருக்கும் போது எப்படி திரு கலைஞர் கருணாநிதி அவர்கள் தி மு க வின் தலைவரானார்?

அறிஞர் அண்ணாவின் கோட்பாடு 

கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு 

அறிஞர் அண்ணாவின் ஆங்கில புலமை 

அமெரிக்காவில் உள்ள யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பொழுது மாணவர்கள் நிறைய கேள்வி கேட்டனர். அதில் ஒரு மாணவர் because என்ற வார்த்தை தொடர்ந்து 3 மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியத்தை சொல்லச் சொன்னார். திரு அண்ணா அவர்கள் சற்றும் தாமதிக்காமல் நொடிப் பொழுதில் சொன்னார் 

"No sentence ends with because because because is a conjunction"

என்ன புலமை ஆங்கிலம் மொழியில் ....!

Tuesday, October 10, 2017

யானை நெருஞ்சில் (Pedalium murex)


இத்தாவரம் யானை நெருஞ்சில் அல்லது யானை வணங்கி என்று அழைக்கப்படும். இதில் இருக்கும் முட்களைப் பார்த்து யானைகள் பயப்படும் என்பதனால் இப்பெயர் பெற்றது. 

இந்த மூலிகைச் செடி பயிர் நிலத்தில் நன்றாக வளரக்கூடியது, களை என்று தான் சொல்வோம், ஆனால் இதில் அளப்பரிய மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் இலை சதைப் பாங்காக இருக்கும். தண்ணீரில் போட்டால் அந்த நீர் உடனே கெட்டித்தன்மை ஆவதை பார்க்கலாம். இச்செடியில் உள்ள காய், பூ, இலை, தண்டு, வேர் என அனைத்தும் மருத்துவத்திற்கு உபயோகமாகும். அதனால்தான் இச்செடியை காயகல்ப மூலிகை என்று சொல்வார்கள்.

பொதுவாக தமிழ் நாட்டில் இம்மூலிகையை சிறுநீரகக் கல்லை கரைப்பதற்குக் கொடுப்பார்கள். இச்செடியின் சாற்றை 8 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் கல் கரைந்து சிறுநீர் மூலம் வெளியேறிவிடும்.

எப்படி தயாரித்து சாப்பிடுவது?
  1. யானை நெருஞ்சில் செடியை சமூலமாகவும், அத்துடன் மூச்சிரட்டை செடி (ஒரு கைப்பிடி அளவு) மற்றும் சிறுகண் பீளை (ஒரு கைப்பிடி அளவு) மூன்றையும் நன்றாக அரைத்து அதில் 2 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து 500மிலி ஆனவுடன் இறக்கி விடவும். இளஞ்சூட்டில் வடிகட்டி, பெரியவர்கள் 250மிலி காலை மாலை என இரு வேளை தொடர்ந்து 8 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அதன் பலனை நன்றாக உணர்வீர்கள்.
  2. யானை நெருஞ்சில் இலையை புளிச்ச நீரில் (பழைய சோற்று நீர்) ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த புளிச்ச நீரை குடித்தால் இதே பயனை அடையலாம். 
  3. வீட்டில் ரசம் பண்ணும்பொழுது அதில் இச்செடியின் இலைகளை போட்டுத் தயாரித்தால் அதற்கு பெயர் யானை நெருஞ்சில் ரசம். இதுவும் சிறுநீர் கல்லைக் கரைப்பதற்கு மிகவும் பயன்படும்.
இவ்வாறு மூன்று வகைகளில் இச்செடியை பயன்படுத்தலாம்.

இம்மூலிகையின் மருத்துவக்குணப் பொருட்கள்



எளிதில் கிடைக்கும் இம்மூலிகைகளை பயன்படுத்தி நம்முடைய ஆரோக்கியத்தை பேணிக்காப்போம்.

Sunday, October 8, 2017

சிறுநீரகக் கல் - மருத்துவம்


ஒருவருக்கு சிறுநீரகக் கல் பிரச்சனை ஏற்பட்டால் அதனால் ஏற்படும் வலி சொல்லி மாளாது. இந்தியாவில் 10% ஆண்களுக்கும் 4% பெண்களுக்கும் இப்பிரச்சனை உள்ளது. இதை ஆங்கிலத்தில் யூரோலித்தியாசிஸ் (Urolithiasis/Nephrolithiasis) என்று அழைப்பார்கள். மேற்கு உலகத்தில் இதன் பாதிப்பு இந்தியாவை விட மிக மிக அதிகம்.

இது எதனால் ஏற்படுகிறது?

அறிவியலின் கூற்றுப்படி நாம் மிக குறைந்த அளவு தண்ணீர் எடுத்து கொள்வதாலும், முறையற்ற உணவு பழக்க வழக்கத்தாலும் மற்றும் அதிக மனஅழுத்தத்தாலும் கூட இப்பிரச்சனை ஏற்படுகிறது.


உணவு வகைகளில் நாம் ஆக்சலேட் (Oxalate) அதிகம் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்வது தான் இதற்கு முக்கிய காரணம். இது பொதுவாக உருளை கிழங்கு, ருபார்ப் (Rhubarb), பீன்ஸ், ஸ்பீனாச் (Spinach) மற்றும் சாக்லேட் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. அதனால் இப்பிரச்சனை உள்ளவர்கள் இது போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.


இது மட்டும் இல்லாமல் அடிக்கடி டீ குடிப்பதனாலும் இப்பிரச்சனை வரும். ஏனென்றால் டீ அதிக அளவு நீரை உடலில் இருந்து வெளியேற்றிவிடும். அதனால் நம்முடைய சிறுநீர் மிக அடர்த்தியாகி கல் உண்டாகிறது. சிறுநீர் கல் என்பது கால்சியம் ஆக்சலேட் (Calcium oxalate), யூரிக் ஆசிட் (Uric acid) போன்றவற்றால் ஆனது. 


சிறுநீரகக் கல் பல அளவுகளில் இருக்கும். பெரிய அளவில் இருந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலியை தாங்கவே முடியாது.


அப்படியானால் எது மாதிரியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்? 

நம் உணவில் சிட்ரிக் அமிலம் (Citric acid) அதிகம் உள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளவேண்டும். இது பொதுவாக பழங்களில் அதிகம் காணப்படும்.

                            
சித்த மருத்துவத்தில் எப்படி இப்பிரச்சனையை போக்குவது?

சித்த மருத்துவத்தில் மூன்று மூலிகைகளை இதற்கு பயன்படுத்துகிறார்கள், அவை ...
  1. மூக்கிரட்டை (Boerhavia diffusa
  2. சிறுகண் பீளை (Aerva lanata)
  3. யானை நெருஞ்சில் (Pedalium murex)
இந்த மூலிகைகளை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்.

Sunday, September 10, 2017

சித்த மருத்துவத்தில் சிறுநீர் சோதனை



சித்த மருத்துவத்தில் சிறுநீர் சோதனை பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்....

காலையில் எழுந்தவுடன் கழிக்கும் சிறுநீரை ஒரு கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டு உற்றுப் பாருங்கள்.
  • எண்ணெய் துளி பாம்பு போல் நெளிந்து காணப்பட்டால் உங்களுக்கு வாதம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
  • எண்ணெய் துளி மோதிரம் போல் வட்டமாக காணப்பட்டால் உங்களுக்கு பித்தம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
  • எண்ணெய் துளி முத்து போல் அப்படியே நின்றால் உங்களுக்கு கபம் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
அதுபோல்
  • எண்ணெய் துளி வேகமாக சிறுநீரில் பரவினால் நோய் விரைவில் குணமாகும் 
  • எண்ணெய் துளி அப்படியே நின்றால் நோய் குணமாகத் தாமதமாகும்.
  • எண்ணெய் துளி கீழே அமிழ்ந்தால் நோய் குணமாகாது என்று புரிந்து கொள்ளலாம்.

இதுமாதிரி சிறுநீரின் நிறம் மற்றும் மணம் ஆகியவற்றின் மூலம் நோயின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

Friday, September 1, 2017

கட்டுக்கொடி


கட்டுக்கொடி ஒரு ஏறு கொடியினம், முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக்கொடி என இரண்டு வகைப்படும். இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இனவிருத்தியாகும். விதை மூலமும் இனவிருத்தி செய்யப்படும்.

மருத்துவப் பயன்கள்:
  1. குளிர்ச்சியூட்டியாகவும், உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.
  2. பாக்களவு இலையை மென்று தின்றால் இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் குறையும்.
  3. இலை, வேப்பங்கொழுந்து சமஅளவு அரைத்து காலை மட்டும் எடுத்து வந்தால் நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம் போன்ற நோய்கள் குணமாகும்.
  4. இலையுடன் மாம்பருப்பும் சமமாக அரைத்து பால், சர்க்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். 
  5. சிறிதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாதநோய், கீல் நோய் குணமாகும்.
  6. இலைச்சாற்றை  சர்க்கரை நீரில் கலந்து வைத்தால் சிறிது நேரத்தில் ஜெல்லி போல் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.
  7. வேரையும், கழற்சி பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு வரும் வயிற்றுவலி தீரும்.
இதிலுள்ள மருத்துவ குணப்பொருட்கள்  



கழற்சிக்காய் + விதை (சித்தா மருந்தகத்தில் கழற்சிப் பருப்பு கிடைக்கும்)