Sunday, October 22, 2017

சிறுகண் பீளை - Aerva lanata


சிறுகண் பீளை ஒரு அற்புதமான மூலிகை, இதற்கு பூளைப்பூ, பொங்கல் பூ, சிறு பீளை என்று பல பெயர்கள் உண்டு. பொதுவாக தமிழ் நாட்டில் பல பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகையிலும்  சில சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப் படுகிறது. 

பொங்கல் பண்டிகையின் போது நம் வீடுகளில் சிறுகண் பீளை, ஆவாரை, வேப்பிலை ஆகிய மூன்றையும் கட்டி வைப்போம், இதற்கு காப்பு கட்டு என்று பெயர், மார்கழி மாதம் கடைசி தேதியில் செய்வோம். பொங்கல் முடிந்தவுடன் அதை தூக்கி வீசிவிடுவோம். ஏன் என்றால் இந்த மூலிகைகளின் மகத்துவம் நமக்கு தெரிவதில்லை, அதுபோல் நம் வீடுகளில் இதை ஏன் கட்டினோம் என்றும் புரிந்து கொள்வதில்லை. இந்த மூலிகைகள் விஷக்கடிக்கு அருமருந்தாகும். 

சிறுகண் பீளை சிறுநீர் கல்லை உடைத்து வெளியேற்றும் ஆற்றல் உடையது. அவ்வாறு செய்வதனால் நமக்கு அறுவை சிகிச்சை தேவை படுவதில்லை, இதைத்தான் மதிப்பிற்குரிய நம்மாழ்வார் அவர்கள் "அறுவை சிகிச்சை மூலிகை" என்று அழைப்பார்.

இது மானாவாரியாக அனைத்து பகுதியிலும் விளையக்கூடிய பயிராகும். மார்கழி, தை மாதத்தில் இதன் விளைச்சல் அதிகம் இருக்கும். இந்த மூலிகையை பற்றி பதார்த்த குணப்பாடத்தில் (291) குறிப்பிடப் பட்டுள்ளது.

"நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை 
பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும் 
பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை 
யாமிது கற்பேதி யறி"

இதுபோல் தேரையர் அவர்கள் தன்னுடைய குணவாகடத்திரட்டில் இம்மூலிகையை பற்றி குறிப்பிட்டுள்ளார் 

"சுக்கும் சிறுபீளை கானெரிஞ்சி மாவிலங்கை 
விக்கும் பேராமுட்டி வேரதனில் வொக்கவே 
கூட்டிக் கியாழமிட்டுக் கொள்ளவே கல்லடைப்பு
காட்டிற் கழன்றோடுங்காண்"

எவ்வாறு பயன்படுத்துவது?
  1. சிறுகண் பீளையை சமூலமாக (முழுச்செடி) எடுத்து நன்றாக கழுவி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அரைத்து  சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இச்சாற்றை 50 மிலி வீதம் காலை மாலை என பருகி வந்தால் சிறுநீர் கல்லடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் விரைவில் குணமாகும்.
  2. சிறுகண் பீளை குடிநீராகவும் அருந்தலாம். 
குடிநீர் எவ்வாறு தயாரிப்பது?

சிறுகண் பீளை சமூலம், நெருஞ்சி சமூலம், மாவிலிங்க வேர், பேராமுட்டி வேர் ஆகியவற்றை தலா 25 கிராம் எடுத்து நசுக்கி அவற்றை 4 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அது 1 லிட்டராக சுண்டிய பின்பு அதை ஆற வைத்து, வடிகட்டி ஒரு நாளைக்கு 4 அல்லது 5 தடவை குடித்து வந்தால் சிறுநீர் கல் கரைந்து வெளியேறிவிடும்.

சிறுபீளையில் இருக்கும் மருத்துவகுணப் பொருட்கள் 



எளிதில் கிடைக்கும் இவ்வகையான மூலிகை செடிகளை பயன்படுத்தி நம்முடைய ஆரோக்கியத்தை பேணிக் காப்போம்.

Tuesday, October 17, 2017

இந்திய ரூபாயின் குறியீடு


அமெரிக்கா (💲), இங்கிலாந்து (£), ஐரோப்பிய ஒன்றியம் (€), ஜப்பான் (¥) போன்ற நாடுகளில் இருக்கும் பணத்திற்கு குறியீடு இருப்பது போல் இந்திய ரூபாய்க்கும் குறியீடு வேண்டும் என்று திரு மன்மோகன் சிங் தலைமையில் ஆன காங்கிரஸ் அரசாங்கம் மார்ச் 5, 2009 அன்று இந்தியா முழுவதுக்குமான ஒரு போட்டியை அறிவித்தது. அப்போது நிதி மந்திரியாக இருந்த திரு பிரணாப் முகர்ஜி அவர்கள் குறியீடு நம் இந்திய கலாசாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்று சொன்னார்.

இப்போட்டியில் இந்தியா முழுவதும் 3331 பேர் கலந்து கொண்டார்கள். அவர்களில் இருந்து 5 பேர் உடைய வடிவமைப்பு  மட்டும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.


படத்தில் இருப்பவர்கள் ஷாரூக் J ஈரானி, KK சிபின், நந்திதா கோரியா மெஹரோத்ரா, D உதயக்குமார், ஹிதேஷ் பத்மஷாலி. இவர்கள் தான் அந்த 5 பேர்.

இவர்கள் வடிவமைத்த ரூபாய் குறியீடுகள் 


இந்த குறியீடுகளில் திரு உதயக்குமார் வடிவமைத்த ரூபாய் குறியீடு தான் வெற்றி பெற்றது. இந்த அறிவிப்பை இந்திய அரசாங்கம் ஜூலை 15, 2010 அன்று வெளியிட்டது.


போட்டியில் கலந்து கொள்ளும்போது உதயக்குமார் IIT மும்பை முதுகலை மாணவர், தற்போது IIT கவுகாத்தியில் இணை பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்த ரூபாய் குறியீட்டுக்கு இவர் கொடுத்த விளக்கம் 


Sunday, October 15, 2017

கர்ம வீரர் காமராசர் மந்திரிசபை


பெருந்தலைவர் திரு காமராசர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக 3 முறை இருந்துள்ளார்.

முதல் முறை: ஏப்ரல் 13, 1954 - மார்ச் 30, 1957
இரண்டாவது முறை: ஏப்ரல் 1, 1957 - மார்ச் 1, 1962
மூன்றாவது முறை: மார்ச் 3, 1962 - அக்டோபர் 2, 1963

திரு ராஜாஜி அவர்களுக்கு பிறகு (ஏப்ரல் 10, 1952 - ஏப்ரல் 12, 1954) திரு காமராசர் அவர்கள் முதன்முறையாக முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இரண்டாவது முறை 5 ஆண்டுகள் முழுவதுமாக பதவியில் இருந்து மிகச்சிறப்பாக பணியாற்றினார். மூன்றாவது முறை 1.5 வருடம் மட்டுமே முதல்வராக இருந்தார். அதன் பின்பு கட்சி பணிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 1964 முதல் 1967 வரை இருந்துள்ளார்.


திரு காமராசர் அவர்கள் இரண்டாவது முறை முதல்வராக இருந்த பொழுது தன்னையும் சேர்த்து மொத்தம் 8 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை அமைத்தார். இந்த அமைச்சர்கள் அனைவரும் மிக சிறந்த திறமைசாலிகள் மற்றும் நேர்மையானவர்கள். இவர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் மிகச் சிறந்த பொற்கால ஆட்சியை கொடுத்தார். 

இந்த ஆட்சியில் தான் எண்ணற்ற திட்டங்கள் தமிழ் நாட்டில் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், அணைகள் என பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இன்றளவும் பேர் பெற்று நிற்கின்றன. இப்பொழுது வரை பெருந்தலைவர் ஆட்சியை தான் எல்லோரும் பொற்கால ஆட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்,

இவருடைய அமைச்சரவையில் திரு U கிருஷ்ணாராவ் அவர்கள் சபாநாயகராகவும், திரு B பக்தவத்சல நாயுடு அவர்கள் துணை சபாநாயகராகவும் பணியாற்றி உள்ளார்கள்.

கவர்னர்களாக 3 பேர் இருந்துள்ளார்கள். திரு AJ ஜான், திரு PV ராஜமன்னார், திரு பிஷுராம் மேத்தி போன்றவர்கள் ஆவர்.


பெருந்தலைவர் பள்ளிகளில் மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்து அதிக மாணவர்கள் படிப்பறிவு பெற ஊன்றுகோலாக விளங்கினார். அதனால்தான் திரு காமராசர் அவர்களை கல்விக்கு கண் கொடுத்த கடவுளாக மக்கள் போற்றுகின்றனர்.

காமராசர் என்றாலே எளிமை - நேர்மை - கனிவு 

வாழ்க காமராசர் புகழ்!

Friday, October 13, 2017

அறிஞர் அண்ணாதுரை மந்திரிசபை


அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக மார்ச் 6, 1967 முதல் பிப்ரவரி 3, 1969 வரை இருந்தார். அப்பொழுது அவருடன் சேர்த்து மொத்தம் 10 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டார்கள்.


சட்டசபையின் சபாநாயகராக திரு சி பா ஆதித்தனர் அவர்களும் துணை சபாநாயகராக திரு புலவர் க கோவிந்தன் அவர்களும் இருந்தனர்.


ஆளுநராக மதிப்புக்குரிய திரு சர்தார் உஜ்ஜல் சிங் அவர்கள் இருந்தார்.


திரு அண்ணா அவர்கள் 10 அமைச்சர்களை தன்னுடைய அமைச்சரவையில் வைத்து கொண்டு நல்லாட்சியை கொடுத்தார். ஆனால் இப்பொழுது 33 அமைச்சர்களை கொண்டு முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியை நடத்த திணறிக்கொண்டு இருக்கிறார். யார் எப்பொழுது தன்னுடைய அமைச்சரவையை கவிழ்த்து விடுவார்களோ என்ற பயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டு இருக்கிறார். ஆட்சிக்கு முட்டுக்கட்டை கொடுப்பதற்கு திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுத்து புது அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார்.

வாழ்க தமிழ் நாடு! 

ஒரு செய்தி 

திரு NV நடராசன் அவர்களின் புதல்வர் திரு NVN சோமு 1996 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக தி மு க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிப்பிற்குரிய பிரதமர் திரு தேவகவுடா அவர்கள் அமைச்சரவையில் இராணுவத்துறையின் இணை அமைச்சராக பணியாற்றி உள்ளார். ஆனால் துரதிஷ்டமாக நவம்பர் 14, 1997 ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலியானார். அப்பொழுது மதிப்பிற்குரிய திரு IK குஜ்ரால் அவர்கள் பிரதமராக இருந்தார்.

திரு NVN சோமுவின் மகள் திருமதி டாக்டர் கனிமொழி சோமு அவர்கள் தி மு க வின் மருத்துவ அணி செயலாளராக தற்பொழுது உள்ளார்.


ஒரு கேள்வி 

தி மு க உருவானதற்கு 5 தலைவர்களே முக்கிய காரணம், அவர்கள் திரு அண்ணாதுரை, திரு நெடுஞ்செழியன், திரு EVK சம்பத், திரு மதியழகன், திரு NV நடராசன், இவர்களை தான் ஐம்பெரும் தலைவர்கள் என்று அழைப்பார்கள். இப்படி வரலாறு இருக்கும் போது எப்படி திரு கலைஞர் கருணாநிதி அவர்கள் தி மு க வின் தலைவரானார்?

அறிஞர் அண்ணாவின் கோட்பாடு 

கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு 

அறிஞர் அண்ணாவின் ஆங்கில புலமை 

அமெரிக்காவில் உள்ள யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பொழுது மாணவர்கள் நிறைய கேள்வி கேட்டனர். அதில் ஒரு மாணவர் because என்ற வார்த்தை தொடர்ந்து 3 மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியத்தை சொல்லச் சொன்னார். திரு அண்ணா அவர்கள் சற்றும் தாமதிக்காமல் நொடிப் பொழுதில் சொன்னார் 

"No sentence ends with because because because is a conjunction"

என்ன புலமை ஆங்கிலம் மொழியில் ....!

Tuesday, October 10, 2017

யானை நெருஞ்சில் (Pedalium murex)


இத்தாவரம் யானை நெருஞ்சில் அல்லது யானை வணங்கி என்று அழைக்கப்படும். இதில் இருக்கும் முட்களைப் பார்த்து யானைகள் பயப்படும் என்பதனால் இப்பெயர் பெற்றது. 

இந்த மூலிகைச் செடி பயிர் நிலத்தில் நன்றாக வளரக்கூடியது, களை என்று தான் சொல்வோம், ஆனால் இதில் அளப்பரிய மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் இலை சதைப் பாங்காக இருக்கும். தண்ணீரில் போட்டால் அந்த நீர் உடனே கெட்டித்தன்மை ஆவதை பார்க்கலாம். இச்செடியில் உள்ள காய், பூ, இலை, தண்டு, வேர் என அனைத்தும் மருத்துவத்திற்கு உபயோகமாகும். அதனால்தான் இச்செடியை காயகல்ப மூலிகை என்று சொல்வார்கள்.

பொதுவாக தமிழ் நாட்டில் இம்மூலிகையை சிறுநீரகக் கல்லை கரைப்பதற்குக் கொடுப்பார்கள். இச்செடியின் சாற்றை 8 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் கல் கரைந்து சிறுநீர் மூலம் வெளியேறிவிடும்.

எப்படி தயாரித்து சாப்பிடுவது?
  1. யானை நெருஞ்சில் செடியை சமூலமாகவும், அத்துடன் மூச்சிரட்டை செடி (ஒரு கைப்பிடி அளவு) மற்றும் சிறுகண் பீளை (ஒரு கைப்பிடி அளவு) மூன்றையும் நன்றாக அரைத்து அதில் 2 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து 500மிலி ஆனவுடன் இறக்கி விடவும். இளஞ்சூட்டில் வடிகட்டி, பெரியவர்கள் 250மிலி காலை மாலை என இரு வேளை தொடர்ந்து 8 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அதன் பலனை நன்றாக உணர்வீர்கள்.
  2. யானை நெருஞ்சில் இலையை புளிச்ச நீரில் (பழைய சோற்று நீர்) ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த புளிச்ச நீரை குடித்தால் இதே பயனை அடையலாம். 
  3. வீட்டில் ரசம் பண்ணும்பொழுது அதில் இச்செடியின் இலைகளை போட்டுத் தயாரித்தால் அதற்கு பெயர் யானை நெருஞ்சில் ரசம். இதுவும் சிறுநீர் கல்லைக் கரைப்பதற்கு மிகவும் பயன்படும்.
இவ்வாறு மூன்று வகைகளில் இச்செடியை பயன்படுத்தலாம்.

இம்மூலிகையின் மருத்துவக்குணப் பொருட்கள்



எளிதில் கிடைக்கும் இம்மூலிகைகளை பயன்படுத்தி நம்முடைய ஆரோக்கியத்தை பேணிக்காப்போம்.